எந்த குழந்தையிடம் இருந்து படத்தை ஆரம்பித்தோமோ அந்த குழந்தையை உங்கள் முன் காட்டுகிறோம்! ‘ஜோதி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நெகிழ்ச்சி

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஜோதி’ படத்தின் திரையிடலும், பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னையில் நடைபெற்றது.

படம் முடியும் வரை மிகவும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள், காட்சி முடிவில் பலத்த கரகோஷம் எழுப்பினர். அதுவே ஒரு நல்ல படத்திற்கான அடையாளமாக காணப்பட்டது.

ஒவ்வொரு பத்திரிகையாளரும் வெளியே வரும்போது திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களையும், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களையும் வாழ்த்தி இது மிகச்சிறந்த திரைப்படம் என பாராட்டு தெரிவித்தனர்.


பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா, இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், துணை நடிகர் ஹரி க்ரிஷ், தயாரிப்பாளர் SP ராஜா சேதுபதி மற்றும் இந்த உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி அந்த குழந்தையோடு குடும்பத்தாருடன் கலந்துகொண்டார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா கூறியதாவது,
இப்படம் ஒரு உண்மை சம்பவம் மட்டுமில்லாமல் பல உண்மை சம்பவங்களை உள்ளடக்கியது. வருஷத்துக்கு 40000 குழந்தைகள் தொலைந்து அதில் 11000 குழந்தைகள் கண்டுபிடிக்க படாமலே போகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 173 குழந்தைகள் காணாமல்போகிறது. இப்படம் ஒரு ஆணோட கோபத்தைவிட ஒரு பெண்ணோட அமைதி ரொம்ப ஆபத்தானது என்று நிச்சயமாக உணர்த்தும். வரும் ஜூலை 28 அன்று ஜோதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்று கூறினார்.

தயாரிப்பாளர் SP ராஜாசேதுபதி கூறியதாவது,
இந்த உண்மை சம்பவத்தை அறியும் போது இதை படமாக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். திரைப்படக்கல்லூரியில் கிருஷ்ண பரமாத்மா இயக்கிய குறும்படத்தை பார்த்து இருக்கிறேன். மிகவும் சிறப்பாக இருந்தது. அதனால் இந்த சம்பவத்தை எழுதி இயக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எந்த குழந்தையிடம் இருந்து, இந்த படத்தை ஆரம்பித்தமோ அந்த குழந்தையை கொண்டுவந்து உங்கள் முன் காட்டுகிறோம்” என்றார்.

சொன்னதோடு அக்குழந்தையையும், குடும்பத்தையும் மேடையேற்றினார். குழந்தை காணாமல் போன வலியால் அப்பெண்மணி பேச முடியாமல் கண்கலங்கினார்.

நடிகர் ஹரி க்ரிஷ் கூறியதாவது,
என்னை முதலில் ஒரு சிறிய கதாபாத்திரம் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். படப்பிடிப்புக்கு சென்ற பிறகுதான் தெரிந்தது எனது கதாபாத்திரம் எவ்வளவு பெரியது என்று. மற்றவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அந்த அளவிற்கு எனது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. படப்பிடிப்பின்போது எனது இரண்டுகால் ஜவ்வும் கிழிந்து மூன்றுமாத காலம் படுத்த படுக்கையாகவே இருந்தேன். அந்த அளவிற்கு கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறோம் எனக்கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here