பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் உருவாகி, ZEE5 தளத்தில் வெளியாகி திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரிடமும் பெரும் பாரட்டுக்களை குவித்தது ‘அயலி’ இணையத் தொடர்.இந்த தொடரை பள்ளிகளில் திரையிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அழுத்தமாக கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து சென்னை கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக அயலி’ திரையிடப்பட்டது. 8-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பை சார்ந்த 35 மாணவிகள் பங்கேற்றனர்.
ZEE5 நிறுவனம் முன்னெடுத்த இந்த நிகழ்வில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ் (அரசின் முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு) கே. நந்தகுமார் ஐஏஎஸ்., (கமிஷனர் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவிகளுடன் உரையாடி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, அயலி நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய படைப்பு முதலில் இந்த இணையத்தொடருக்காக ZEE5 நிறுவனத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இது ஒரு பொழுது போக்கு தொடர் அல்ல, நாம் பெண்ணடிமைத்தனத்தில் எந்த இடத்திலிருந்து இப்போதைய நிலைக்கு வந்துள்ளோம் என்பதற்கு சான்றாக இந்த தொடர் உருவாகியுள்ளது. கல்வி என்பது ஆண் பெண் என பார்க்காமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் பாடுபட்டு வருகிறது.
கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவுத்திட்டம் முதலாக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாம் பெரியார் அண்ணா கலைஞர் காலங்களில் பெண்ணுரிமைக்காக போராடி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். இதனை மிக அழகாக இந்த தொடர் சித்தரித்துள்ளது இதனை உருவாக்கிய குழுவிற்கும் நடித்த நடிகர் நடிகையர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.நிகழ்வில் ZEE5 தெற்கு தலைமை கிளஸ்டர் அதிகாரி திரு. சிஜு பிரபாகரன், ZEE5 நிறுவன தலைமை அதிகாரி கௌசிக் நரசிம்மன், அயலி தொடரின் தயாரிப்பாளர் S. குஷ்மாவதி, இயக்குநர் முத்துக்குமார், தொடரின் கதைநாயகி அபி நட்சத்திரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.