மஞ்சுமல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், எம்புரான், தொடரும்… 100 கோடி, 200 கோடி என வசூலில் சாதனை எட்டிய டப்பிங் டைரக்டர் ஆர் பி பாலா பணியாற்றிய படங்கள்!

மொழிமாற்றுப் படங்களின் வசனகர்த்தாவாக பணிபுரிந்து வருகிற ஆர்.பி.பாலா டப்பிங் டைரக்டர் என அழைக்கப்படுகிறார். அவர் பணியாற்றிய படங்கள் அனைத்தும் 100 கோடி ரூபாய் 200 கோடி ரூபாய் என்று வசூல் செய்து அவருக்கு பெருமை தேடித் தந்துள்ளன.

அந்த பெருமிதத்தோடு மனம் திறக்கிறார்…

”புலி முருகன் படம் தமிழில் வந்தபோது தமிழுக்காக நமது பண்பாடு தெரியும்படி சனங்களில் மாற்றங்களைச் செய்தேன். அதேபோல் அனைத்து படங்களுக்கும் இது ஒரு மொழி மாற்றுப் படம் என்று தடைகளை உணராத வகையில் புரிதலில் இடையூறு இல்லாத வகையில் இடங்களையும் வசனங்களையும் அமைத்திருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. புலி முருகனுக்குப் பின் என்று பிரித்துக் கூறும் அளவுக்குப் பெரிய திருப்பு முனையாக அமைந்த அந்தப் படம், மலையாளத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்தது.அதன் பிறகு வந்த லூசிபர் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதேபோல மரைக்காயர், மஞ்சுமல் பாய்ஸ், ஆடு ஜீவிதம் மூன்று படங்களுமே 100 கோடி வசூல் செய்தன. பிறகு வந்த எம்புரான் 250 கோடி வசூல் செய்தது.இப்போது வந்துள்ள தொடரும் மலையாளத்தில் மட்டுமே அதுவும் ஐந்து நாட்களில் நூறு கோடி வசூல் செய்திருக்கிறது, இந்த வசூல் தொடர்கிறது. பிற இடங்களில் 175 கோடி போய்க் கொண்டிருக்கிறது.இப்படி நான் பணியாற்றிய படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்போது தமிழில் வெளியாகியிருக்கும் ‘தொடரும் ‘படத்தில் கதை நிகழும் இடங்களை கொடைக்கானல், பரமக்குடி என்று மாற்றி நான் தமிழகத்தோடு இணைத்திருந்தேன்.

அதனால் படம் பார்க்கும் அனைவரும் தமது படமாக தமிழில் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. அதனால்தான் படத்தைப் பார்த்த மக்கள் இந்தப் படம் மலையாளத்தில் எடுத்து தமிழில் டப் செய்தார்களா அல்லது தமிழிலேயே எடுத்தார்களா என்று வியக்கும் அளவிற்கு படம் அமைந்துள்ளது.

‘ஆர்பி பாலாவின் தமிழ் வசனங்கள் அந்தக் கதாபாத்திரங்கள் பேசும் பொழுது மிகவும் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன’ என்று ஊடகத்துறையினர் பாராட்டியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி. விருதுகளை விட சிறந்தது மக்களின் பாராட்டுதான். அது எனக்குக் கிடைத்து வருகிறது.

எம்புரான் படத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் நான்கு மொழிகளிலும் டப்பிங் பணியாற்றி இருப்பது ஒரு பெருமையான அனுபவம். இது ஒரு பிரமாண்டமான படம்.

டப்பிங் டைரக்டர் ஆக எனது பணி குரல்கள் பதிவு,வசனங்கள், ஒலிக்கலவை போன்றவற்றையும் கவனிக்க வேண்டியிருக்கும்.அவற்றில் எந்த வகையிலும் மொழி, கலாச்சார இடையூறு இல்லாத வகையில் மொழிமாற்று என்கிற தடை இல்லாத வகையில் படத்தைக் கொண்டு செல்வது கவனத்தில் கொள்ள வேண்டிய எனது முக்கியமான வேலையாக இருக்கும்.சினிமா ஊடகத்தை புரிந்து கொண்டிருப்பதால் அதைச் சரியாகச் செய்து கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்.
அதனால்தான் என் பணியைப் பலரும் பாராட்டுகிறார்கள் இந்த வாய்ப்புகள் அளித்த அனைவருக்கும் நன்றி.

என் வாழ்க்கையையே திசை மாற்றிய மோகன்லால் சாருக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here