உங்கள் எல்லோருக்கும் கொண்டாட்டம் காத்திருக்கிறது! -கேங்கர்ஸ் பட விழாவில் நடிகர் வைகைப்புயல் வடிவேலு  

சுந்தர் சி,  வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, காமெடி சரவெடியாக உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் வரும் 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது. முன்னதாக படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் சென்னையையடுத்த ஏ சி எஸ் மருத்துவக் கல்லூரி விழாவில் நடந்தது.

நிகழ்வில் பேசிய நடிகர் வடிவேலு, ”பத்தாயிரம் மாணவர்கள் முன்னிலையில் இப்பட விழா நடப்பது மகிழ்ச்சி. நானும் சுந்தர் சி அண்ணனும் 15 வருஷமா சேர வில்லை, நம்மூரில் பிரிச்சி வைக்க ஆளா இல்லை, இடையில் நாங்கள் பிரிந்திருந்தது பெரிதாகத் தெரியவில்லை.

இந்தப்படம் எதோ நேற்று செய்த வின்னர் படம் மாதிரி, அத்தனை புதிதாக இருக்கிறது. சுந்தர் சி அண்ணனுக்கு சொல்லவா வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார். பேசி முடிச்சு 35 நாளில் இப்படத்தை முடித்து விட்டோம். உங்களுக்குத் தேவையான அத்தனை தீனியும் படத்தில் இருக்கிறது. இது தியேட்டரில் எல்லோரும் சேர்ந்து பார்த்து கொண்டாட வேண்டிய படம். சுந்தர் சி அண்ணன் அருமையாக எடுத்துள்ளார், என்னிடம் என்ன வாங்க வேண்டும் என, அவருக்கும் தெரியும் உங்கள் எல்லோருக்கும் கொண்டாட்டம் காத்திருக்கிறது” என்றார்.

இயக்குநர் சுந்தர் சி, ”கல்லூரியில் உங்கள் எல்லோரையும் பார்க்க அத்தனை உற்சாகமாக உள்ளது. இனிமேல் நிறையக் கல்லூரி விழாவிற்கு வருகை தருவேன். நானும் வடிவேல் அண்ணனும் மீண்டும் இணைந்து, உங்களை மகிழ்விக்க, உழைத்துள்ளோம். என் மீது இப்படத்திற்காக நம்பிக்கை வைத்த, ஏ சி சண்முகம் அண்ணன், ஏசிஎஸ் அருண்குமார் ஆகியோருக்கு நன்றி. இந்தப்படம் ஆரம்பிக்க விதை போட்டது வடிவேல் அண்ணன் தான். தமிழில் மணிஹெய்ஸ்ட் மாதிரி ஒரு சின்ன ஊரில், ஆட்டோ ஓட்டுநர், டீச்சர் எல்லாம் வைத்து, பண்ணினால் எப்படி இருக்கும் என்பது தான் கதை. இந்தப்படத்திற்கு என்னடா தலைப்பு வைப்பது எனத் திணறியபோது, வடிவேல் அண்ணன் போற போக்கில் கேங்கர்ஸ் என்றார். அதையே தலைப்பாக வைத்து விட்டோம். கண்டிப்பாக இப்படம் உங்கள் எல்லோரையும் சந்தோசப்படுத்தும்” என்றார்.

நடிகை கேத்தரின் தெரேசா, ”உங்கள் முன்னிலையில் எங்கள் படத்தைப் பற்றிச் சொல்வதில் மகிழ்ச்சி. ஒரு சிறு கிராமத்தில் உள்ள பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளேன். நான் வடிவேல் சாரின் ரசிகை, அவர் கதாபாத்திரத்திற்குள் மாறுவதை அருகிலிருந்து பார்த்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. அவருடன் நடித்தது பெருமை. இப்படத்தில் என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் நன்றிகள். ஆனால் அவருடன் நடிப்பது முதல் முறை, அவர் படத்தை மிக இயல்பாக, எந்தவித கஷ்டமும் இல்லாமல் மிகச்சிறப்பாகக் கொண்டு வந்துவிடுகிறார். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் சிரிக்க வைக்கும். அனைவரும் கொண்டாடுங்கள்” என்றார்.

நடிகை வாணி போஜன், இசையமைப்பாளர் சத்யா, எடிட்டர் பிரவீன் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் எசக்கி கிருஷ்ணசாமி, கதை வசனகர்த்தா வெங்கட் ராகவன், நடிகர் பக்ஸ் எனும் பகவதி பெருமாள், நடிகர் முனீஷ்காந்த், நடிகர் மைம் கோபி, நடிகர் விச்சு விஸ்வநாத், தயாரிப்பாளர் ஏ சி சண்முகம் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here