ரஞ்சித் நடிப்பில் வெங்கட் ஜனா இயக்கியுள்ள ‘இறுதி முயற்சி’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 
நடிகர் ரஞ்சித் பேசியபோது, ”நான் சினிமாவில் நல்ல நடிகராக வேண்டும் என்று தான் வருகை தந்தேன். சினிமாவில் நுழைந்து வெற்றி பெற்றால் வீடு வாங்கிடலாம்… கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கலாம்.. என்று நினைத்து சினிமாவுக்கு வரவில்லை. நல்ல சினிமாவிற்காக தான் என்னுடைய கவனம் செல்லும். இதற்காகத்தான் நான் நிறைய சினிமாக்களில் நடிப்பதில்லை. இருந்தாலும் தினமும் இரண்டு சினிமாவை பார்ப்பேன். கதைகளை கேட்பேன். சினிமாவை.. நிலாவை ரசிப்பது போல் இதயத்தில் வைத்து ரசித்துக் கொண்டிருப்பேன். அதனால் எனக்கு சினிமா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.
இந்தத் தருணத்தில் தான் இயக்குநர் வெங்கட் ஜனா என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார். முதலில் இதற்கு தயக்கம் தெரிவித்தேன். அதன் பிறகு இந்தக் கதையில் நான் ஏன் நடிக்க வேண்டும்? என கேட்டேன்.
சினிமாவை நேசித்தால் தான் சினிமாவில் ஜெயிக்க முடியும். சினிமா என்பது ஏனைய தொழிலை போல் அல்ல. இந்தத் தொழிலை சுவாசித்தால் தான் இந்த தொழிலில் இருக்க முடியும். அதனை தொடர்ந்து இன்றைய சினிமா பிசினஸ் குறித்து அவரிடம் விவரித்தேன். அதற்குப் பிறகு அவர் இந்த கதையை திரைக்கதையாக எழுதி என்னிடம் வாசிக்குமாறு சொன்னார். அந்த கதையை படித்ததும் பிடித்துப் போனது. ஏனெனில் அந்த கதையின் வாழ்வியல் என்னை உலுக்கியது.
இந்த படைப்பில் இன்னும் சற்று கூடுதலாக உழைத்திருக்க வேண்டுமோ…! என்ற எண்ணம் இப்போதும் ஏற்படுகிறது. ஏனெனில் கதையின் நாயகனான ரவிச்சந்திரன் கதாபாத்திரம் அவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருந்தது.
இந்தப் படத்தில் கமர்சியல் அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும் கதைக்கு தேவையான உண்மைத் தன்மையை திரைக்கதையில் நம்பக தன்மையுடன் இயக்குநர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. எங்கும் போரடிக்கவில்லை. ஆனால் இந்த படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறுமா..? என்றால்.. என்னால் உறுதி கூற இயலாது. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால்… ரசிகர்களுக்கு பிடித்திருந்தால்… இந்தப் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்.
விநியோகஸ்தர்களில் பல வகையினர் உள்ளனர். ஒரு டீக்கடை வெற்றி பெற்றால் அதே பெயரில் மற்றொரு இடத்தில் கிளையைத் திறந்து வியாபாரம் செய்வார்கள். அந்த வகையில் இந்தப் படத்தை அஜய் ஃபிலிம் ஃபேக்டரி அஜய் பார்த்து, ரசித்து தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். அவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடித்த சக நடிகை மேகாலீ உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.
என்னுடைய 30 ஆண்டுகால திரையுலக பயணத்தில் ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறேன் என்ற திருப்தி இந்த படத்தில் நடித்ததின் மூலம் எனக்கு கிடைத்தது. இதனை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பலரும் படத்தின் தலைப்பு குறித்து தங்களது விமர்சனத்தையும், கவலையையும் தெரிவித்தனர். ஆனால் இந்த படத்தின் கதைக்கு இறுதி முயற்சி தான் பொருத்தமான தலைப்பு. இந்த படம் பார்த்த பிறகு ரசிகர்களுக்கு இது தெரியவரும்” என்றார்.
இயக்குநர் வெங்கட் ஜனா பேசியபோது, ”இந்த கதைக்கு என்னுடைய நண்பரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவம் தான் உந்துவிசை. அதைத் தொடர்ந்து நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் தொழிலதிபர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தியை வாசித்தவுடன்.. என்னால் இயல்பாக கடந்து செல்ல முடியவில்லை. தொழிலதிபரான அவர் எப்படி இறந்திருப்பார்? இறப்பதற்கு முன் அவர் எந்த அளவிற்கு உணர்ச்சி வசப்பட்டிருப்பார்..? என பல கோணங்களில் எனக்குள் கேள்வி எழுந்தது. இவர்களை என்னுடைய படைப்பின் மூலம் ஏன் சிரஞ்சீவியாக்க கூடாது என்றும்… அதன் மூலம் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை சொல்ல முடியும் என்பதற்காகவும் இந்த படைப்பை உருவாக்கினேன்.
இந்தப் படத்திற்காக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள் என பலரும் தங்களது முழுமையான பங்களிப்பை வழங்கினார்கள். இதற்காக அவர்களுக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கதையில் ஒரு ஆத்மா இருக்கிறது. அதுதான் இப்படத்தின் நடித்த அனைவரையும் சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறது.
இந்தப் படத்தை செய்தியின் அடிப்படையில் எடுத்தால் அது டாக்குமென்டரி ஆகவே ஆகிவிடும். அதற்குள் சுவாரசியத்தை சேர்க்க வேண்டும் என்றால்… சைக்கலாஜிக்கல் திரில்லர் அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை தீர்மானித்தேன். முழு திரைக்கதையும் எழுதிய பிறகு ரஞ்சித்தை சந்தித்தேன். முதலில் மறுப்பு தெரிவித்த ரஞ்சித்.. சிறிய தயக்கத்திற்கு பிறகு முழு கதையையும் கேட்டார். அதன் பிறகு நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தை பார்த்த பிறகு ரஞ்சித்தை எவ்வளவு தவற விட்டிருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். அவருடைய திரை உலக பயணத்தில் இந்த திரைப்படம் மைல்கல் படைப்பாக இருக்கும்” என்றார்.
பாடலாசிரியர் மாசூக் ரஹ்மான், நடிகை மேகாலீ உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.
படம் பற்றி:-
இந்த படத்தில் ரஞ்சித்துடன், மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், மோனிகா, நீலேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வரும் அக்டோபர் 10-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சூரிய காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார். வடிவேல் – விமல் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை தாமு கவனித்திருக்கிறார். தற்கொலை குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி எமோஷனல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரித்திருக்கிறார். அஜய் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் அஜய் வழங்குகிறார்.


