இந்த படத்தில் எத்தனை நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள் என பட்டியலிடத் தொடங்கினால் அடிஷ்னல் பேப்பர் தேவைப்படும். அந்தளவுக்கு கும்பமேளா கூட்டமாய் ஏகப்பட்ட கலகலப்பு பார்ட்டிகளை இழுத்துப்போட்டு காமெடி திருவிழா நடத்தியிருக்கிறது ‘லெக் பீஸ்.’
அந்த இளைஞன் சுறுசுறுப்பாக மார்க்கெட் பகுதிக்கு போகிறான்; ஒவ்வொரு கடையிலும் இருக்கிற மைக் இணைத்த ஸ்பீக்கரை கையிலெடுக்கிறான்; கடைக்காரரிடம் ‘உங்களுக்கு என்ன வாய்ஸ் வேணும்?’ என்று கேட்கிறான்; ஒருவர் விஜய் என்கிறார், இன்னொருவர் அஜித் என்கிறார், மற்றவர் விஜய்காந்த் என்கிறார். அவர்கள் விரும்பும் குரலில் பேசி வியாபாரம் செய்கிறான்.
இப்படி ஆரம்பக் காட்சியிலிருக்கும் சுவாரஸ்யம் கடைசிவரை குறையவில்லை என்பது விசேச செய்தி.
கதையென்று பார்த்தால்…
‘பேய்’ முருகேசன், ‘குயில்’ குமார், ‘திடீர்’ திருப்பதி, ‘மிமிக்ரி’ கோபி என நான்கு இளைஞர்கள் ஒரு இடத்தில் கீழே கிடந்த 2000 ரூபாயை எடுத்துக்கொண்டு பாருக்கு போகிறார்கள்; நன்றாக குடிக்கிறார்கள்; கையிலிருந்த பணத்தைக் கொடுத்தால் அது கள்ள நோட்டு என்கிறார் பார் மேனேஜர். அந்த நான்கு பேரும் அதே பாரில் அடைக்கப்படுகிறார்கள். பார் முதலாளியைப் பார்த்து ஜோசியக்காரரான திடீர் திருப்பதி, ‘நீ இன்னும் அரை மணி நேரத்தில் இறக்கப் போகிறாய்’ என்கிறார்.
அடுத்த சில மணி நேரங்களில் பாருக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடக்க, ஐந்தாறு பேர் பரலோகம் போய்ச் சேர, அதற்கெல்லாம் காரணம் அந்த நான்கு பேர்தான் என போலீஸ் சந்தேகப்பட…
அந்த விவகாரத்திலிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா? கள்ள நோட்டு அவர்களின் கைக்கு வந்தது எப்படி? துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் யார்? அவர்களால் கொலை செய்யப்பட்டவர்களின் பின்னணி என்ன? இப்படியான கேள்விகளுக்கு பதில்களைத் தருகிறது மீதிக் கதை.
கதை செமத்தியான கிரைம் திரில்லராக தெரிந்தாலும், திரைக்கதை சிரிப்புப் பட்டாசாக மாறி ரசிகர்களை நிமிடத்துக்கு நிமிடம் குஷிப்படுத்துகிறது.
பேய் முருகேசனாக இயக்குநர் ஸ்ரீநாத், மிமிக்ரி கோபியாக ரமேஷ் திலக், திடீர் திருப்பதியாக கருணாகரன், குயில் குமாராக மணிகண்டன்.
