‘அஷ்டகர்மா’ சினிமா விமர்சனம்

அஷ்டகர்மா‘ சினிமா விமர்சனம்

By சு. கணேஷ்குமார், 99415 14078

அமானுஷ்ய அதிர்வலை, செய்வினை சதிவலை என கலந்துகட்டிய திகில் திரில் காம்போவாக ‘அஷ்டகர்மா.’

ஏவல், பேய், பிசாசு, பில்லி சூனியம் என்பதெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்லிக்கொண்டிருக்கிற அறிவியல் அறிவாளிகள் ஒருபக்கம். பேய் ஓட்டுதல், செய்வினை வைத்தல், வைத்ததை எடுத்தல் என்றிருக்கும் சாமியார்கள், மந்திர தந்திர மாயாஜாலக்காரர்கள் ஒருபக்கம்.

கதையின் நாயகன் மனோதத்துவ டாக்டர்; அறிவியலின் பக்கம் நிற்பவர். சாமியார்கள் நிகழ்த்தும் சித்துவேலைகளின் தில்லுமுல்லு பின்னணியை ஆதாரத்துடன் தோலுரிப்பவர். அவரையே அமானுஷ்ய சக்தி என்ற ஒன்று இருக்கிறது; செய்வினை வைப்பதெல்லாம் உண்மைதான் என நம்ப வைக்கிற சம்பவங்கள் அரங்கேறுவதே அஷ்டகர்மாவின் அஸ்திவாரம்!

கதாநாயகியை எப்போதும் ஏதோவொரு பிரச்சனை துரத்திக்கொண்டே இருக்கிறது. அலசி ஆராய்ந்தால், அவரது குடும்பத்தில் ஒருவர் வைத்த செய்வினைதான் காரணம் என்பதும், செய்வினை வைத்தது ஏன் என்பதும் தெரியவந்து அதிர்ச்சியூட்டுகிறது. தன்னைச் சுற்றும் செய்வினையிலிருந்து மீண்டுவர அவர் என்ன செய்தார் என்பதே கதை…

திரைக்கதையோட்டத்தில் கதாசிரியர் ஒருவர் கதை எழுத எழுத, எழுதுவதெல்லாம் அப்படியே நடப்பது, பிரமாண்ட பங்களாவுக்குள் அமானுஷ்ய சக்தி உலவுவது, அது உள்ளே நுழைகிற மனிதர்களை பயங்காட்டி பதட்டமூட்டுவது என திகில் படங்களுக்கே உரிய டெம்ப்ளேட் சங்கதிகள் அணிவகுக்கின்றன. இயக்கம்: விஜய் தமிழ்செல்வன்

நாயகன் சி.எஸ். கிஷன், நாயகிகள் ஷிரிதா சிவதாஸ், நந்தினிராய் என எவர் நடிப்பிலும் பெரிதாய் குறையில்லை. சாமியாராய், மந்திரவாதிகளாய், பேய் ஒட்டுபவர்களாய் வருகிறவர்களும் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பது பலம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டொஷிலா படத்திலும் விவாதநிகழ்ச்சித் தொகுப்பாளராகவே வருகிறார். அவரது வளமான வசன உச்சரிப்பு அழகு!

இளைஞர்களின் ஹார்மோனை சூடேற்ற பலான காட்சியொன்றை வைத்து அதில் நடிக்க பலாச்சுளையாய் இளமை திமிறும் பட்டாம்பூச்சியொன்றை பிடித்துப் போட்டது போனஸ்!

செய்வினை வைப்பது பற்றி இந்துமதத்தின் வேதங்களிலேயே குறிப்புகள் இருப்பதைக் குறிப்பிட்டு, அதற்கான காரணங்களை விவரிப்பது ஆச்சரிய உணர்வைத் தராமலிருக்காது!

திகில் காட்சிகளை அதே உணர்வுடன் ரசிகர்களுக்கு கடத்துகிறது எல்.வி.முத்து கணேஷின் பின்னணி இசை.

டி.ஆர். எழுதி, பாடிய ஒரு பாடலும் படத்தின் நிறைவில் உண்டு.

ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு கதைக்கேற்ற கச்சிதம்.

சற்றே வித்தியாசமான கதைக்கருவை கையிலெடுத்த இயக்குநர் திரைக்கதையையும் அதே வித்தியாசத்தோடு கையாண்டிருந்தால் அஷ்டகர்மா வசூலில் அதிர்ஷ்டகர்மாவாகியிருக்கும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here