நானும் ஆர்யாவும் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் சேர்ந்து நடிப்பேன்! -‘கேப்டன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேச்சு

ஆர்யா நடித்து, இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் ‘கேப்டன்.’

‘டெடி’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இணைந்துள்ள ஆர்யா -சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தபடத்துக்கு ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி , கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

திங்க் ஸ்டுடியோஸ் (Think Studios) நிறுவனம் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம், வரும் செப்டம்பர் 8-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆர்யா – ஐஸ்வர்யா லக்ஷ்மி,

படவெளியீட்டுக்கு முந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் 25.8. 2022 வியாழன்று நடந்தது. திரையுலகப் பிரபலங்கள் பலருடன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் நடிகர் ஆர்யா, ”நாங்கள் இந்த கதையை தயாரிப்பாளர் ஸ்வரூப்பிடம் சொன்னபோது, அவர் எங்களை முழுதாய் நம்பினார். படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்தார். இயக்குனர் சக்தியின் சிறப்பு என்னவென்றால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு புது ஜானரை முயற்சிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளை எல்லாம் அவர் சிறப்பாக திரையில் கொண்டு வருவார்.

இந்த படத்தின் சண்டைகாட்சிகளை சிரத்தை எடுத்து செய்துள்ளோம். ஒரு பிரமாமண்ட மிருகத்துடன் சண்டை போடும் வகையில் இருக்கவேண்டுமென, அதற்கு ஏற்றார் போல் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இசை இந்த படத்தின் முதுகெலும்பு என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு ஆக்சன் படம் என்றாலும், அதில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது” என்றார்.

இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன், ”கேப்டன் நான் இயக்கிய படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம். இதுபோன்ற படங்களை நம் ஊரில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இந்த படம் உருவாவதற்கு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி கூற வேண்டும். இந்த படம் என் மனதிற்கு நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்” என்றார்.

இசையமைப்பாளர் டி.இமான், ”இந்த படத்தில் ஆர்யா கடின உழைப்பை கொடுத்துள்ளார், அது திரையில் தெரிகிறது. அதிகமாக கிராபிக்ஸ் இருக்கக்கூடிய கதைக்களத்தைத் தான் இயக்குனர் சக்தி கொண்டு வருவார். அது மிகவும் கடினமான ஒரு காரியம். ஏனென்றால் கற்பனையான உருவத்தை இல்லாமலே இயக்க வேண்டும். அதற்கு இசையமைக்க வேண்டும். அது மிகவும் சவாலான காரியம். இயக்குனர் உடைய தெளிவான சிந்தனை தான் திரைப்படத்தை நேர்த்தியாக்கி இருக்கிறது. இந்த படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார்” என்றார்.

நடிகர் சந்தானம், ”எனக்கும் ஆர்யாவுக்குமான நட்பு மிகவும் நெருக்கமான ஒன்று. பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரியான படங்களின் இரண்டாம் பாகம் எடுத்தால் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பேன். கேப்டன் ஏலியன் சப்ஜெக்ட் படம். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்” என்றார்.

நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஆர்.பி. சௌத்ரி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
நிகழ்வில் படத்தின் முதல் நாள் முதல் ஷோ டிக்கெட்டுகளை வெளியிடுவதும் பெற்றுக் கொள்வதுமான நிகழ்வும் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here