இந்த படத்தின் கதாநாயகனும் கதாநாயகியும் கமல் – ஸ்ரீதேவி, ரஜினி – ஸ்ரீபிரியா போல் இருக்கிறார்கள்! -‘ரெட் லேபில்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு  

நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடிக்க கே .ஆர். வினோத் இயக்கியுள்ள ‘ரெட் லேபில்’ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் கே. ஆர். வினோத் “நாங்கள் வளர்ந்து வரும் படக் குழுவினர். நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எனவே தான் பலரும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தனர். இது ஒரு தனி மனித முயற்சியல்ல. அனைவரும் சேர்ந்து உழைத்ததால்தான் படம் நன்றாக வந்துள்ளது. உதயகுமார் சார் ஒரு வழிகாட்டி போல் இருந்து தயாரிப்பாளர் இயக்குநரை நம்பி அனைத்தையும் செய்தார். அவரிடம் நான் ஒரு உதவி இயக்குநரைப் போல கற்றுக் கொண்டேன். கதாநாயகன் படப்பிடிப்பில் முதல் இரண்டு நாள் சுமாராக நடித்தார். மூன்றாவது நாளிலிருந்து முழு நடிகராக அவர் நடிக்கத் தொடங்கிவிட்டார்.அப்படி நடித்து இப்போது அனைவராலும் பாராட்டப்படும் நிலைக்கு வந்து விட்டார். படம் நன்றாக வந்துள்ளது. இது நாகரிகமான படம். நிச்சயமாக அனைவரையும் திருப்திப் படுத்தும்” என்றார்.

படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான லெனின் பேசும்போது, “பொன் பார்த்திபன் என்னிடம் கூறிய இரண்டு கதைகளில் என் பட்ஜெட்டுக்கேற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன். அவரிடம் ஏராளமான கதைகள் இருக்கின்றன. இந்தப் படத்தில் நாலைந்து கதாநாயகிகள் நடித்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள். இந்த கதாநாயகியின் படம் வந்து கொண்டே இருந்தது .இவரை நாங்கள் நிராகரித்து விட்டோம் .மீண்டும் மீண்டும் அவரது போட்டோவைக் காட்டினார்கள். முகத்தை கழுவி விட்டு செல்ஃபி எடுத்து ஒரு போட்டோ அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தோம். அவரும் அப்படியே அனுப்பி இருந்தார் .அவர் தேர்வாகி விட்டார்.
உண்மையைச் சொன்னால் இந்த படத்தின் தலைப்பே அவர் சொன்னதுதான். இதற்கு முன்பு நாங்கள் ஒரு சாதாரண தலைப்பையே வைத்திருந்தோம்.

இயக்குநருக்கும் எனக்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவர் மிகவும் பொறுமைசாலியாக இருந்து அனைத்தையும் சமாளித்தார். எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்று பொறுமை காட்டினார் .அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .சொன்னது போல் படத்தை எடுத்து முடித்து விட்டார் .
எனக்கு எல்லாமே நேரத்திற்கு நடக்க வேண்டும். நானும் எனது தரப்பில் சம்பளத்தை ஒழுங்காகக் கொடுத்து விடுவேன். யாருக்கும் பாக்கி வைப்பதில்லை.பணம் இருந்தால் படப்பிடிப்பு நடத்துவோம்.பணம் இல்லாவிட்டால் படப்பிடிப்பை ரத்து செய்து விடுவோம்.யாருக்கும் பாக்கி வைக்க மாட்டோம்.

ஆர்.வி.உதயகுமார் சார் பற்றி இங்கே சொல்ல வேண்டும். அவர் இந்தப் படத்தில் நடிப்பது என்று முடிவாவதற்கு முன்பாகவே அவர் எங்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே எனக்காக அவர் தயாரிப்பாளர் சங்கத்திலும் பெப்சியிலும் பேசி பல சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். அந்த உதவியை மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயமாக பார்க்கும் படியாக இருக்கும். திருப்தி தரும் படமாக இருக்கும் என்பதற்கு நான் 100% உத்திரவாதம் தருகிறேன்” என்றார்.

கதாநாயகி அஸ்மின் பேசும்போது, “நான் கேரளாவில் இருந்து வந்து இருக்கிறேன். அங்கே எத்தனையோ மேடைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இது என் முதல் மேடையாக உணர்கிறேன். பதற்றமாக இருக்கிறது. கதாநாயகியாக எனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் நல்ல நண்பராகவும் என்னை ஊக்கப்படுத்துபவராகவும் இருந்தார். அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இந்தக் கதாநாயகன் லெனினைப் பார்த்தால் புதியவர் போலத் தெரியவில்லை. அனுபவசாலி போலத் தெரிகிறார். கதாநாயகி அஸ்மினுக்கும் அவருக்கும் உள்ள ஜோடிப் பொருத்தம் நன்றாக உள்ளது. கமல் – ஸ்ரீதேவி, ரஜினி – ஸ்ரீபிரியா போல இந்த லெனின் – அஸ்வின் ஜோடியும் நன்றாக இருக்கிறது. இந்த ஜோடி தொடர்ந்து நடிக்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசும்போது, “முதலில் இந்தத் தலைப்பை நான் பாராட்டுகிறேன். நல்ல அழகான தலைப்பு. தயாரிப்பாளர் லெனினை முதலில் பாராட்டுகிறேன். நான் கோயம்புத்தூர் காரனாக இருந்தாலும் எந்த கோயம்புத்தூர்க்காரரும் எனக்கு வாய்ப்பு கொடுத்ததில்லை. இவர் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

என்னிடம் வந்ததுமே முதலில் படம் தயாரிக்கிறாயா? யோசனை செய் ,எச்சரிக்கையாக இரு என்றுதான் நான் சொன்னேன். முதலில் அவர் நடித்த ‘உன் கூடவே’ என்கிற பாடல் ஆல்பத்தைப் பார்த்தேன். அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு கொடுத்த உந்துதலில் தயாரிப்பாளராக வந்து விட்டார். கதாநாயகன் ஆகிவிட்டார். ஒத்த மனநிலை கொண்டவர்களுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். எனவே இந்த படப்பிடிப்பு இனிமையாக இருந்தது.

ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாகச் சிறந்த கதைகள் வருவதில்லை. பாசமலர், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது படங்களைப் பார்த்த விட்டு வந்தால் படங்களைப் பற்றி திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள். படம் நன்றாக இருந்தால் குடும்பத்தோடு வண்டி கட்டிக்கொண்டு தியேட்டருக்குச் சென்ற காலம் அது. இப்போது அப்படி இல்லை.அனைவரும் பார்க்கும் படி படம் எடுக்கிறார்களா? ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள். மற்றவர்கள் படம் பார்க்க வேண்டாமா? திரையரங்குகளில் ஏன் ஆள் வரவில்லை என்று கேட்கிறார்கள். ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள். அனைவரும் பார்க்கும் படியான வாழ்வியல் கதைகளை வைத்து படமாக எடுக்க வேண்டும். அப்படி இன்று படங்கள் வருவதில்லை. புதியவர்கள் முயற்சி செய்ய வேண்டும். இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகர் கெவின், நடிகை அனுஷா, நடிகர் கார்மேகம், நடன இயக்குநர் விஜி சதீஷ், கதாசிரியர் பொன். பார்த்திபன், இசையமைப்பாளர் கைலாஷ் மேனன், உடை அலங்கார நிபுணர் திரிபுரசுந்தரி, கலை இயக்குநர் பிரகதீஸ்வரன், இயக்குநர்கள் வசந்தபாலன், மித்ரன் ஜவஹர், இயக்குநர் அனுமோகன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here