பிற மதத்தினருக்கு நிதியுதவி செய்வதுபோல் ஐயப்ப பக்தர்களுக்கும் அரசு உதவி செய்யவேண்டும்! -‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ பட விழாவில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேச்சு

தமிழில் ஐயப்ப பக்திப் படம் வெளிவந்து 33 வருடங்களாகிறது. அந்த குறையைப் போக்கும்விதமாக 60க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இணைந்து ஸ்ரீ வெற்றிவேல் ஃபிலிம் அகாடமி சார்பில் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை மற்றும் இயக்கம் என 6 முக்கிய பொறுப்புகளை இயக்குனர் ராஜா தேசிங்கு கையாண்டுள்ளார்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா, இயக்குநர் பேரரசு, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், ‘பார்மெட் நியூமராலஜி’ மகாதன் சேகர் ராஜா, துரை சங்கர், பாடகர் எஸ்.என்.சுரேந்தர், துரை கண்ணன், ஏ.கே.நாகேஸ்வர ராவ், வினோத் சங்கர், நடிகர்கள் முத்துக்காளை, சாம்ஸ், போண்டா மணி, பக்திப் பாடகர் வீரமணிதாசன், முத்து சிற்பி உள்ளிட்ட பலதுறைகளின் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், “இந்த படத்தை மக்கள் கொண்டாட வேண்டும். ஐயப்ப பக்தர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும், அரசுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். எங்கேயோ இருக்கிற நாட்டுக்கு செல்ல பிற மதத்தினருக்கு நிதி உதவி செய்யும் அரசு, தமிழகத்தில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்களில் மாவட்டத்திற்கு இரண்டாயிரம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும்.
இந்த படத்தின் டிரெய்லர் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் ஐயப்பனின் பெருமை உலகறிய செய்வதோடு, இந்து மதத்தின் பெருமையும் பேசப்படும் என்று நான் நம்புகிறேன். படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “தமிழகம் புண்ணிய பூமி. கடவுள்கள் நடமாடிய பூமி, இங்கு ஆன்மிகத்திற்கு எப்போதுமே அதிகமான வரவேற்பு உண்டு. இங்கு ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ போன்ற ஆன்மிக படங்கள் அதிகமாக வர வேண்டும். அது கிறிஸ்தவர், இஸ்லாமியர், இந்து என எந்த மதத்தை சேர்ந்த படமாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் பக்தி படங்கள் அதிகமாக வரண்டும். பக்தி படங்கள் அதிகமாக வந்தால் மக்கள் வாழ்க்கையும் வளம் பெறும்” என்றார்.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தினா பேசுகையில், ”படத்தின் இசையமைப்பாளார் பாபு ஆனந்த், எங்களது சங்க உறுப்பினர். அவர் பக்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாவது அவருடைய அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன். விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் ‘கும்பிட போன தெய்வம்’ என்ற பாடல் வரும். அது நான் இசையமைத்தது. அந்த பாடல் ஏராளமான கோவில்களில் ஒலித்தது. ஆடி மாதம் வந்துவிட்டால், அந்த பாடல் ஒலிக்காத கோவிலே இருக்க முடியாது, அப்படி ஒரு வெற்றி பாடலாக அமைந்ததோடு, நானும் அந்த பாடல் மூலம் பிரபலமடைந்தேன். ஒரு பக்தி பாடலுக்கே நான் பெரிய உயரத்தை தொட்டேன் என்றால், பக்தி படத்திற்கே பாபு ஆனந்த் இசையமைத்திருப்பதால் அவர் நிச்சயம் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார். ஐயப்பன் அருளால் அவர் பிரபலமடைவார்.

படத்தில் இயக்குநர் ராஜாதேசிங்கு மிக சிறப்பாக நடித்திருக்கிறார். மலைக்கு செல்பவர்கள் கடின பாதையில் நடந்து செல்லும் போது அவர்கள் உடம்பில் ஏற்படும் சோர்வு, அதை தவிர்க்க அவர்களின் உற்சாக ஆட்டம் என்று அனைத்தையும் மிக இயல்பாக செய்திருக்கிறார். நானும் ஒரு முறை சபரிமலைக்கு சென்றிருக்கிறேன், அந்த அனுபவத்தில் தான் செல்கிறேன். ராஜாதேசிங்கின் நடிப்பு இயல்பாக இருந்தது. நாயகன் உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

படத்தின் டிரெய்லரில், பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்று எவண்டா சொன்னது?’ என்ற கேள்வி கேட்கப்படுகிறது. பெண்கள் செல்வது சரியா? தவறா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், என் தனிப்பட்ட கருத்து பெண்களும் சபரி மலைக்கு செல்ல வேண்டும் என்பது தான்” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு படக்குழுவினர் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ படத்தின் நினைவுப் பரிசுகளை வழங்கி கெளரவித்தனர். திருத்தணி முருகன் கோவிலில் படக்குழுவினருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்ட பிரசாதத்தை கோவில் குருக்கள் நேரில் வந்து வழங்கினார்.

படம் பற்றி…

இந்த படத்தில் நாயகனாக விஜயபிரசாத் நடிக்க, நாயகியாக பூஜா நாகர் நடித்திருக்கிறார். இயக்குநர் ராஜாதேசிங்கு மிக முக்கியமான வேடத்தில் நடிக்க, கஞ்சா கருப்பு, சோனா, சாம்ஸ், முத்துக்காளை, ராஜேந்திரநாத், வடிவேல் கணேஷ், உடுமலை ரவி, மங்கி ரவி, போண்டா மணி, இந்தியன், ராஜாசாமி, விஷ்வகாந்த், சுமதி, சின்னாளப்பட்டி சுகி, லதா, சுவேதா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் மகாதேவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பாபு அரவிந்த் இசையமைத்துள்ளார். எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்ய, சஞ்சிவ் கண்ணா நடனக் காட்சிகளையும், சரவெடி சரவணன் சண்டைக் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here