கோடை விடுமுறையில் குடும்பத்தோடு பார்த்து ரசித்துச் சிரிக்கும்படியாய் ஒரு படம்.
எமலோகத்தில் எமன் தன் எதிரில் நிற்கும் இளைஞன் குருவிடம், ‘உன்னை மீண்டும் பூமிக்கு அனுப்புகிறேன். உன்னால் திருமணம் நின்றுபோன பெண்ணுக்கு, நீயே நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்தி வைக்க வேண்டும்; அதையும் 60 நாட்களில் செய்து முடிக்க வேண்டும்’ என கட்டளையிடுகிறார். ‘சொன்னபடி செய்யாவிட்டால் உன் தலை வெடித்து சிதறிவிடும்’ என்று எச்சரிக்கிறார்.
‘அந்த பெண்ணை நீ விரும்புவதோ, கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கோ வரக்கூடாது’, ‘அவளுக்கு பிடிக்காத மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது’ என்றெல்லாம் சில நிபந்தனைகளைவும் விதிக்கிறார்.
இப்படி ஓப்பனிங்கே அதிரிபுதிரியாக இருக்க, ‘திருமணம் நிற்கிற அளவுக்கு குரு என்ன செய்திருப்பான்?’, ‘எப்படி அவன் மரணமடைந்திருப்பான்?’ என்கிற கேள்விகள் மனதில் உருவாகிறது. அதற்கெல்லாம் கொஞ்ச நேரத்திலேயே விடையும் கிடைத்து விடுகிறது.
குருவால் எமன் சொன்னபடி அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிந்ததா, இல்லையா என்பது காமெடிக்கு பஞ்சமில்லாத அடுத்தடுத்த காட்சிகளின் தொகுப்பு…
தன்னால் திருமணம் நின்று போன பெண்ணுக்கு வரன் தேடி அலைவது, கிடைக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஏடாகூடமாக இருக்க மனம் நொந்து போவது, எந்த பெண்ணுக்காக மாப்பிள்ளை பார்க்கிறாரோ அதே பெண் தன்னை காதலிப்பது தெரிந்தும் அதை நிராகரிப்பது என நீள்கிற காட்சிகளில் குருவாக வருகிற அன்பு மயில்சாமி தந்திருக்கும் நடிப்பு இயல்பு.
நாயகி சந்திரிகா லட்சணமாக இருக்கிறார்; சிரிக்கும்போது அந்த லட்சணம் பல மடங்கு கூடிவிடுகிறது. தனக்கு வரன் தேடுபவரையே காதலித்து அதை அவருக்கு உணர்த்த எடுத்துக் கொள்ளும் முயற்சியில் வெளிப்படும் வெகுளித்தனம் அத்தனை அழகு. அம்மணி பாடல் காட்சியில் கொஞ்சமாக கவர்ச்சியும் காட்டியிருக்கிறார் என்பது விசேச தகவல்.
டி பி கஜேந்திரன், பாண்டு, டெல்லி கணேஷ், கோவை செந்தில் என நிஜத்தில் எப்போதோ எமனிடம் போய்ச் சேர்ந்தவர்கள் படத்தில் அசத்தலான பங்களிப்பை வழங்கியிருக்க அதில் ஒருவரான நெல்லை சிவாவுக்கு எமன் வேடம். அவரது கெட்டப் மட்டும்தான் மாறியிருக்கிறதே தவிர உடல்மொழியும் டயலாக் டெலிவரியும் வழக்கம்போலவே இருக்கிறது; அது ரசிக்க வைக்கிறது.
தன்னை வெறுக்கும் முறைப் பெண்ணை அடைந்தே தீருவேன் என வரிந்துகட்டி பிரச்சனை செய்கிற கராத்தே ராஜா, நாயகனின் கஷ்ட நஷ்டங்களை சேர்ந்து தாங்கிகொள்கிற நண்பனாக அர்ஜுனன்… கூடவே ஆர் சுந்தராஜன், சங்கிலி முருகன், சார்லி, நளினி, ஷகிலா, பவர் ஸ்டார், வையாபுரி என திரும்பிய பக்கமெல்லாம் பிரபலமான நடிகர் நடிகைகள். அத்தனைப் பேருக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்கிறது.
ஆட்டம்போடத் தூண்டும் ‘காசு காசு காசுடா’, காதல் உணர்வு பொங்கும் ‘சண்டக்காரா’, ஆன்மிகத்தை தொட்டுத்தொடர்கிற ‘அதி பரமேஸ்வரி’ என, என் சசிகுமார் இசையில் வெரைட்டியான பாடல்கள் அணிவகுக்கின்றன.
‘எமலோகம் போனவன் மீண்டும் பூலோகத்துக்கு வந்து, சவால்களையும் சங்கடங்களையும் சந்திக்கிறான்’ என்ற ஒன்லைனை எடுத்துக் கொண்டு, திரைக்கதையை காமெடி களேபரங்களால் நிரப்பி ரசிகர்களின் உற்சாகத்துக்கு கேரண்டி தருகிறார் இயக்குநர் எஸ் ராஜசேகர்!
எமன் கட்டளை _ சுவாரஸ்யமான ரகளை!
-சு.கணேஷ்குமார்