Home சினிமா இயக்குநர் தனுஷ் இளமையான கதையம்சம் கொண்ட படம் என்று சொன்னதால் அதற்கேற்றவாறு இளமை ததும்பும் மாற்று...

இயக்குநர் தனுஷ் இளமையான கதையம்சம் கொண்ட படம் என்று சொன்னதால் அதற்கேற்றவாறு இளமை ததும்பும் மாற்று இசையை உருவாக்கினோம்! -‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படவிழாவில் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் பேச்சு

நடிகரும் இயக்குநருமான தனுஷ் எழுதி, இயக்கி ரிலீஸுக்கு தயாராகியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குனர்கள் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, விக்னேஷ் ராஜா,ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருடன் நடிகை சரண்யா பொன்வண்ணன், பாடலாசிரியர் விவேக், கலை இயக்குனர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் “தனுஷ் அவர்கள் இளமையான கதையம்சம் கொண்ட திரைப்படம் என கூறியதால், அதற்கேற்றவாறு இளமை ததும்பும் மாற்று இசையை இப்படத்திற்காக உருவாக்கினோம்.அவருடன் இணைந்து பயணிப்பது சிறப்பான அனுபவம். அவருடைய இயக்கத்தில் முதன்முறையாக இசையமைத்தது புதிய அனுபவமாக இருந்தது” என்றார்.

சரண்யா பொன்வண்ணன், “தனுஷ் என்னை அவரது அம்மாவாகவே நினைப்பவர். படத்தில் நடிக்கும் அனைவரையும் சிறப்பாக கவனித்துக் கொள்ளக் கூடியவர். இன்றும் என்னிடம் ‘நாயகன்’ திரைப்படத்தைப் போல ‘விஐபி’ திரைப்படத்தை பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல எனக்கு இந்த திரைப்படமும் படக்குழுவும் சிறப்பாக அமைந்தது”என்றார்.

எஸ்.ஜே.சூர்யா,” படம் சிறப்பாக வந்துள்ளது, படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். திரைத்துறையில் நடிகர்கள் பற்றாக்குறை உள்ளது; தனுஷ் அவர்கள் ஒரு பட்டாளத்தையே தயார் செய்து அனுப்பி வைத்துள்ளார். ஒரே சமயத்தில் இரு வேறு விதமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனராகவும், ஹாலிவுட் வரைக்கும் சென்ற தலைசிறந்த நடிகராகவும் விளங்குகிறார். படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

அருண் விஜய் “சகோதரர் தனுஷ் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் பன்முகத் திறமையாளர். இளைஞர்களை கவரும் விதத்தில், ஜீ வி பிரகாஷ் சிறப்பான இசையை தந்துள்ளார். படத்தில் நிறைய இளம் திறமையாளர்களுக்கு தனுஷ் வாய்ப்பளித்துள்ளார் அவர்களையும் வாழ்த்துகிறேன்” என்றார்.

பாடலாசிரியர் விவேக், கலை இயக்குனர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி மற்றும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திரங்களில் நடித்த பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் தாங்கள் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்தனர். வரும் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்