மகேஷ் சி.பி. தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் படம் ‘கிரிமினல்’. கமலா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் புதுமுகம் ஜானவி நாயகியாக நடித்துள்ளார். பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு கிரன் டொர்னாலா ஒளிப்பதிவு செய்ய, ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் (பெயரே ஆப்பிள் அண்ட் பைனாப்பிள்தான்) இசையமைத்துள்ளார். பவன் கவுடா படத்தொகுப்பு செய்ய, அஷ்வத் மற்றும் சரவணன் மக்கள் தொடர்பாளர்களாக பணியாற்றுகிறார்கள்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிக்கும்படி இருப்பதோடு, படத்தை பார்க்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. இது ஒடிடி-க்களின் காலம். ஒடிடிகளில் படம் பார்ப்பது அதிகரித்துள்ளது. அதனால் தான் புது புது ஒடிடி நிறுவனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அப்படி வரும் ஒடிடி நிறுவனங்கள் ‘கிரிமினல்’ போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படங்களை தான் அதிகம் தேர்வு செய்கிறார்கள். காரணம், மக்களும் அதுபோன்ற படங்களை விரும்பி பார்ப்பது தான். அந்த வகையில், ‘கிரிமினல்’ படத்தை வாங்க பல ஒடிடி நிறுவனங்கள் முன் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதை படத்தின் டிரெய்லர் நிரூபித்துள்ளது.
பொதுவாக ஒடிடி நிறுவனங்கள் பெரிய படங்களை தான் வாங்குகிறார்கள், சிறிய படங்களை வாங்குவதில்லை, என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. உண்மையில் ஒடிடி நிறுவனங்கள் அதிகம் வாங்குவது சிறிய படங்களை தான். நல்ல கதையாக இருந்தால், நடிகர்கள் யார்? என்பதை ஒடிடி நிறுவனங்கள் பார்ப்பதில்லை. ரசிகர்களுக்கு ஏற்ற படமா? என்பதை மட்டும் தான் பார்க்கிறார்கள். அதனால், இளைஞர்கள் நிறைய பேர் சினிமாத்துறைக்கு வர வேண்டும், படங்கள் நிறைய தயாரிக்க வேண்டும். நல்ல படமாக இருந்தால் அதை வாங்க ஒடிடி நிறுவனங்கள் தயாராக இருக்கிறது.
‘கிரிமினல்’ படத்தின் இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. ஒடிடிக்கான மிக சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.
படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான மகேஷ் பேசுகையில், “இது ஒரே நாளில் நடக்கும் கதை. ரசிகர்கள் சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில் பரபரப்பான திரைக்கதையோடு படம் பயணிக்கும்.
நாயகனின் அப்பா கொலை செய்யப்பட, அந்த கொலை பழி நாயகன் மீது விழுகிறது. ஒரு பக்கம் போலீஸ் துரத்த, மறுபக்கம் தனது தந்தையை கொலை செய்த உண்மையான கொலையாளியை பிடித்து, தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முயற்சியில் நாயகன் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சஸ்பென்ஸாகவும், திரில்லராகவும் சொல்லியிருக்கிறோம். நிச்சயம் இந்த படம் நூறு சதவீதம் ரசிகர்களை திருப்திப்படுத்தும்” என்றார்.
இயக்குநர் ஆறுமுகம் பேசுகையில், “இது எனக்கு முதல் படம். அதனால், என்னுடைய முழு உழைப்பையும் இந்த படத்தில் போட்டிருக்கிறேன். பல கட்டங்களில் படத்தை மெருகேற்றினோம். படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான மகேஷ், நல்ல உத்துழைப்பு கொடுத்ததோடு படம் சிறப்பாக வருவதற்கு மிக கடுமையாக உழைத்தார்” என்றார்.
இசையமைப்பாளர் ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் பேசுகையில், “இந்த படம் இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம். எனவே வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன்” என்றார்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கிரிமினல்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.