இளம் வயது நபர்கள் மத்தியில் இதய ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், சென்னையின் பிரபல மருத்துவமனையான பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் ‘இதய திரைப்பட திருவிழா‘வை நடத்துகிறது.
லயோலா கல்லூரியின் காட்சி தொடர்பியல் (விஸ்காம்) துறையின் ஒத்துழைப்போடு நடைபெறும் இந்த திரைப்பட திருவிழாவை, இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று (27.9. 2022 / செவ்வாய்) தொடங்கி வைத்தார்.
அதன்பின் பேசிய யுவன் சங்கர் ராஜா, “சிந்தனையைத் தூண்டிவிடுகின்ற, சிறப்பான குறும்படங்களின் மூலம் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக வளர்ந்து வரும் திரைப்படைப்பாளிகளின் படைப்புகளைப் பார்க்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன். உங்களது முழு திறனையும், ஆற்றலையும், அறிவையும் சிறப்பாக வெளிப்படுத்துமாறு ஒவ்வொருவரையும் ஊக்குவிக்க நான் விரும்புகிறேன். ‘இளம் இதயங்களை காப்போம்’ என்ற பரப்புரை திட்டத்தை உருவாக்கியதற்காக பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் லயோலா கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறைக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இளவயதினர் மத்தியில் இதயநோய் பாதிப்பு அச்சுறுத்தும் விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இளவயதிலேயே இதயநோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட வேண்டும். சமூக விழிப்புணர்விற்கான இந்த சிறப்பான செயல்திட்டத்தை நிஜத்தில் செயல்படுத்த உதவியிருக்கிற அனைவருக்கும் எனது நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
‘பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ்’ இயக்குனர் டாக்டர். பிரசாந்த் கிருஷ்ணா பேசுகையில், உலக இதய தின அனுசரிப்பை குறிக்கும் வகையில் இளம் இதயங்களை காப்போம் என்ற பொதுமக்களுக்கான விழிப்புணர்வுத் திட்டத்தை தொடங்கினோம். சமீப ஆண்டுகளில் உயிரிழப்பிற்கான முதன்மை காரணமாக இதயநோய் உருவெடுத்திருக்கிறது. எனவே, இதயநோய் பாதிப்பு நிகழ்வை குறைப்பதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கவும் மற்றும் செயல் நடவடிக்கைக்கான அறைகூவல் விடுப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தவும் லயோலா கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறையுடன் இந்த ஒத்துழைப்பை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
ஒரு காலத்தில், ‘முதியோரின் நோய்’ என்று கருதப்பட்ட மாரடைப்பு இன்று இளையோர் மத்தியில் மிகப்பொதுவான நோயாக காணப்படுகின்றன. வாழ்க்கைமுறை, விருப்பத்தேர்வுகள், அதிகரித்திருக்கும் மனஅழுத்த அளவுகள், போதுமான உறக்கமின்மை, ஊட்டச்சத்துள்ள உணவை குறைவாக உட்கொள்வது மற்றும் போதுமான உடற்பயிற்சியின்மை ஆகியவை இளவயது நபர்கள் மத்தியிலும் மாரடைப்பு அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. நம் நாட்டின் எதிர்கால சிற்பிகளான இளையோர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஆரம்ப நிலையிலேயே இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படுவது அவசியம். அதற்கான முயற்சியே எங்களின் முன்னெடுப்பு” என்றார்.
இன்றைய நிகழ்வில் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், மற்றும் திரைப்பட எடிட்டர் ஆர்.கே. செல்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதய திரைப்பட விழாவில் குறும்படப் போட்டிகள், பரிசுகள்…
இதய ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் ஒருமாத காலம் நடைபெறும் பரப்புரை திட்டமானது செப்டம்பர் 10-ம் தேதியன்று தொடங்கப்பட்டது. உலக இதய தின அனுசரிப்பு நாளன்று நிறைவு பெறும்படி, இச்செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்வமுள்ள திரைப்பட படைப்பாளிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்பதற்கேற்ப குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
60 கல்லூரிகளிலிருந்து 100-க்கும் அதிகமான குறும்பட படைப்புகள் பெறப்பட்டிருக்கின்றன. இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை நடுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு பிரிவினராலும் வழங்கப்படும் வாக்குகளின் அடிப்படையில் இப்போட்டியின் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் சாதனையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். முதல் இடத்திற்கு ரூ. 100,000/-, இரண்டாவது இடத்திற்கு ரூ.50,000/- மற்றும் மூன்றாவது இடத்திற்கு ரூ.25,000/- பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.