பார்த்ததும் பற்றிக் கொள்வது, ஊரெல்லாம் சுற்றித் திரிவது, சந்தர்ப்பம் அமைத்து படுத்துக் கொள்வது என காலம் கெட்டுக் கிடக்கிற சூழலில், ஆணும் பெண்ணும் நண்பர்களாக நெருங்கிப் பழகி, நண்பர்களாகவே தொடர்வது சாத்தியமா இல்லையா என்பதை அலசுகிற படைப்பாக ‘2K லவ் ஸ்டோரி.’
கார்த்திக்கும் மோனியும் நண்பர்கள். வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்துவது அவர்கள் இணைந்து செய்யும் பிஸினஸ். அதன் மூலம் சோஷியல் மீடியாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை சம்பாதித்திருப்பவர்கள். செலிபிரிட்டிகளாக வலம் வரும் அவர்களை, அவர்களின் ஃபாலோவர்ஸ் நட்புக்கு இலக்கணமாக கருதுகிறார்கள்.
இப்படியான சூழலில் அவர்களுடன் இணைகிறார் இளம்பெண் பவித்ரா. அவள் கார்த்திக்குடன் நெருங்கிப் பழக, மோனிக்கு ‘பொஸசிவ்னஸ்’ என்ற எரிச்சல் உணர்வு உருவாகிறது. நாட்கள் போகப்போக கார்த்திக்கும் பவித்ராவும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். மோனி தன்னைப் பார்த்து வெறுப்படைவதால் பவி, கார்த்திக்கிடம் ‘மோனியுடன் பேசுவதை நிறுத்து’ என்கிறாள்.
சில மாதங்கள் மட்டுமே பழகிய பவி, பல வருடங்கள் பழகிய மோனி… கார்த்திக் என்ன முடிவெடுத்தான் என்பதை நோக்கி நகரும் கதையில், மோனிக்கு கார்த்திக் மீது இருந்தது நட்பு மட்டுமா இல்லை காதலும் உண்டா என்ற குழப்பத்தை ஆடியன்ஸுக்கு கடத்தும் காட்சிகளும் உண்டு. ஃபேமிலி சென்டிமென்ட், மோனிக்கு மாப்பிள்ளை தேடும் படலம் என கலந்துகட்டி பயணிக்கும் திரைக்கதையில் எதிர்பாராத அசம்பாவிதமும் எட்டிப் பார்த்து, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பைக் கூட்டுகிறது.
கதாநாயகன் கார்த்திக்காக ஜெகவீர்; தோற்றம் பக்கத்துவீட்டுப் பையன் போலிருக்கிறது. தமிழ் சினிமா ஹீரோக்களை முகம் மறைக்கிற அளவுக்கு தாடியும் மீசையுமாய் பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் தாடி மீசையில்லாமல் அவரைப் பார்ப்பதே வித்தியாசமாக இருக்கிறது. நட்பா காதலா என்ற சூழ்நிலை வரும்போது குழம்பித் தவிக்காமல் முடிவெடுப்பது, தோழிக்காக வரன் தேடுவது என உணர்வுபூர்வமாக வெளிப்பட வேண்டிய காட்சிகளை எளிமையான நடிப்பால் நிறைத்திருக்கிறார்.
மோனியாக மீனாட்சி கோவிந்தராஜன். தன்னுடன் வருடக்கணக்கில் பழகியவனுடன் திடீரென வேறொரு பெண் பிரியமாய் பழகும்போது எட்டிப் பார்க்கும் பொஸசிவ்னஸை மிரட்டலாக வெளிப்படுத்துவதாகட்டும், நட்புக்கும் காதலுக்குமான வித்தியாசம் உணர்ந்து நண்பனையும் அவனது காதலியையும் டிரிப்புக்கு மகிழ்ச்சியாய் அனுப்பி வைப்பதாகட்டும், தோழியின் பேச்சைக் கேட்டு குழம்பித் தவிப்பதாகட்டும் முகபாவங்களின் மாற்றங்களில் கேரக்டரின் தரத்தை உயர்த்தியிருக்கிறார்.
நாயகனின் காதலி பவித்ராவாக வருகிற லத்திகா பாலமுருகனின் கண்கள் காட்சிகளின் தேவைக்கேற்ப அசைந்தாடியிருக்கிறது.
ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் நண்பனாக வருகிற பாலசரவணன், அவர்களின் சுக துக்கங்களில் சரியான விகிதத்தில் பங்கெடுத்துக் கொண்டு, கிடைக்கிற கேப்பில் தன் பாணியில் லேசாக சிரிக்கவும் வைக்கிறார்.
சிங்கம்புலி சுப நிகழ்வில் சண்டை சச்சரவை உருவாக்கி, அதன் விளைவாக விலாவில் அடிபடுவது கிச்சுக்கிச்சு மூட்டுகிறது.
ஜெயப்பிரகாஷ், வினோதினி என தேர்ந்த நடிகர், நடிகைகளோடு நக்கலைட்ஸ் குழுவினர் சிலரும் களமாடியிருக்க, வழக்கமான வழுவழு முகத்தை முள்முள்ளாய் படர்ந்த முடிகளால் மூடியபடி வந்துபோகிறார் ஜி பி முத்து.
ஹீரோவின் நட்பு வட்டத்தில் கலந்து வலம் வருகிற இயக்குநர் அந்தோணி பாக்யராஜுக்கு வலுவான காட்சிகள் இல்லாவிட்டாலும், அவர் கதை கேட்டு எண்ட்ரி கொடுக்கும் விதம் கலகலப்பூட்டுகிறது.
வி எஸ் அனந்தகிருஷ்ணனின் ஒளிப்பதிவு காட்சிகளை மெருகேற்ற, இமான் இசையில் ஃபிரி வெட்டிங் போட்டோ ஷூட் பாடல் உற்சாகமூட்ட, பாடல் காட்சி கலர்ஃபுல்லாக கண்களை நிறைக்கிறது. ‘எதுவரை உலகமோ’ பாடல் கதையோட்டத்தில் கலந்து கடக்கிறது.
2 கே கிட்ஸ் பற்றிய கதை என்கிற பெயரில் குடித்துக் கூத்தடிக்கிற, அபாசமான, அருவருப்பான சமாச்சாரங்களை அப்லோடு செய்யாமல், படம் முழுதும் கண்ணியமான காட்சிகளால் பின்னியிருப்பதை குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டும்.
சிலரால் கெடுக்கப்பட்டாலும், பலரிடமும் நட்பும் சரி, காதலும் சரி இன்றைய காலகட்டத்திலும் அதன் புனிதத்தன்மை குறையாமலிருக்கிறது என்பதை உணர்த்தி, படத்தை புதிய ‘புதுவசந்த’மாகியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
2K லவ் ஸ்டோரி _ நட்புக்கு மரியாதை!
-சு.கணேஷ்குமார்