கதாநாயகன் திருமணத்திற்குப் பிறகு சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவையோடு பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து காட்டியிருக்கிறோம்! -‘குடும்பஸ்தன்’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி

மணிகண்டன் நடித்து வெளியான ’குட்நைட்’, ‘லவ்வர்’ படங்களின் அடுத்தடுத்த வெற்றியையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘குடும்பஸ்தன்’ உருவாகியுள்ளது.

இந்தப் படம் ஜனவரி 24 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் படம் பற்றி பேசிய இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, “’குடும்பஸ்தன்’ என்னுடைய சொந்த அனுபத்தில் இருந்து உருவான கதை. பின்னர், நானும் பிரசன்னா பாலச்சந்திரனும் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதத் தொடங்கினோம். கதையாக எழுதும்போதே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பார்வையாளர்கள் தங்களுடன் நிச்சயம் பொருத்திப் பார்ப்பார்கள். குடும்ப வாழ்க்கை என்பது பொறுப்புடன் கூடிய ஆனந்தமான அனுபவம். இந்தக் கதையில் நம் கதாநாயகன் திருமணத்திற்குப் பிறகு சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்குடன் காட்டியிருக்கிறோம்.

நம் பக்கத்து வீட்டுப் பையன் போலவே இருக்கும் மணிகண்டன் படத்தில் தனது தேர்ந்த நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்வார். தனது நூறு சதவீத உழைப்பைக் கொடுத்துள்ளார். இந்த படத்தை ஊக்குவித்த தயாரிப்பாளர் வினோத் குமாருக்கு எனது மனமார்ந்த நன்றி. ’குடும்பஸ்தன்’ சிரிப்பு விருந்தாக மகிழ்ச்சியான அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும்” என்றார்.

’குடும்பஸ்தன்’ படத்தில் மணிகண்டன், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வைசாக் இசையமைத்திருக்க, சுஜித் என் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here