ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘கலியுகம்.’ இந்த படத்தை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியிருக்கிறார். பிரைம் சினிமாஸ்நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர். கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் படத்தின் கருப்பொருளை நுட்பமான விவரங்களுடன் இடம்பெற செய்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பிரமோத் சுந்தர் பேசுகையில், ”மூன்றாம் உலகப்போருக்கு பிறகு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ‘கலியுகம்’ விவரிக்கிறது. போரின் பின் விளைவுகள் மற்றும் அதன் விளைவாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் சந்திக்கவிருக்கும் இழப்புகள் உள்ளிட்ட பல சமகால நெருக்கடிகளும் திரைக்கதையில் இடம்பெற்றிருக்கிறது” என்றார்.
போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து, இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.
படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

