இனிகோ பிரபாகர் போன்ற நடிகர்களை வைத்துக் கொண்டு ஹீரோ இல்லை என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்! -கஜானா பட விழாவில் ஆதங்கப்பட்ட டி கிரியேஷன்ஸ் திருமலை

இனிகோ பிரபாகர், வேதிகா, யோகி பாபு, சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்க, பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து இயக்கியிருக்கும் அட்வெஞ்சர் ஃபேண்டஸி திரைப்படம் ‘கஜானா.’

பிரமாண்டமான பான் இந்தியா படைப்பாக உருவாகியுள்ள இந்த படம் வரும் மே 9-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில், படத்தை வெளியிடும் டி கிரியேஷன்ஸ் திருமலை, ”ஹீரோவாக நடித்திருக்கும் இனிகோ மிக கடுமையாக உழைத்திருக்கிறார். அவர் நடித்திருக்கும் அந்த சண்டைக்காட்சியை முன்னணி ஹீரோக்களை வைத்து எடுத்தால், 25 நாட்களில் கூட எடுக்க முடியாது. அந்த அளவுக்கு கடினமான விசயம். அதை இனிகோ மிக சிறப்பாக செய்திருக்கிறார். இப்படிப்பட்ட நடிகர்களை வைத்துக் கொண்டு ஹீரோ இல்லை, என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இந்த படத்தில் குரங்கு சண்டைக்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது, அதுபோன்ற ஒரு காட்சியை யாராலும் யோசிக்க கூட முடியாது. அந்த அளவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் அந்த காட்சியை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். இந்த படம் சிறிய படம் இல்லை, மிகப்பெரிய படம். இதில், வேதிகாவின் காட்சிகளை பார்க்கும் போதெல்லாம் லட்டு போல் இருக்கும். சாந்தினியின் சண்டைக்காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும்” என்றார்.

படத்தின் நாயகன் இனிகோ, “டிவியில் அட்வெஞ்சர் ஷோ ஒன்று பண்ணியிருந்தேன், அதை பார்த்துவிட்டு தான் இந்த வாய்ப்பு வந்தது. இந்த படத்தின் இயக்குநர் சாம் அதிகம் பேச மாட்டார், ஆனால் படத்தில் நிறைய பேசியிருக்கிறார். மிகப்பெரிய முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள். நடிகை வேதிகா இந்த படத்தில் ரொம்ப கியூட்டாக இருக்கிறார். சாந்தினி நடித்திருக்கும் வேடத்தில், அவரை தவிர யாராலும் நடித்திருக்க முடியாது,  அந்த அளவுக்கு செய்திருக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் அச்சு சார் யார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் படம் பார்க்கும் போது அவர் பெரிய இடம் என்பது புரிந்தது. அந்த அளவுக்கு பின்னணி இசையை பிரமாண்டமாக கொடுத்திருக்கிறார். நான் எந்த படத்தை பற்றியும் இவ்வளவு பேசியது இல்லை, இந்த படம் குறித்து பேசுகிறேன் என்றால், அந்த அளவுக்கு படம் வந்திருக்கிறது. இரண்டாம் பாதியில் படம் ஓடிக்கிட்டே இருக்கும், படத்தில் விலங்குகள் அதிகம் வருவதால் இது குழந்தைகளுக்கான படமாக மட்டும் இருக்காது, பெரியவர்களுக்கும் பிடிக்கும், அவர்களுக்கு ஏற்ற அட்வெஞ்சர் காட்சிகள் இருக்கிறது. மக்கள் இந்த படத்தை பார்த்தால், நிச்சயம் இது பற்றிக்கொள்ளும். அதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக கஜானா அமையும்” என்றார்.

நடிகை வேதிகா, “கஜானா படத்தின் ஒன்லைன் சொல்லும் போதே, எனக்கு இண்டர்ஸ்டிங்காக இருந்தது. ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப் வியூவில் நான் இதை கேட்ட போது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு அட்வெஞ்சர் படம் வந்ததில்லை என்று தான் நினைக்கிறேன். ரசிகர்களுக்கு இந்த படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். நான் இந்த படத்தில் ஒரு நடிகையாக பங்கேற்றாலும், ஒரு ரசிகையாக இந்த படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். இந்த படம் சிறுவர்களுக்கு மட்டும் இன்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ் சாரை பாராட்டுகிறேன், இப்படி ஒரு தைரியமான முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார். தயாரிப்பாளரும் அவர் தான், இரண்டு பணிகளையும் சேர்த்து செய்வது சாதாரண விசயம் இல்லை. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் ஒத்துழைப்பு தேவை என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை சாந்தினி பேசுகையில், “இந்த வருடம் நிறைய படங்களில் நடித்து வருகிறேன். கஜானா படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து இப்போது சொல்ல முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரம் கொடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. பிரமாண்டமான ஃபேண்டஸி படமாக இருக்கும். இந்த படத்தில் நிறைய சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறேன். இசையமைப்பாளர் அச்சு சிறப்பான இசையமை கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்குப் பிறகு அவர் தமிழில் நிறைய படங்கள் பண்ணுவார். வேதிகாவின் நடனத்திற்கு நான் ரசிகை. இந்த வருடம் குழந்தைகளுக்கான படங்கள் எதுவும் வரவில்லை. அந்த குறையை இந்த படம் போக்கும். பெரியவர்களுக்கும் படம் பிடிக்கும். தொடர்ந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி.” என்றார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விக்னேஷ் பேசுகையில், “இந்த படத்தின் இயக்குநரை பாராட்ட வேண்டும், காரணம் அவர் இயக்குநர் மட்டும் அல்ல தயாரிப்பாளர். நான் இரண்டு படங்கள் தயாரித்திருப்பதால், அதன் வலி எனக்கு தெரியும். இது மிக கஷ்ட்டமான விசயம். சினிமாவில் நான் 30 வருடங்களாக இருக்கிறேன். எங்கு சென்றாலும், எந்த தொழில் செய்தாலும், அதில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் தான் போடுவேன். படம் தயாரிப்பது சுலபம், ஆனால் வெளியிடுவது மிக மிக கடினமாகி விட்டது. படத்தின் டிரைலர், பாடல்களை பார்த்தோம், சிறப்பாக இருக்கிறது. திரில்லிங்காகவும், இண்டர்ஸ்டிங்காகவும் இருக்கிறது. இந்த படத்தை பத்திரிகையாளர்கள் தான் மக்களிடம் சேர்க்க வேண்டும்.

