பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும் நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ் கதையின் நாயகனாக நடிக்க, ஷாஜிதா நாயகியாக நடிக்க, எஸ் அருள்பிரகாசம் இயக்கியுள்ள படம் ‘மனசும் மனசும் சேர்ந்தாச்சு.’
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”நெருப்பைத் தொட்டுத்தான் சூட்டை உணர முடியும் என்பது உண்மை அல்ல. வாழ்க்கையில் பட்டுத்தான் கற்க முடியும் என்பதும் உண்மையல்ல. பார்ப்பதை, கேட்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்தாலே நாம் வாழ்வதற்கான அர்த்தம் புரிந்து விடும். அப்படி ஒரு உண்மை காதல் ஒவ்வொரு வீட்டிலும் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இந்த படம் அப்படிப்பட்ட காதலை மையப்படுத்தி, ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
ஒவ்வொருவரின் பருவ வயதில் ஏற்படும் காதல் உருவம் இல்லாமல் ஒவ்வொரு நிமிடமும் சேர்ந்தாலும் பிரிந்தாலும் நம் நினைவில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. காற்றும், காதலும் ஒன்று தான். அது தான் நம்மை இயங்க வைக்கிறது.
என்பதை உணரும் நாம் மற்றவருக்கு உணர்த்த முடியாது உணர்வில் கலந்த காதல் உண்மையில் என்ன செய்யும்? அந்த காதலை நாம் கடந்த பாதை கடக்க முடியாமல் கண்ணீருடன் காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் நம் மனநிலை இவற்றை கூறும் இந்த படம் பார்ப்பவர்களின் ஒவ்வொரு மனதையும் நிச்சயம் ஸ்கேன் செய்யும். ரிசல்ட் உங்களின் ஆதரவில் இந்த படத்திற்கு கிடைக்கும் வெற்றி தான்” என்றார்.
இந்த படத்தில் கராத்தே ராஜா, சத்யன் அன்புச்செல்வி, முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் எஸ் அருள்பிரகாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

