படத்தயாரிப்பு என்பது வீட்டுக்கு வெள்ளையடிக்கிற விசயம் இல்லை! -மனைவிக்கு சொன்ன அறிவுரையை எல்.ஜி.எம். பட விழாவில் தெரிவித்த கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி

கிரிக்கெட் வீரர் தோனி, அவருடைய மனைவி சாக்ஷி இருவரும் இணைந்து தயாரித்துள்ள எல்.ஜி.எம். (LGM – Lets Get Married) காமெடி காட்சிகள் நிறைந்த, குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண், கதாநாயகியாக இவானா, பிற கதாபாத்திரங்களில் நதியா, யோகி பாபு, மிர்ச்சி’ விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் தமிழ்மணி படத்தை இயக்கி, இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் 10.7.2023 அன்று நடந்தது.

நிகழ்வில் தோனி பேசும்போது, ‘‘இது ஜாலியான படம். நான் மகளோடு சேர்ந்து பார்த்தேன். மிகச் சிறப்பாக உருவாகியிருக்கிறது. மகளுக்கும் படம் பிடித்திருக்கிறது. மொத்தத்தில் அனைவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

எனக்கு என் தயாரிப்பு அணியை பார்க்கும் போது பலம் வருவது போல் உணர்கிறேன். அவர்கள் இந்த தயாரிப்புப் பணியை கையாண்ட முறையைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

இயக்குநர் ரமேஷ் தமிழ்மணியும் கட்டிடக்கலை நிபுணர் தான். என் மனைவி என்னிடம் படத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று சொன்ன போது, நான் அவளிடம் சொன்னது ஒன்று தான். படத் தயாரிப்பு என்பது நீ நினைப்பது போல் வீட்டு சுவருக்கு வெள்ளையடிக்கின்ற விசயம் இல்லை. நீ முதலில் ஒரு கலர் அடிப்பாய், பின்னர் அது நன்றாக இல்லை என்று வேறு கலர் அடிப்பாய். பின்னர் தான் தோன்றும் முதல் கலரே இதைவிட நன்றாக இருந்தது என்று. பின்னர் நீ மீண்டும் முதல் கலரையே அந்த சுவற்றுக்கு அடிப்பாய். படத் தயாரிப்புப் பணியில் அப்படி செய்ய முடியாது.

கதை என்ன, யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை நீயே முடிவு செய். இதை தயாரிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால், பின்னர் எதைப் பற்றியும் யோசிக்காதே, அந்த வேலையை தொடங்கிவிடு, மற்ற எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று சொன்னேன். படக்குழுவினர் சொன்ன நாட்களுக்குள் படத்தை முடித்திருப்பதற்கு அதுவும் முக்கியமான ஒரு காரணம்.

நான் என் குழுவினரிடம் ஒரு விசயத்தில் உறுதியாக இருக்கும்படி கூறினேன். அது உணவு. நடிகர்களுக்கான உணவோ, அல்லது மொத்த படக்குழுவினருக்கான உணவோ, யாருக்கான உணவாக இருந்தாலும் அது உயர்ந்த தரமான உணவாக இருக்க வேண்டும் என்பது தான். நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போதும் எதிர்பார்ப்பது நல்ல தரமான உணவு மட்டும் தான்.
சாக்ஷி இப்படத்தின் கதையை என்னிடம் கூறினார், அதன் பின், இப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்தோம்.

எனக்கு விதியின் மீது நம்பிக்கை உண்டு. என்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் சென்னையில் தான், நான் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்ததும் சென்னையில் தான். நினைத்துப் பார்த்து சந்தோஷப்படும் பல சம்பவங்கள் சென்னையில் நடந்துள்ளது. தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் அரவணைப்பும் நம்பவே முடியாத ஒன்று. மேலும், தமிழ் நாடு என்னை தத்தெடுத்துள்ளது.

இந்த ஆண்டு நாங்கள் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு பின்னர் சாம்பியன் ஆனது மறக்க முடியாத தருணம். நான் செல்லும் இடமெல்லாம் சிஎஸ்கே-வின் அன்பு என்னை தொடர்கிறது. இதெல்லாம் தான் இப்படத்தை தமிழில் தயாரிக்க காரணம்.இப்படம் வெகு சீக்கிரத்தில் வெளியாக இருக்கிறது. மிகவும் ஜாலியான திரைப்படமாக இது இருக்கும்.

மூன்று நபர்களுக்கு இடையேயான சமன்பாடு தான் இத்திரைப்படம். அந்த மூவர் மகன், மருமகள், மாமியார், அம்மா மற்றும் மனைவிக்கு நடுவில் ஷாண்ட்விச் போல் மாட்டிக் கொண்டவர் தான் மகன். இதைத்தான் இப்படம் கலகலப்பாக பேசுகிறது” என்றார்.

நிகழ்வில் சாக்ஷி தோனி, நாயகன் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, நடிகர் யோகிபாபு, நடிகை நதியா, படத்தின் இணை தயாரிப்பாளர் ஷர்மிளா ஜெ ராஜா, மிர்ச்சி’ விஜய், பட விநியோகஸ்தர் ‘சக்தி பிலிம் பேக்டரி’ சக்திவேலன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here