கிளி ஜோசியராக வருகிற கருணாகரன் பெயருக்கு முன் ‘திடீர்’ என்ற அடைமொழி ஒட்டிக்கொண்ட எஸ்டிடியே இன்ட்ரஸ்டிங்காக இருக்க, ஏடாகூடமான சூழலில் மனதில் நினைத்ததைச் சொல்லி சுளுக்கெடுப்புக்கு ஆளாவது,
சிக்குமுடி வாங்குவதை தொழிலாக செய்கிற குயில் குமார், காதல் கல்யாணம் என சிக்கலான ரூட்டில் பயணிக்க விரும்பாமல் காம உணர்வை பலரிடம் தீர்த்துக் கொள்வது, கொலைப்பழியிலிருந்து தப்பிக்க பார் மேனேஜரின் மனைவியை மயக்கி வேட்டையாடுவது,
கள்ள நோட்டு மாற்றம், கொலைக் குற்றம் என பிரச்சனையில் சிக்கியவர்களை போலீஸ் அதிகாரியே ஒரு பணக்காரருக்கு பாதுகாவலர்களாக நியமிப்பது,
பேய் ஓட்டுவதற்கு பேய் ஓட்டுபவரை கூப்பிட்டால் செலவாகும் என்பதால், தானே பேய் ஓட்ட தீர்மானித்து காந்தரா கெட்டப்பில் விடிவி கணேஷ் போடும் ஆட்டம்,
பாஸ்போர்ட்டுக்கு போட்டோ எடுக்க மாணிக் பாஷாவாக மாறுவேடத்தில் கிளம்புகிற ரவி மரியா,
கொலைக் குற்றவாளிகளை அடையாளம் காட்டுகிறேன் என்ற பெயரில் பழைய நடிகர்கள் நாகேஷ், அசோகன் சாயலில் திரிபவர்களை போலீஸில் போட்டுக்கொடுக்கிற யோகிபாபு… இப்படி படத்தில் ரசிக்க வைக்கிற காட்சிகளுக்கும் ரசிக்க வைக்கிற நடிகர்களுக்குப் பஞ்சமில்லை.
போலீஸ் அதிகாரியாக ஜான் விஜய், பார் உரிமையாளராக மொட்டை ராஜேந்திரன், வில்லனாக மதுசூதன் என மற்றவர்கள் கொடுத்த பணியை பக்காவாக செய்திருக்க,
இயக்குநர் ஸ்ரீநாத் பேய் ஓட்டுபவராக இறந்தவர்களை அடையாளம் காண்கிற காட்சிகளில் சிரிக்க வைத்து, ‘பிளாஷ்பேக்’கில் கண்கலங்க வைக்கிறார்.
யோகிபாபுவின் மனைவியாக வருகிற அஸ்மிதாவை கதையின் தேவைக்காக கள்ள உறவுக்குள் தள்ளியதெல்லாம் சரிதான். அந்த மஸ்கரா மல்கோவாவுக்கு ஒரு பாட்டைக் கொடுத்திருந்தால் இறங்கிக் குத்தி கிறங்க வைத்திருப்பார்.
அனிருத் குரலில் ‘டிக்கில டிக்கில’ பாட்டு உற்சாகமூட்ட, பாடலில் ஆடும் அம்மணியின் வளைவு நெளிவுகள் தருகிற மின்சாரப் பாய்ச்சல் எக்கச்சக்கம். டி ராஜேந்தர் பாடியிருக்கும் ‘சிக்காங் கொக்காங்’ பாட்டு எழுந்து ஆடவைக்கும். இசை பிஜோர்ன் சுர்ரா
ஒளிப்பதிவாளர் மாசாணி, படத்தொகுப்பாளர் இளையராஜா உள்ளிட்டோரின் பங்களிப்பு நேர்த்தி.
எஸ்.ஏ.பத்மநாபனின் வசனங்களில் காமெடிக்கும் காமநெடிக்கும் குறைவில்லை.
ஒரு மிகப்பெரிய வக்கிரம் நிறைந்த குற்றச் செயல், அதற்கான பழிவாங்கல் என ஒரு பரபரப்பான கதையை எடுத்துக் கொண்டு, அதை சிரிப்பு மசாலாவில் புரட்டிக் கொடுத்திருப்பது இயக்குநர் ஸ்ரீநாத்தின் சாமர்த்தியம்.
லெக் பீஸ் _ அலப்பரை அன்லிமிடெட்!
-சு.கணேஷ்குமார்