பிரபு சாலமன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கும்கி 2’ படத்திலிருந்து, ‘பொத்தி பொத்தி உன்ன வச்சு’ எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மென்மையான மெலடி இசை மற்றும் மயக்கும் குரலில், பாடலாசிரியர் மோகன் ராஜின் அற்புத வரிகளில் அமைந்துள்ள அந்த பாடல், ஒரு சிறுவனுக்கும் யானைக்குமான உறவை, அன்பை, அழகாக வெளிப்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் அவர்களின் கண்களை குளுமையாக்கும் காட்சிகளும், நிவாஸ் கே பிரசன்னாவின் சொக்க வைக்கும் இசை, யானையோடு விளையாடும் சிறுவனின் கள்ளம் கபடமற்ற அன்பு, இயற்கை எழில் கொஞ்சும் காடு என, இப்பாடல் பார்த்தவுடன் மனதை பறிக்கிறது. வெளியான வேகத்தில் இப்பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிரபு சாலமன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘கும்கி’ 13 வருடங்களைக் கடந்தும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அப்படத்தின் மையத்தை வைத்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 படத்தை உருவாக்கி வருகிறார்.
படத்தில் மதி எனும் அறிமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். காட்டிலும், யானையுடனும் வெகு துணிச்சலாக நடித்து முதல் படத்திலேயே கவர்ந்திழுக்கிறார். அவருடன் இப்படத்தில் ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் இந்த படம் ரசிகர்களையும் புதிய தலைமுறையையும் கவரும் நோக்கில் உருவாகியுள்ளது; விரைவில் திரைக்கு வரவுள்ளது.

