Home சினிமா சமூக அவலங்கள் வரிகளாக்கியிருக்கும் இந்தப் பாடல் நெஞ்சை ஆழமாகத் தொடுகிறது; இது எல்லா கிராமங்களிலும் கட்டாயமாக...

சமூக அவலங்கள் வரிகளாக்கியிருக்கும் இந்தப் பாடல் நெஞ்சை ஆழமாகத் தொடுகிறது; இது எல்லா கிராமங்களிலும் கட்டாயமாக ஒலிக்க வேண்டிய பாடல்! –‘குயிலி’ பட விழாவில் தொல் திருமாவளவன் பேச்சு 

நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கியுள்ள ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்வில் பேசிய கதைநாயகி நடிகை லிசி ஆண்டனி, ”சுய விருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய நான்கு விஷயங்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள். இதைத்தான் நான் என் வாழ்க்கையில் தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். இந்த விஷயங்களை தயாரிப்பாளர் அருண்குமாரிடமும் நான் பார்த்தேன்.

இந்தப் படத்திற்கான அழைப்பு அவரிடம் இருந்து தான் எனக்கு முதலில் வந்தது. அவரே இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். என் வாழ்க்கையில் முதல் முதலாக தயாரிப்பாளர் ஒருவர் கதையை அழகாக சொன்னது என்றால் அது இவர் தான். அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. இந்த திரைப்படம் பேசும் விஷயமும் எனக்கு பிடித்திருந்தது. இந்த படத்திற்கு ‘குயிலி’ என்று தான் தலைப்பு இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். உடனே அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார். படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் ப. முருகசாமி, ”இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக பணியாற்றும்போதுதான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை பற்றி வாசித்தேன். அதன் மூலமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கூகை திரைப்பட இயக்கத்தில் இணைந்து திரைப்படக் கல்வியைக் கற்றேன். அதைவிட முக்கியமான அரசியல் கல்வியையும் கற்றேன். எளிய மக்களின் வாழ்வியலையும் அங்கு தான் கற்றுக் கொண்டேன். அதன் மூலமாகத்தான் நல்லதொரு படைப்பை உருவாக்க முடிந்தது” என்றார்.

தயாரிப்பாளர் அருண் குமார், ”இந்த படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்?எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக உருவாகி இருக்கிறது.‌ இதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக் கொண்டால்.. அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறோம்” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், ”இந்த கால சூழலில் சமூக பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒரு திரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக்குநர் முருகசாமிக்கும், தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் இருப்பதை பாராட்டுகிறேன். நெஞ்சார வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற முதல் பாட்டை கேட்டேன். இந்த அவலங்களை எல்லாம் வரிகளாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடல் நம் நெஞ்சை ஆழமாக தொடுகிறது. மிக மிக இன்றியமையாத ஒரு பாடல். எல்லா கிராமங்களிலும் கட்டாயமாக ஒலிக்க வேண்டிய பாடல். எல்லோரும் தங்களுடைய அலைபேசியில் வைத்திருக்க வேண்டிய பாடல். விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பாடல். இசையும் மிகச் சிறப்பாக இருக்கிறது. வேட்டவலம் த. ராமமூர்த்தி இப்பாடலை எழுதியிருக்கிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

‘குயிலி’ படத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கருதாமல் விழிப்புணர்வை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும். சில இளைஞர்களையாவது இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். துயரத்திற்கு ஆளாகாமல் தடுக்க முடியும். இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும்.

மதுக்கடைகளை மூடும் வரை ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதை மறுவாழ்வு மையம் இடம்பெற வேண்டும், இது என்னுடைய கோரிக்கை. இதனை தமிழக முதலமைச்சரிடமும் தெரிவித்து இருக்கிறேன். அனைத்து மருத்துவமனைகளிலும் உளவியல் ஆலோசனை மையம் இடம்பெற வேண்டும். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.

மதுப்பழக்கம் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. சமூகத்தையே பாதிக்கிறது.‌ எனவே மது மற்றும் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிறகு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன், இந்த படம் குடிகாரர்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். படத்தில் கவர்ச்சி இல்லை, ஓரளவு அறிமுகமான நடிகர்களை வைத்து இயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். குடியினால் என்ன கொடுமை நடைபெறுகிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள்” என்றார்.

நடிகை தாஷ்மிகா, இயக்குநர் ஸ்ரீஜர், பாடலாசிரியர் வேட்டவலம் த. ராமமூர்த்தி, இசையமைப்பாளர் ஜூ ஸ்மித், இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரும் நிகழ்வில் படம் குறித்து பேசினார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்