ரத யாத்திரை துவக்கம், பார்வையற்றவர்கள் கேட்டுணர அவர்கள் முன்னிலையிலேயே ஸ்பெஷல் ஆடியோ டிரெய்லர்’ வெளியீடு… ‘மாயோன்’ படக்குழு அசத்தல்

டபுள் மீனிங் புரொடக்ஷன் (Double Meaning Production) சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்துள்ள படம் ‘மாயோன்.’ இந்த படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வரும் ஜூன் 24-ம் தேதி வெளியாகிறது.

என். கிஷோர் இயக்கத்தில், சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இந்த படம் கடவுள், அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை புத்தம் புதிய களத்தில் பயணிக்கும் விதத்தில் உருவாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அதையடுத்து சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் படத்தின் விளம்பர முன்னோட்ட நிகழ்வு இன்று நடந்தது.

ஒரு வாகனத்தில், மாயோன் படத்தில் வரும் விஷ்ணு சிலை வைக்கப்பட்டு ரதம் போல் வடிவமைக்கப்பட, அதில் ‘மாயோன்’ பட விளம்பரங்களும் இடம்பெற்றிருந்தது. இன்றைய நிகழ்வில் ரதத்தின் பயணம் படக்குழுவினரால் துவக்கி வைக்கப்பட்டது. (இந்த ரதம் 40 நாட்கள், தமிழகம் முழுவதும் வலம் வரப்போகிறது.)

அதை தொடர்ந்து, மாயோன் படத்துக்கு தொடர்புடைய காட்சிகளை விளக்கும் விதத்தில் மகாபாரதக் கதையிலிருந்து சில பகுதிகள், நம் பாரம்பரிய கலையான தோல் பாவைக் கூத்தாக நிகழ்த்தப்பட்டது.

அடுத்ததாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படிருந்த, ஆடியோ விளக்கத்துடன் கூடிய டிரெய்லர், பார்வையற்றவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அகல் பவுண்டேசனை சேர்ந்த பார்வையற்றவர்கள் இந்த சிறப்பு டிரெய்லரை கேட்டுணர்ந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படம் வெற்றி பெற தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நிகழ்வில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம், ”நான் இப்படத்தில் நடிப்பதாக எல்லாம் ப்ளான் இல்லை. ஆனால் படத்தின் போது ஒரு காட்சி தான் என சொல்லி என்னை நடிக்க வைத்து விட்டார்கள். எனக்குள் பல காலம் இருந்த கதை. உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். சைக்கோ படத்தை பார்த்தபிறகுதான் பார்வையற்றோருக்கு டிரெய்லர் உருவாக்க வேண்டும் என்ற ஐடியா முதலில் தோன்றியது. எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒரு சமூக அக்கறையாக இதை செய்தோம். சைக்கோ படத்தின் போது பார்வையற்றோருக்கு திரையிட்டபோது அவர்களின் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி என் மனதிற்கு மிகப்பெரும் சந்தோசத்தை தந்தது. அப்போது என் எல்லா படத்தையும் பார்வையற்றோர் ரசிக்கும்படி வெளியிட வேண்டும் என முடிவு செய்தோம். இப்படம் நீங்கள் எதிர்பார்க்காத புதிய அனுபவத்தை தரும்” என்றார்.

இயக்குநர் கிஷோர், ”சிபிராஜ் புதுமையான கதைகள் செய்பவர். அதனால் அவரிடம் சொன்னோம். அவருக்கு பிடித்திருந்தது. படத்தில் கே எஸ் ரவிக்குமார், மாரிமுத்து, பக்ஸ் என ஒவ்வொருவருமே படத்திற்கு பொருத்தமாக அமைந்தார்கள். படத்தை நிறைய உழைப்பில், நிறைய பொருட்செலவில் உருவாக்கியுள்ளோம். இந்த படம் பிரமாண்டமாக உருவாக அருண்மொழி சார் தான் காரணம். அவர் படம் தான் முக்கியம் என புரிந்து கொண்டு படத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்தார் மேலும் ஓடிடி வாய்ப்பு இருந்தும் படத்தை திரையரங்கில் தான் கொண்டு வருவேன் எனும் அவரின் நம்பிக்கைக்கு நன்றி. படத்தின் கதைக்கு கந்தர்வ இசை தேவைப்பட்டது. அதற்கு இளையராஜாதான் பொருத்தமாக தோன்றினார். ஆகவே அவரை அணுகினோம். இப்படத்தின் கதை இந்தியா முழுக்க எளிதாக புரிந்து உணர்ந்துகொள்ள கூடிய கதையாக இருக்கும்” என்றார்.

நடிகர் சிபிராஜ், ” ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘டாவின்சி கோட்’ படங்களெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது போன்ற ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது இந்தப்படத்தில் நிறைவேறியது. இளையராஜா இசையில் ஒரு படம் பண்ண வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கும் .அதுவும் இந்தப்படத்தில் எனக்கு கிடைத்துள்ளது. இந்தப்படம் சாமி படமெல்லாம் இல்லை. அதைத்தாண்டி நிறைய இருக்கிறது” என்றார்.

நாயகி தான்யா ரவிச்சந்திரன், ”இந்தப் படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. கெஸ்ட் ரோல் போல் இல்லாமல் படம் முழுதும் வருவது மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்” என்றார்.

நடிகர் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், ”நான் இந்தப்படத்தில் ஒரு நடிகன் தான். இது கடவுள் படம் என நினைத்து விட வேண்டாம். இதில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது. இந்தப்படத்தில் படப்பிடிப்பில் ஒரு குகை மாதிரி இடத்திற்கு சென்றோம். அங்கு உள்ளே ஒரு கோயிலே அமைத்திருந்தார்கள். அந்த கலை இயக்கம் பார்த்து பிரமித்தேன். இந்தப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்” என்றார்.

நடிகர் மாரிமுத்து, ”இந்த படம்இதுவரை நாம் பயணப்படாத ஒரு பாதையில் பயணிப்பது போன்ற உணர்வை கொடுக்கும். இந்த பூமியில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதனால் இந்த மாதிரி கதை எழுத பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டும். அப்படி ஆராய்ச்சி செய்து கதை எழுதப்பட்ட படம் இது” என்றார்.

படத்தின் டிரெய்லர்:-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here