திருச்சி சாதனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாகவும் அதிரும்படி பயமுறுத்தும் விதமாகவும் உருவாகியிருக்கும் ஹாரர் திரைப்படம் ‘யாமன்.’

கதை நன்றாக இருந்தபோதும் படத்துக்கு வருகிற ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதற்கு, படத்தில் நடித்தவர்களே காரணம் என கொதிக்கிறார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கே எஸ் மணிகண்டன். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஒற்றாடல் என்ற திரைப்படத்தை இயக்கிய அனுபவமுள்ளவர்.

அவரிடம் விரிவாக பேசினோம்…

”ஒரு படம்னா அதுக்கு புரமோஷன் ரொம்ப ரொம்ப முக்கியம். ஆனா, படத்துல நடிசச ஹீரோ சக்தி சிவனும் சரி, ஹீரோயினா நடிச்ச காயத்ரி ரெமாவும் சரி புரமோசனுக்கு கூப்பிட்டப்போ வர மறுத்துட்டாங்க. கெஞ்சியும் பார்த்துட்டேன். படத்துல திருச்சி சாதனா முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. அவங்களும் வரலை. புரமோசனுக்கு கூப்பிட்டப்போ மனநிலை சரியில்லைன்னு சொல்றாங்க. படத்துல நடிச்சவங்களே ஒத்துழைப்பு தரலைன்னா எப்படி படம் பத்தி மக்களுக்கு தெரியும்?

அவங்கதான் கண்டுக்கலைன்னு பார்த்தா, டிஸ்ட்ரிபியூட்டர் தரப்புல இருந்தும் எனக்கு பிரச்சனை. இந்த படம் வர்றப்போ அதுகூட மூணு நாலு படங்கள்தான் வருதுன்னு சொல்லியிருந்தாங்க. ஆனா, இன்னைக்கு கிட்டத்தட்ட பத்து படங்கள் ரிலீஸாகுது. அப்படியிருக்கிறப்போ என் படத்துக்கு எப்படி தியேட்டர் கிடைக்கும்னு சொல்லுங்க. இன்னைக்கு சில தியேட்டர்கள்ல சரியான காரணமே சொல்லாம ஷோ கேன்சல் பண்ணிருக்காங்க. சிறுபடங்களுக்கு இதுதான் நிலைமை. இது மாதிரியான சிக்கல்களாலதான் கதையம்சம் நல்லாயிருந்தாலும் சிறு முதலீட்டுப் படங்கள் தோல்விய சந்திக்குது” என்று கொந்தளிப்பாய் பேசியவரிடம்,

‘திருச்சி சாதனா கண்டபடி வீடியோ போடுறவங்க. அவங்கள எப்படி இந்த படத்துல நடிக்க வெச்சீங்க?’ என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது,

”அவங்கள மாதிரியான பிரபலங்கள் நம்ம படத்துல இருந்தா ரீச் அதிகமா இருக்கும்தானே? நடிக்க வைக்கிறது அதுக்காகத்தான். ஆனா, அவங்களை என படத்துல ஆபாசமாக காட்டலை. கெத்தா ஒரு கேரக்டர் பண்ணிருக்காங்க.

அடுத்து, ஆதேஷ்பாலா… அவரு பெரிய படங்கள்லயும் நடிக்கிறாரு. சிறிய படங்கள்லயும் நடிக்கிறாரு. அவருக்கு இந்த படத்துல சின்ன ரோல்தான். அதை தாண்டி அவரை இந்த படத்துல பாடகரா அறிமுகப்படுத்தியிருக்கோம்.  ‘வாடா வாடா வீரகருப்பா’ன்னு ஒரு பாடலை கம்பீரமா பாடியிருக்கார். முதல் முறையா பாடுற மாதிரி இருக்காது. அவர் நடிகரா மட்டுமில்ல; தமிழ் சினிமாவுல பாடகராவும் ஒரு பெரிய இடத்தை பிடிப்பார்” என்றார்.

படத்தை பார்த்தவர்களிடம் கருத்து கேட்டபோது, எல்லோருமே படம் நன்றாக விறுவிறுப்பாக இருப்பதாக சொல்ல, இன்ஸ்டா பிரபலம் ஹரிணியும் படம் பார்த்து கருத்து தெரிவித்தார்…

டைரக்டர் அவருக்கு கிடைச்ச பட்ஜெட்டை வெச்சு முடிஞ்சவரை நல்லா எடுத்திருக்கார். படத்துல கவர்ச்சி, ஆபாசம்னு எதுவும் இல்லை. இன்னைக்கு நிலைமைல அப்படிலாம் இருந்தாதான் ரசிகர்கள் வருவாங்கங்கிற மாதிரி ஒரு சூழ்நிலை இருக்கு. ஆனா, அதையும் தாண்டி நல்ல படங்கள் ஜெயிக்குது. இந்த படமும் ஜெயிக்கணும்.

இந்த படத்தை எல்லாருமே பார்க்கலாம், காஞ்சனா படத்தை விரும்புறாங்கள்ல. அவங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும். படத்துல ரேப் சீங்கூட இருக்கு. ஆனா அதையும் ஆபாசமில்லாமதான் காட்டியிருக்காங்க.

திருச்சி சாதனாக்கா திறமையா தன்னோட நடிப்பை வெளிப்படுத்தியிருக்காங்க” என்றார்.

நடிகர் ராம்குமார் பழனி படத்தை பார்த்து, ”இது ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் மூவி. அருமையா எடுத்திருக்காங்க. ஆதேஷ்பாலா பாடியிருக்கிற பாட்டு நல்லாயிருக்கு. மியூசிக்கும் நல்லாயிருக்கு” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here