காதல் த்ரில்லராக ‘மகா மகா’ என்ற படத்தையும், டெலிபதியை அடிப்படையாக வைத்து ‘நுண்ணுணர்வு’ என்ற படத்தையும் இயக்கியவர் மதிவாணன் சக்திவேல். அவரது மூன்றாவது படம் ‘ஒற்று.’ சர்வதேச விருதுகளை குவித்து வருகிற இந்த படம், ஜூலை 8-ம் தேதி வெளியாகிறது.
நாவலாசிரியர் ஒருவர் பார்வையற்ற பெண்ணைச் சந்திக்கிறார். அதையடுத்து தனது அடுத்த நாவலுக்கு அந்த பெண்ணின் தனிப்பட்ட கதையைப் பயன்படுத்த முயற்சிக்கிறார். இறுதியில் அவர் ஒரு விஷயத்தை வெளிப்படுத்துகிறார். அது மிகமிக பரபரப்பானதாக இருக்கிறது. இதுதான் ‘ஒற்று’ படத்தின் கதைச்சுருக்கம்.
பரபரப்பும் விறுவிறுப்புமான கதையம்சத்தைக் கொண்டிருந்தாலும் இது ஓரு குடும்பப் படமாகவே உருவாகியுள்ளதாம்!
இயக்குநரிடம் படத்தின் தலைப்புக்கான அர்த்தத்தைக் கேட்டபோது, ”ஒற்றுக்கு உளவு, ஒன்றாக இருத்தல் ஆகிய இரண்டு பொருள்கள் உண்டு. அந்த இரண்டு அர்த்தங்களும் படத்தின் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை” என்றார்.
படம் குறித்த கூடுதல் தகவல்கள்… இந்த படம் கோவிட் லாக்டவுனின் போது படமாக்கப்பட்டது. இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் இந்தியப் பின்னணியில் படமாக்கியுள்ளனர்.இயக்குநர் மதிவாணன் தனது முந்தைய படங்களைப் போலவே இப்படத்திலும் புதிய நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் பார்வையற்ற பெண் கேரக்டரில் அறிமுகமாகியுள்ள மஹாஸ்ரீயின் நடிப்பு கதையோட்டத்திற்கு உயிரூட்டுவதாக, பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது!
அவருடைய முந்தைய படங்களில் நடித்திருந்த இந்திரா இந்த படத்தில் பத்திரிகையாளராக நடித்துள்ளார். தினேஷ், மண்டேஸ் ரமேஷ், டான் சிவகுமார், உமா மகேஸ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1990களில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்த எஸ்.பி.வெங்கடேஷ் பின்னணி இசை அமைத்துள்ளார். சுரேஷ் அர்ஸ் படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மக்கள் தொடர்பாளராக வெங்கட் பணிபுரிகிறார்.
‘ஒற்று’ இந்தியா, சிங்கப்பூர், கம்போடியா, பிரான்ஸ் மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த கதைக்கான விருதுகளை வென்றுள்ளது.