‘மைனா’ சேது, சம்ரிதி நடிப்பில், ஏ பி ஜி ஏழுமலை இயக்கியுள்ள ‘மையல்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் ஏழுமலை, “இந்த ‘மையல்’ உருவாக காரணம் சேதுதான். எல்லாப் புகழும் என் கதாநாயகன் சேதுவுக்குதான். என் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. சவுந்தர்யன் சாருடைய மகன் அமர் இந்தப் படத்தில் அழகாக இசையமைத்திருக்கிறார். படத்திற்காக அயராது உழைத்திருக்கும் படக்குழுவினருக்கு நன்றி. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை” என்றார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் இயக்குநர் அழகாக செதுக்கியுள்ளார். ‘மையல்’ இல்லை என்றால் மனிதமே இல்லை. ஆண் பெண் மீதும், பெண் ஆண் மீதும் மையல் கொள்ளவில்லை என்றால் இனப்பெருக்கமே இல்லை. இந்த ‘மையல்’ மிகப்பெரிய வெற்றியை மனித குலத்திற்கு தர இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.
இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இந்த படத்தின் பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது பழைய பாரதிராஜா படங்களைப் பார்ப்பது போல இருக்கிறது. படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்!” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன், ”’மையல்’ என்ற தலைப்புக்கே என்ன அர்த்தம் என்பதை இங்கே வந்திருக்கும் அனைவரும் அறியும்படி இயக்குநர் செய்திருப்பது சிறப்பு. பாடல், போஸ்டர் எல்லாம் பார்க்கும்போது ‘பருத்திவீரன்’ கார்த்தி, ப்ரியாமணி போல உள்ளது. ஆக்ஷன் மோடுடன் நல்ல திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுபோன்ற நிறைய நல்ல படங்கள் வரவேண்டும். ’டூரிஸ்ட் ஃபேமிலி’ போல இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் பேரரசு, “‘மைனா’ படத்தின் கதாநாயகன் விதார்த்தாக இருக்கலாம். ஆனால், சேதுதான் அங்கு அடுத்த கதாநாயகன். இந்தப் படத்தில் அவருக்கு நல்ல ஜோடி அமைந்துவிட்டது. அமலாபால் போலவே இந்தப் படத்திலும் நல்ல ஹீரோயின் அமைந்து விட்டார். கதையும் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு வாழ்த்துக்கள்”
தயாரிப்பாளர் அனுபமா விக்ரம் சிங், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், பாடலாசிரியர் ஏகாதிசி, மாஸ்டர் கனல் கண்ணன், தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.