இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’ குறும்படம் கோவா சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வாகி, விழாவின் முதல் நாளே அரங்கம் நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது. முன்னதாக இ.வி.கணேஷ்பாபுவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது பற்றி பேசிய இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு, ”ஒவ்வொரு சினிமா கலைஞனும் வாழ்வில் ஒருமுறையாவது கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வேண்டும். அங்கே அரிதான பல படைப்புகளும், தரவுகளும், சர்வதேச சினிமா வியாபாரத்துக்கான வாய்ப்புகளும், பொக்கிஷங்களாக கொட்டிக் கிடக்கிறது.
அப்படிப்பட்ட இடத்தில் எனது படம் தேர்வு செய்யப்பட்ட தருணம் என் வாழ்வில் அற்புதமான தருணம்.
ஹிந்தி திரைப்பட இயக்குநரும், நடிகருமான அனுபம் கெர் அவர்கள் முதல் வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்து, படத்தின் பல காட்சிகளிலும் கைதட்டி உற்சாகப்படுத்தினார்.
‘இந்திய சினிமாவின் ஆன்மாவை ஆநிரை குறும்படம் பிரதிபலிக்கிறது. பணம்தான் பெரிது என்று நினைக்கும் இந்த உலகில் அன்புதான் பெரிது என்று இப்படம் காட்டுகிறது’ என்றும் பாராட்டினார்.
ஆநிரை படத்தைப் பார்த்த ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் மரகதமணி ‘படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ச்சுனன், தனது பசுமாட்டின் தோலில் செய்யப்பட்ட இசைக் கருவியைக் கண்டு, அதை தனது மாடாகவே கருதி கதறி அழும் காட்சி என்னை நிலைதடுமாற வைத்துவிட்டது. இனி அப்படிப்பட்ட இசைக்கருவியை என்னால் வாசிக்க முடியுமா என்று தெரியவில்லை’ என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
மட்டுமல்லாது வெளிநாட்டு திரைக்கலைஞர்களின் பாராட்டுக்கள் என் திரைப்பயனத்தில் திருப்பு முனையாக அமைந்துள்ளது” என்றார் உற்சாகமாக.

