புத்தகங்களாக உருவான நடிகர் நாகேஷ், ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் வாழ்க்கை அனுபவங்கள்! வெளியிட்டு சிறப்பித்த நடிகர் சிவகுமார்!

தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் நாகேஷ். தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியமாகத் திகழ்ந்தவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்.

இந்த இருபெரும் சாதனையாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை பத்திரிகையாளர் எஸ். சந்திர மௌலி தொகுத்து புத்தகங்களாக எழுதி இருக்கிறார்.

‘நான் நாகேஷ்’, ‘திரைக் கடலோடி’ என்ற தலைப்பிலான இரு புத்தகங்களையும் பிரபல நடிகர் சிவகுமார் வெளியிட்டார்.

புத்தகத்தின் முதல் பிரதிகளை ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் மகனும், பிரபல திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலருமான டயமண்ட் பாபு பெற்றுக் கொண்டார்.

புத்தகங்களை வெளியிட்ட நடிகர் சிவகுமார், “நாகேஷ் ஒரு அபாரமான நடிகர். என் நெருங்கிய நண்பர். ஃபிலிம்நியூஸ் ஆனந்தன், தமிழ்த் திரையுலகின் நடமாடும் என்சைக்கிளோபீடியாவாக திகழ்ந்தவர். தமிழ் சினிமா உலகத்துக்கு இருவரது பங்களிப்பும் மகத்தானது. சுவாரஸ்யம் மிகுந்த அவர்கள் வாழ்க்கை அனுபவங்கள் ஆவணப்படுத்தபட வேண்டியவை. இரு புத்தகங்களையும் ஒரு சேர வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்ட டயமண்ட் பாபு, “எங்கள் தந்தையார் பத்திரிகை உலகோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். பத்திரிகைகளுக்கு, சினிமா உலகம் குறித்த எந்த தகவலோ, புகைப்படமோ தேவையானாலும், அவரைத்தான் தொடர்பு கொள்வார்கள். அவரது வாழ்க்கை அனுபவங்கள் புத்தகமாக வெளிவருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதனை சாத்தியமாக்கி இருக்கும் பத்திரிகையாளர் சந்திர மௌலிக்கும், பதிப்பாளர் ராஜேஷ் தேவதாசுக்கும், புத்தகத்தை வெளியிட்ட நடிகர் சிவகுமாருக்கும் எனது நன்றி” என்றார்.

2004-ம் ஆண்டில் நாகேஷ் குறித்த புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியானபோது அந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தவர் நடிகர் சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகங்கள் தேவைப்படுவோர் புஸ்தகா டிஜிட்டல் மீடியா நிறுவனத்தின் 99803 87852 என்ற (வாட்ஸாப்) எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here