ராபர் சினிமா விமர்சனம்

ஹீரோ இல்லாமல் ஹீரோயிஸம் தெறிக்கிற படம்.

உடம்பு விரும்பும் மேட்டருக்கு தேவையான மீட்டருக்காக செயின் அறுப்பில் ஈடுபடும் இளைஞன் ஒருவன், அதிலேயே ஊறிப்போய் ஆயிரம் சவரனை பதுக்கி வைக்கிற அளவுக்கு வளர்கிறான்; கொலைகாரனாகவும் புரமோட் ஆகிறான்.

செய்கிற பாவம் சும்மா விடுமா? அதெல்லாம் அவனைத் துரத்த, சமாளித்தானா சடலமாக சரிந்தானா என்பது ராபரின் ஸ்கிரீன் பிளே.

செயின் அறுப்பில் ஈடுபடும்போது டெரராக செயல்படும் மெட்ரோ சத்யா, ஐடி பணியாளனாக ஹேண்ட்சம் லுக்கில் வலம் வந்து தோற்றத்திலும் நடிப்பிலும் வெரைட்டி காட்டியிருக்கிறார். ‘நீ யாரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கோ, அதுக்கு முன்னாடி நான் ஒரு வாட்டி பண்ணிக்கிறேன்’ என்கிற ரேஞ்சில், பல முறை உடலால் உறவாடிய பெண்ணிடம் ரெக்வெஸ்ட் வைப்பதெல்லாம் வேற லெவல் ‘வெறி’த்தனம்.

வழிப்பறியில் ஈடுபட்டு நகைகளைப் பறிப்பவர்களுக்கு பாஸாக களமாடுகிற டேனியல் ஆனி போப்பின் மிதமான வில்லத்தனத்திற்கு பாஸ் மார்க் போடலாம்.

மகளின் இறப்புக்கு காரணமானவனை பழி வாங்கத் துடிக்கும் தந்தையாக ஜெயபிரகாஷ், அவருக்கு கை கொடுக்கும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக பாண்டியன்… இருவரும் சேர்ந்து நடத்தும் அன்டர்கிரவுன்ட் ஆபரேஷன் இன்னும் கொஞ்சம் அதிரடியாக இருந்திருக்கலாம்.

கொடூரனுக்கு மம்மியாக வரும் தீபா சங்கர், அம்மிக் குளவியைத் தூக்கி ஆவேசமாவது கிளைமாக்ஸின் பரபரப்புத் தீயில் பெட்ரோல் ஊற்றியது போலிருக்கிறது.

இதெல்லாம்தான் நடந்தது, இப்படியெல்லாம்தான் நடந்தது என சத்யாவைப் பற்றி படம் முழுக்க எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் வாய்ஸ் ஓவர், ஒரு கட்டத்துக்கு மேல் தேவையில்லாத ஆணி. வாய்ஸ் கொடுத்திருக்கிற சென்றாயனின் நடிப்புப் பங்களிப்பு வழக்கமான பாணி.

என் எஸ் உதயகுமாரின் கேமரா கோணங்கள் வளைத்துச் சுருட்டியிருக்கும் சென்னை வேளச்சேரிக்கு அப்பாலுள்ள மொபசல் ஏரியா சாலைகளின் நீள அகலங்கள் படத்துக்கு பிரமாண்ட முலாம் பூசியிருக்கிறது.

காட்சிகளின் ஓட்டத்திற்கு படபடப்பையும் பதற்றத்தையும் கூட்டுகிற பணியை தன் பின்னணி இசை மூலம் செய்திருக்கிறார் ஜோகன் சிவனேஷ். பாடல்கள், நகைகளை அறுத்துக் கொண்டு ஓடும் திருடனைப் போல் வேகவேகமாக ஓடி மறைகிறது.

சென்னை உள்ளிட்ட மெட்ரோ சிட்டிகளில் அன்றைக்கும் இன்றைக்கும் நடக்கும் செயின் பறிப்புச் சம்பவங்களின் ஜெராக்ஸாக, பாராட்டும்படியாக கதைக்களத்தை வடிவமைத்திருக்கிற ‘மெட்ரோ’ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்,

அந்த கதைக்களத்துக்கு தன் இயக்கத்தால் உயிரோட்டம் தந்திருக்கிற எம் எஸ் பாண்டி,

சமூக அவலங்களின் ஒரு பகுதியைத் தோலுரித்துக் காட்டும் படைப்பைத் தேர்ந்தெடுத்து தயாரித்த பத்திரிகையாளர் கவிதா என படக்குழுவினர் அனைவருக்கும் தனித்தனியாக தரலாம் பாராட்டுப் பூங்கொத்து!

ராபர் _ எடுத்துச் சொன்ன கருத்தில் வின்னர்; ரசிகனைக் கவரும் போட்டியில் ரன்னர்!

-சு.கணேஷ்குமார்

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here