‘அம்மான்னா சும்மா இல்லேடா’ என்ற அந்தக்கால பாடல் வரிகளுக்கு உயிரூட்டியது போன்ற ஒரு படம்.
அந்த மகனுக்கு அம்மா மீது அப்படியொரு வெறுப்பு. அந்த வெறுப்பை அவன் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காட்டிக் கொண்டேயிருக்க, படம் பார்க்கும் நமக்கு ‘அப்படி உனக்கு அந்தம்மா என்னதாண்டா பாவம் பண்ணுச்சு’ என்ற கேள்வி எழுகிறது.
அதற்கு பதில் சொல்லி முடிகிறது ஆனந்த் சிவம் இயக்கியிருக்கும் செல்லமடா நீ எனக்கு.’
அம்மாவை தவறாக புரிந்துகொண்டு எரிச்சல் நெருப்பால் பொசுக்கிக் கொண்டிருக்கும் மகனாக வசீகரன். மோசமாக நடந்து கொள்ளும்போதும், அப்படி நடந்து கொண்டது தவறு என்பது புரிந்து மன்னிப்பு கேட்டு அம்மாவை அரவணைக்கத் துடிக்கும்போதும் உணர்வுபூர்வ நடிப்பு தெரிகிறது. நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுவது, காதலித்து உற்சாகமாவது என வழக்கமான ஹீரோக்கள் செய்கிற விஷயங்களையும் நல்லவிதமாக செய்கிறார்.
மகன் தன்னிடம் பேசுவதில்லை என்ற ஏக்கத்தை, அவன் காட்டும் வெறுப்பால் மனம் நொறுங்கிப்போவதன் பிரதிபலிப்பை அம்மாவாக வருகிற பசங்க செந்தியின் நடிப்பில் துல்லியமாக உணர முடிகிறது. பிளாஷ்பேக் காட்சிகளில் இளமையான தோற்றத்தில் திருடனுக்கு மனைவியாகி வாழ்க்கையை பாழாக்கிக் கொள்கிறபோது பரிதாபமாகவும் மகனுக்காக உறுப்பு தானம் செய்கிறபோது நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
வசீகரனின் காதலியாக வருகிற நேகாவின் முகம் வசீகரமாக இருக்கிறது. நடிப்பில் புத்துணர்ச்சி ததும்புகிறது.
சிறிய குற்றம் செய்யத் திட்டமிட்டு பெரிய குற்றமாகி, குடும்பத்தை தவிக்கவிட்டு சிறை சென்று திரும்பிய பின்னும் திருந்தாத மனிதனாக போஸ் வெங்கட் கவனம் பெறுகிறார்.
வசீகரனுக்கு நண்பனாக வருகிற அமுதவாணன், ரிஷாவுடன் சேர்ந்து போடும் ஆட்டத்தில் எனர்ஜி எக்கச்சக்கம். ரிந்து ரவி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட மற்றவர்களின் தேவையான அளவில் இருக்கிறது.
‘இவன்தாண்டா இவன் தாண்டா’, அண்டா சட்டி அண்டா சட்டி’, ‘செக்கச் செக்க சிவந்திருக்கு தக்காளி’ என வரிசைகட்டும் பாடல்களின் இசையில் வெரைட்டி காட்டியிருக்கிறார் தாஜ்நூர். தேவகோட்டையை திரும்பத் திரும்ப சுற்றினாலும் அலுப்பு தட்டாதபடி கேமரா கோணங்களை அமைத்திருக்கிறார் செல்வா ஆர்.
அம்மா மகன் பாசப்பிணைப்பை மையப்படுத்தி மதுரா வேள்பாரி எழுதிய கதைக்கு, பொழுதுபோக்கு அம்சங்களை சரியான விகிதத்தில் கலந்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஆனந்த் சிவம் மனித உறவுகளுக்கிடையில் உருவாகும் தவறான புரிதலின் விளைவுகளை எடுத்துச் சொல்லியிருக்கும் விதம் நேர்த்தி.
செல்லமடா நீ எனக்கு – தாயிற் சிறந்த கோவில் இல்லை!
-சு.கணேஷ்குமார்
