அம் ஆ சினிமா விமர்சனம்

அம்மா பிள்ளை பாசப்பிணைப்பில் உருவான மலையாளப் படம். நம்மூர் தேவதர்ஷினியை குணச்சித்திர நடிகையாக மாற்றியிருக்கிற ‘அம் ஆ.’

கேரளாவின் அந்த மலைப் பகுதிக்கு அதுவரை பரிச்சயமில்லாத ஒருவர் போகிறார்; ஊர் தலைவரின் உதவியோடு ஒரு வீட்டில் தங்குகிறார். அந்த ஊரில் ஒரு குழந்தையுடன் வசிக்கிற பெண் ஒருவரை சந்திக்கிறார். அவரைக் கண்டு அந்த பெண் பயப்படுகிறார். குழந்தை தன்னிடமிருந்து பறிபோய்விடும் என பதறுகிறார். அவர் அந்த பெண்ணை சந்தித்தது தெரிந்து ஊரிலுள்ள பெரியவர் ஒருவர் ‘நீ ஏன் அங்கு போனாய்?’ என்று கேட்டு அவரை தாக்குகிறார்.

இடைவேளைவரை இப்படி நகரும் கதை, அந்த பெண் யார்? அவரிடமிருக்கும் குழந்தை யாருடையது? அந்த பெண்ணை தேடிப் போனவர் யார்? அவரைப் பார்த்து அந்த பெண் பயப்பட என்ன காரணம்? என பல கேள்விகளை மனதில் உருவாக்க, அதற்கெல்லாம் பதில் தருகிறது படத்தின் பின்பாதி… இயக்கம் தாமஸ் செபாஸ்டியன்

ஜனவரியில் கேரளாவில் வெளியாகி ஹிட்டடித்து, ஏப்ரல் 18-ல் தமிழ் மொழியில் ரிலீஸாகும் இந்த படத்தில் காமெடி நடிகையாகவே பார்த்துப் பழகிய தேவதர்ஷினியை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் பார்ப்பதே புது அனுபவமாக இருக்கிறது. தாயின்றி தவிக்கும் குழந்தைக்கு தாயாக மாறுவது, குழந்தையை யாரேனும் தன்னிடமிருந்து பறித்துக் கொள்வார்களோ என பயந்து பதறுவது, தங்குவதற்கு இடமின்றி தவிப்பது என நீள்கிற காட்சிகளுக்கு இதுவரை வெளிப்படுத்தாத தரமான குணச்சித்திர நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார். அதை வார்த்தைகளால் மட்டுமின்றி விருதுகளாலும் பாராட்ட வேண்டும்.

ஊருக்குள் நுழைந்ததிலிருந்து நடந்துகொள்ளும் விதம் அவர் எதையோ தேடி வந்திருக்கிறார், யாரையோ தேடி வந்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. உடல்மொழி வில்லத்தனமாக எதையோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்க்க வைக்கிறது. அவர் யார், எதற்காக வந்திருக்கிறார் என தெரியும்போது வெளிப்படுத்தும் உடல்மொழி அவரை வேறொரு மனிதராய் காட்டுகிறது. அப்படியொரு பாத்திரத்தை சுமந்திருப்பவர் திலீஷ் போத்தன்.

ஊர் தலைவராக வருகிற ஜாபர் இடுக்கி, திலீஷ் போத்தனிடம் லொடலொடவென்று பேசிக் கொண்டிருப்பது சுவாரஸ்யம். திலீஷ், போலீஸ் என தெரிந்ததும் அதுவரை தம்பி, வா, போ என்றழைத்துக் கொண்டிருந்தவர் சார் என விளிக்கும்போது ஏற்படும் சங்கடத்தை அவரிடம் எடுத்துச் சொல்லும் தருணம் அத்தனை அழகு.

வாடகைத் தாயாக இருந்து பெற்றெடுத்த குழந்தைக்கு தானே சொந்த தாயாகி வளர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிற பெண் இந்த கதையின் முக்கிய கதாபாத்திரம். அதை ஏற்றிருப்பவர் பாசம், இயலாமை, விரத்தி என கலந்துகட்டி வெளிப்படுத்தியிருக்கும் உணர்வுபூர்வமான நடிப்பு படத்தை தாங்கியிருக்கும் தூண்களில் ஒன்று.

தாசன் என்ற பெயரில் பார்வையற்றவராக வருகிற முதியவர், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலைமைக்கு ஆளாகிற பெண் என ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு பலம் சேர்க்கும்படி உருவாக்கப்பட்டிருக்க, நடித்தவர்கள் அதை புரிந்துகொண்டு பங்களிப்பை பரிமாறியிருக்கிறார்கள்.

தேவதர்ஷினியின் அரவணைப்பில் வளர்கிற குழந்தை நட்சத்திரங்களும் கவர்கிறார்கள்.

கேரளா கதைக்களமாக அமையும்போது ஒளிப்பதிவாளர்களுக்கு இருக்கிற அட்வாண்டேஜ், கேமராவை எந்த பக்கம் வைத்தாலும் ஃபிரேம் அழகாக தெரியும்; அதுவும் இந்த கதை மலைப் பகுதியில் நடக்க அந்த அழகை, பசுமையை, பிரமாண்டத்தை அணுஅணுவாய் ரசித்து படமாக்கியிருக்கிறார் அனிஷ்லால்.

சில காட்சிகள் திரில்லர் மோடில் பயணிக்க அதற்கேற்ற பரபரப்பையும், கதையிலிருக்கும் சென்டிமென்ட்க்கு ஏற்ற அதிர்வலைகளையும் தன் பின்னணி இசையில் கோர்த்துக் கொடுத்திருக்கிற கோபி சுந்தர் ‘பேரறியா பூவிது’, ‘மகளே பொன்மகளே’ பாடல்களில் இதயம் வருடுகிறார்.

ஒரு குழந்தை ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாகி உருவாகி பூமிக்கு வருவதிலிருக்கிற கஷ்ட நஷ்டங்களை, வந்தபின் அந்த குழந்தையும் தாயும் அனுபவிக்கிற அவஸ்தைகளை பல படங்களில் பார்த்துள்ள நமக்கு,

வாடகைத் தாய் மூலம் பிறப்பெடுக்கும் குழந்தை; அதை பெற்றெடுத்த தாய் சந்திக்கும் பிரச்சனைகள், அந்த குழந்தைக்கு ஏற்படும் பரிதாபச் சூழல் என வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் ‘அம் ஆ’ மலையாள சினிமாக்கள் தனித்துவமானவை எனபதற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here