குறிப்பிட்ட நேரத்தை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக் களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது 3:33. இந்த படத்தை Bamboo Trees Productions ஜீவிதா கிஷோர் தயாரிக்க, நம்பிக்கை சந்துரு எழுதி இயக்க, நடனப் பயிற்சியாளர் ‘பிக்பாஸ்’ சாண்டி நாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். 3.33 படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை குவித்த நிலையில், வரும் அக்டோபர் 21-ம் தேதி இப்படம் தியேட்டரில் வெளியாகிறது. அதையொட்டி 11.10. 2021 அன்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் நாயகன் சாண்டி, ”3:33 நாயகனாக எனது முதல் படம் இது. பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு நிறைய கதை கேட்டேன், ஏதாவது சீரியஸாக பண்ணலாமே என யோசித்துக் கொண்டிருந்த போது, சந்துரு கதை சொல்கிறேன் என்றார். அவர் கதை சொல்லும் போது, அந்த இடத்தையே ரணகளமாக்கி, நடித்து, கதை சொன்னார். இந்தக் கதைக்கு நான் தாங்குவேனா என நினைத்தேன். ஆனால் நான் தான் வேணும் என்றார் சந்துரு. இந்தப்படத்தின் உண்மையான நாயகன் சந்துரு தான். இந்தப்படத்தில் சூப்பராக வேலை வாங்கினார். அவர் நடித்து காட்டியதில் 50 சதவீதம் தான் நான் செய்துள்ளேன். அவருக்குள் ஒரு நடிகரும் இருக்கிறார். நான் நடிக்கிறேன் என சொல்லும் போது, நிறைய பேர் வேண்டாம் என்றார்கள். நீங்கள் கோரியோகிராபி மட்டும் செய்யுங்கள் என்றார்கள். ஆனால் எனக்கு பிரபு மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர் போல் வர வேண்டும் என்பது தான் ஆசை. இந்த படம் ஒரு வீட்டிற்குள்ளேயே வைத்து அருமையாக எடுத்து விட்டார்கள். தயாரிப்பாளருக்கு இப்படம் பெரிய லாபத்தை சம்பாதித்து தரும். இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார்” என்றார்.
நாயகி ஸ்ருதி செல்வம், என்னோட நடிப்பு குறும்படம் மற்றும் ஆல்பங்களில் தான் தொடங்கியது. ஆரம்பத்தில் ‘நீயெல்லாம் ஏன் நடிக்கி?’ என்று தான் கேட்டார்கள். அதையெல்லாம் பாஸிட்டிவாக எடுத்து கொண்டு தான், இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறேன். சாண்டி மிகப்பெரிய ஆதரவை தந்தார். நடிக்கும் போது மிக உதவியாக இருந்தார். இயக்குநர் நம்பிக்கை சந்துரு கதை சொல்லும்போதே படம் பார்த்த மாதிரி இருந்தது. இந்தப் படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் தியேட்டரில் படம் பாருங்கள்” என்றார்.
இயக்குநர் நம்பிக்கை சந்துரு, ”என் வாழ்க்கையில் இயக்குநராக நிறைய முயற்சி செய்தேன். மூன்று படங்கள் அடுத்தடுத்து டிராப் ஆனது. என் குடும்பம் தான் என் மீது நம்பிக்கை வைத்து, இந்தப்படத்தை எடுக்கலாம் என்றார்கள். சொந்த முயற்சி எனும் போது, யாரை வைத்து செய்யலாம் என யோசித்த போது, சாண்டி மாஸ்டர் ஞாபகம் வந்தது. அவரிடம் தயங்கி தான் போனேன், ஆனால் கட்டியணைத்து கதை கேட்டு பாராட்டினார். இசையமைப்பாளரிடம் இது என் வாழ்க்கை என்னிடம் இப்போது பணம் இல்லை உதவுங்கள் என்றேன். கதை கேட்டு என்னை பாராட்டி அருமையான இசையை தந்தார். ஒளிப்பதிவாளர் மீது முதலில் நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் வைத்த முதல் ஷாட்டிலேயே பிரமித்து விட்டேன். கௌதம் சார் இப்படத்தில் வந்தது ஒரு ஆக்ஸிடெண்ட் தான். பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டராக வருகிறார். அந்த கேரக்டருக்கு மிக பெரிய ஆள் வேண்டும் என்று நினைத்தோம், கௌதம் மேனன் சாரை அணுகி கதை சொன்னோம். அவர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார், அவரை இயக்கும் போது பயமாக தான் இருந்தது. ஆனால் ஒரு பெரிய இயக்குநர் போல் அவர் எந்த பந்தாவும் இல்லாமல் நடித்து தந்தார். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
படத்தின் தொழில் நுட்பக் குழு:
தயாரிப்பு – T. ஜீவிதா கிஷோர் (Bamboo Trees Productions)
எழுத்து & இயக்கம் – நம்பிக்கை சந்துரு
ஒளிப்பதிவு – சதீஷ் மனோகரன்
இசை – ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
படத்தொகுப்பு – தீபக் S. துவாரகநாத்
VFX சூப்பரவைசர் – அருண்
ஸ்டண்ட் – ஸ்டன்னர் ஷாம்
மிக்சிங் – ராம்ஜி சோமா
SFX – A. சதீஷ்குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)