Home சினிமா நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தால் கலவையான விமர்சனங்கள் காணாமல் போய்விடும் என்பதை இந்த...

நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தால் கலவையான விமர்சனங்கள் காணாமல் போய்விடும் என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்! -‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ரியோ ராஜ் 

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர் நடித்து வெளியான ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படக்குழுவினர் அந்த வெற்றியைக் கொண்டாடிய நிகழ்வில் நாயகன் ரியோ ராஜ் பேசுகையில், ”பத்திரிகையாளர்களுக்கு என் மனதின் அடியாழத்திலிருந்து மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன் சில படங்களில் நடித்திருக்கிறேன் அதற்கும் என என்னை பாராட்டி இருக்கிறீர்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு பிறகு அனைவரும் ஒருமித்த குரலில் பாராட்டை தெரிவித்தீர்கள். இதிலிருந்து எம்மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சம் உள்ள படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தால் கலவையான விமர்சனங்கள் காணாமல் போய்விடும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன். ஊடகங்களின் பாராட்டும், ரசிகர்களின் பாராட்டுகளும் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறோம்.

இந்தப் படம் ஆண்களுக்கானது என்று தான் நாங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆண்களுக்கு என்ன தேவை? என்பதை சொல்வதற்கு தான் நாங்கள் முயற்சி செய்தோம். ஒரு குடும்பத்தில் குடும்பஸ்தனாக இருக்கும் ஆண்களுக்கு என்ன தேவை என்றால் … ஒரு ஃபர்பெக்ட்டான பார்ட்னர் தேவை என்பதைத்தான் நாங்கள் இந்த படத்தில் சொல்ல முயற்சித்தோம். எல்லா குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்தில் உள்ள கணவனும் மனைவியும் தங்களை ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டு, உச்சகட்ட காட்சியில் வக்கீல் நாராயணன் சொல்வது போல் 50 :50 என்பது கிடையவே கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும் என நினைத்தோம். இது நிறைய பேருக்கு சென்றடைந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. குடும்பத்தில் ஒரு சமயத்தில் கணவன் எழுபது என்றால் மனைவி முப்பதாகவும் …சில தருணங்களில் மனைவி எழுபது என்றால்… கணவன் முப்பதாகவும் இருப்பது தான் யதார்த்தமான நடைமுறை. இதுதான் 50 :50 என்பதை ஏராளமானவர்களுக்கு புரிய வைத்தது இந்த திரைப்படம். இதை நேரில் ரசிகர்கள் எங்களுடன் கலந்துரையாடும் போது தெரிவித்த போது மகிழ்ச்சியாக இருந்தது.

ரசிகர்கள் என்னை தொடர்பு கொண்டு பாராட்டும் போது படம் நன்றாக இருந்தது என்பதை கடந்து நான் இந்த படத்தை என் மனைவியுடன் பார்த்தேன். இருவரும் படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். திரையில் எங்களைப் பார்ப்பது போல் இருந்தது என பாராட்டினார்கள்.‌ இதுவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இதை தெரிந்து கொண்டு திரையரங்கத்திற்கு வந்து இப்படத்தினை கொண்டாடிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் திரையரங்கத்திற்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்த அனைவருக்கும் சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

ஒவ்வொரு படத்தின் வெளியீட்டிற்கு பிறகும் ரசிகர்களின் எதிர்வினையை காண்பதற்காக திரையரங்கத்திற்கு செல்வதுண்டு. அதேபோல் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு திரையரங்கத்திற்கு செல்லும் போது அங்கு அழகான – அப்பாவித்தனமான- மகிழ்ச்சியான- ஏராளமான முகங்களை காண முடிந்தது. நாங்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவது ஜாலியாக இருப்பதற்காகவும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் வருகிறோம் என்பதை சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. ஒவ்வொரு திரையரங்கத்திற்கு செல்லும் போதும் எங்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். இதற்காக இந்தத் தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்த படத்தின் மூலமாக ஆர் ஜே விக்னேஷ் காந்தை ரசிகர்கள் அனைவரும் நடிகராக அதிலும் சிறந்த குணசித்திர நடிகராக ஏற்றுக் கொண்டதை தான் நான் அளவற்ற மகிழ்ச்சியாக கருதுகிறேன்.‌ அவர் வழக்கமான காமெடியை தவிர்த்து இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக ஜெயித்திருக்கிறார். தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். அவருடைய ஆசையும் அதுவாகத்தான் இருந்தது. அவர் ஒரு சிறந்த நடிகர். அதனை இந்தப் படத்தில் நிரூபித்திருந்தார். அதற்காக அவரையும் வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் கலையரசன் தங்கவேல் பேசுகையில் ”கதாசிரியர் சிவக்குமார் முருகேசனுடன் இப்படத்தின் வெற்றியை பகிர்ந்து கொள்கிறேன். அவருடைய எழுத்தை நான் படமாக்கினேன். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தை பார்த்து விமர்சனம் செய்த விமர்சகர்கள், திரையுலக பிரபலங்கள், டிஜிட்டல் திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு இந்த படத்தில் தயாரிப்பாளர்கள் எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது பற்றி மூன்று நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் படத்தில் எங்கும் விலங்குகள் தொடர்பான காட்சிகள் இல்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆடு கத்தும் காட்சி இடம் பிடித்திருக்கும். ஆடு கத்தும் குரல் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். ஆனால் இதற்கான பணிகள் அதிகம். செலவும் அதிகம். இருந்தாலும் என்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து விலங்குகள் நல வாரியத்திடம் முறையாக அனுமதி பெற்று அந்த காட்சிக்கு ஆதரவளித்தார்கள்.

பத்திரிகையாளர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பித்த பிறகு ஒரு சிறிய மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அந்த தருணத்தில் இந்தப்படம் கியூப் எனும் திரையிடும் தொழில்நுட்பம் மூலம் தமிழகம் முழுவதும் 180 திரையரங்குகளுக்கும் சென்று விட்டது. இதற்குப் பிறகு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால் .. ஒரு பிரதிக்கு குறைந்தபட்சம் 15,000 செலவாகும். நான் இது தொடர்பாக கேட்டபோது என்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நெருக்கடியான தருணத்திலும் எனக்கு ஆதரவளித்து திருத்தத்தை மேற்கொண்டார்கள்.

என் சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் சிறிய நகரம் என்றால் அது ஒட்டன்சத்திரம் தான். அங்கு இந்தப் படம் வெளியானால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்து எங்கள் ஊர் திரையரங்கில் இந்தப் படம் வெளியானது.

தயாரிப்பாளர்கள் சினிமாவை வணிகமாக கருதாமல்.. நேசத்திற்குரிய படைப்பாக கருதியதால் தான் இது நடைபெற்றது.

ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதற்காக சம்மதம் தெரிவித்தவுடன் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இதுவரை தொடர்ந்து ஆதரவு தரும் ஊடகங்களுக்கு நன்றி. பத்திரிகையாளர் காட்சி திரையிட்ட பிறகு உங்களின் பாராட்டும், வாழ்த்தும் எங்களை உற்சாகமாக்கியது. அன்று இரவு நாங்கள் உறங்கவே இல்லை. மகிழ்ச்சியில் திளைத்தோம். இத்திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு நீங்கள் கொடுத்த முதல் பாராட்டு தான் காரணம். உங்களுடைய பாராட்டுகள் தான் தமிழக முழுவதும் பரவி இப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டது. படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து கொண்டாடி வரும் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்