இன்று தமிழ் சினிமாவில் 10 ஹீரோக்கள் மட்டும் தான் இருப்பார்கள், அவர்கள் 100 கோடி, 200 கோடி என்று சம்பவளம் வாங்குகிறார்கள். ஆனால், சினிமாவில் ஆயிரக்கணக்கான ஹீரோ, இயக்குநர்கள் இருக்கிறார்கள், அவர்களை நமக்கு தெரியாது, தெரிந்தது எல்லாம் 10 பேரை தான். எனவே ரசிகர்களிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன், நீங்கள் சினிமா ரசிகர்களாக இருக்க வேண்டும், தனிப்பட்ட மனிதரின் ரசிகராக இருக்க கூடாது. புதிய முயற்சிகளையும், வித்தியாசமான கதைகளையும் ரசிக்கும் சினிமா ரசிகர்களாக மட்டுமே மக்கள் இருக்க வேண்டும். கேரளாவில் சிறு சிறு விசயங்களை வைத்துக் கொண்டு அதை அழகாக சொல்லி வெற்றி பெறுகிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் நான்கு பாடல், மூன்று சண்டைக்காட்சிகள் என்று இன்னமும் முழுக்க முழுக்க கமர்ஷியலாக தான் எடுக்க வேண்டி இருக்கிறது. எனவே, ரசிகர்கள் அனைத்து படங்களையும் பார்க்க வேண்டும், புதிய முயற்சிகளுக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். அப்போது தான் நல்ல படங்கள் வரும். எனவே, சின்ன படங்களுக்கு, நல்ல படங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க. இந்த ‘கஜானா’ படத்தின் மூலம் படக்குழுவின் கஜானா நிரம்ப வேண்டும், என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், “கஜானா மிக அழகான தலைப்பு, ரொம்ப பாசிட்டிவான தலைப்பு. இசையமைப்பாளர் அச்சுவின் பணி சிறப்பாக இருக்கிறது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சாம் அதிகம் பேச மாட்டார். இவ்வளவு பெரிய படம் எடுத்துவிட்டு ரொம்ப சாதாரணமாக இருக்கிறார். நான் இந்த படத்தை பார்த்தேன், மிக சிறப்பாக இருக்கிறது. படம் எடுப்பது கஷ்ட்டம் இல்லை, ஆனால் படத்தை ரிலீஸ் செய்வதில் தான் பாதி உயிர் போய்ட்டு வந்துவிடும். அப்படி ஒரு சூழ்நிலையில், இந்த படத்தை இவ்வளவு பெரிய அளவில் வெளியிடும் திருமலைக்கு வாழ்த்துகள், அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். படம் நன்றாக வந்திருக்கிறது. பத்திரிகையாளர்கள் சப்போர்ட் பண்ண வேண்டும், நன்றி.” என்றார்.

இயக்குநர் நடிகர் வேலு பிரபாகரன், எனக்கு ஃபேண்டஸி படங்கள் மிகவும் பிடிக்கும். நான் பல படங்கள் பார்த்திருக்கிறேன், ஆனால் நான் பார்க்காத பல விசயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. நாம் இதுவரை கற்பனையில் மட்டுமே பார்த்த விலங்குகளை இந்த படத்தின் மூலம் நம் கண்முன் நிறுத்த சாம் முயற்சித்திருக்கிறார். படம் மிக பிரமாண்டமாக வந்திருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும், சாம் அவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட படங்களை எடுப்பார், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.

இயக்குநர் பிரபதீஸ் சாம்ஸ், நடிகர் செண்ட்ராயன், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, படத்தை வெளியிடும் டி கிரியேஷன்ஸ் திருமலை, நடிகர் பியாண்ட்,  சிறப்பு விருந்தினர் நடிகர் கூல் சுரேஷ் உள்ளிடோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here