கடலும் திகிலும் கைகோர்க்க ஜி வி பிரகாஷ் சாகச மன்னனாக களமாடியிருக்கும் ‘கிங்ஸ்டன்.’
அது மீனவ கிராமம். ஆனால் அந்த பகுதி மக்கள் மீன் பிடிக்க கடலுக்குள் போவதில்லை. மீறி போனால் அவர்கள் திரும்பி வருவதில்லை. அதற்கு காரணம் அமானுஷ்ய சக்தி, பேய் நடமாட்டம், கடல் சாபம் என ஏதேதோ சொல்லப்படுகிறது. அந்த நம்பிக்கைகளால் கடலுக்குள் செல்ல தடை பல ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருக்கிறது.
சிறுவயதிலிருந்தே கடலுக்குள் போக நினைத்துக் காத்திருக்கும் மீனவ குடும்பத்து வாரிசான கிங்ஸ்டன், வளர்ந்து இளைஞனானபின் கடலுக்குள் அப்படி என்னதான் இருக்கிறது, அப்படி என்னதான் நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள நண்பர்களுடன் புறப்படுகிறான்.
அந்த துணிச்சலான பயணத்தில் அவனும் அவன் கூட்டாளிகளும் சந்திக்கிற பிரச்சனைகள் அத்தனையும் ஆபத்தாக இருக்க, தெரிந்துகொள்கிற உண்மைகள் அத்தனையும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு கட்டத்தில், அவர்கள் உயிருடன் கரைக்கு திரும்புவது சாத்தியமில்லை என்ற நிலைமை உருவாகிறது.
அவர்கள் உயிர் பிழைத்தார்களா இல்லையா என்பது கிளைமாக்ஸ்…
கிங்ஸ்டனாக ஜி வி பிரகாஷ். கடலுக்குள் போகும் ஆர்வத்துடன் சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பது, சந்தர்ப்பம் அமைந்தபின் ஏகப்பட்ட சிரமங்களைத் தாண்டி போட்டை கடலுக்குள் செலுத்துவது, கடலில் ஆயிரக்கணக்கான மனித மண்டையோடுகளைப் பார்த்து அதிர்வது என தந்திருக்கும் பங்களிப்பில் எனர்ஜி பொங்கி வழிகிறது.
டூயட்டில் ஆடிவிட்டுப் போகிற வழக்கமான காதலியாக இல்லாமல் கதையோடு இணைந்து உணர்வுபூர்வமான நடிப்பைத் தந்திருக்கிறார் திவ்யபாரதி.
கடலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு கடத்தல் தொழிலை சுதந்திரமாக செய்கிற, தன்னை எதிர்ப்பவர்களை அழிக்கிற கதாபாத்திரத்தை ஏற்று பொருத்தமான அரக்க குணத்தை வெளிப்பபடுத்தியிருக்கிறார் சபுமோன் அப்துல்சமத்.
ஜீவி பிரகாஷின் நண்பர்களாக ஆண்டனி, அருணாசலேஸ்வரன், ராஜேஷ் பாலச்சந்திரன், தாத்தாவாக இளங்கோ குமரவேல், பிளாஷ்பேக்கில் வருகிற சேத்தன், அழகம் பெருமாள் என அத்தனைப் பேரும் கதையின் தேவையை கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார்கள்.
இரவு பகலுக்கேற்ப, தட்பவெப்ப சூழலுக்கேற்ப ஒளியுணர்வைத் தரும் விதமாக கடற்கரை கிராமம், கடல் வெளி என கழுகுப்பார்வையில் கேமராவை சுழற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய்.
கிராபிக்ஸ், வி எப் எக்ஸ், ஆர்ட் டிபார்ட்மெண்ட் என ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறையினரின் கடுமையான உழைப்பை பெற்று காடசிகள் தரம் உயர்ந்திருக்கின்றன.
பின்னணி இசையில் அதிரடி ஆர்ப்பாட்டமாக தூக்கலாக கலந்திருக்க, கதையோட்டத்தில் சங்கமமாகிற பாடல்களுக்கு இதமாக மிதமாக கீ போர்டை இசைத்திருக்கிறார் ஜீ வி பிரகாஷ்.
பேய்ப் படம், ஃபேண்டசி படம், சாகசப் படம் என எல்லா ஜானரையும் கலந்துகட்டி தொழில்நுட்ப ரீதியாக வேற லெவல் உணர்வைத் தந்தாலும்,
பெரிதாய் எந்த தாக்கத்தையும் தராத கதையால், குழப்பியடிக்கும் திரைக்கதையால், வலுவாக கட்டமைக்கப்படாத கதாபாத்திரங்களால் படம் சுனாமியில் சிக்கிய படகாகியிருக்கிறது.