இயக்குநர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கவிருக்கிறது! அதையடுத்து வேல்ஸ் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கை:-
சினிமா என்பது பல கலைத்துறைகளின் சங்கமம். தொடர்பில்லாத துறைகளில் இருந்து பல திறமையானவர்களை ஒன்றிணைத்து அடையாளம் காட்டும் தொடர்பு சாதனம். இப்படிப்பட்ட துறைக்கு பிரமாண்டத்தின் மூத்தப் பிள்ளையாக இருக்கும் மக்கள் போற்றும் ஒரு கலைஞனைத்தான் இன்று நாம் போற்றுகிறோம்.
கும்பகோணத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார். அவரது கல்லூரி நாட்களில், அவர் எழுதத் தொடங்கினார் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பலவற்றை நிகழ்த்தினார், இவரின் திறமை இவரை தனித்து அடையாளப் படுத்தி பல கைதட்டளையும் விருதுகளையும் கொண்டுவந்து குவித்தது. இது இவருக்கு நடிப்பு ஆர்வத்தைத் தூண்டியது. பின்னர், அவர் ஒரு அமெச்சூர் நாடகக் குழுவில் சேர்ந்தார், அங்கு அவர் ஐந்து ஆண்டுகள் நன்கு பயிற்சிப் பெற்றார். இவரின் திறமை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது, அவர் அவரை உதவியாளராக அழைத்துக்கொண்டார்.
1986 – 87 களுக்குப் பிறகு, இவர்தம் சொந்த முயற்சியில் சிறு சிறு விளம்பரப் படங்களை எடுத்து திரை இயக்குநரானார். 1993 இல் வெளியான ஜென்டில்மேன், என்ற திரைப்படம் இயக்குனர் ஷங்கர் என்ற ஜாம்பவானை தமிழ்த் திரையுலகத்திற்கு வெளிச்சம் போட்டது. தொடர்ந்து வெளி வந்த காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன்… என இவர் எடுத்த பல திரைப்படங்கள் வணிகரீதியாக மாபெரும் வெற்றிபெற்றன.
இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளையதளபதி விஜய் என இன்றைய திரை உலகின் சூப்பர்ஸ்டார்களை கொண்டு வெற்றிமேல் வெற்றி சூடியவர். அவரது படங்கள் பிலிம்பேர் விருதுகள், மாநில விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் என அனைத்துத் தரப்புகளிலும் விருதுகளை வென்றுள்ளன.
இன்றைய இளைய தலைமுறையினருக்கும் நாளைய படைப்பாளர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கிவரும் தமிழ் சினிமாவின் பிரமாண்டப் பெருமிதம் எப்போதும் தமது இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி பறக்க நினைக்கும் கலைஞன் தயாரிப்பாளராகயும் பரிமாணங்களைப் பெற்ற இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறது.
சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு பல்கலை வளாகத்தில் உள்ள வேலன் அரங்கில் நடைபெற உள்ளது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11 வது பட்டமளிப்பு விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை & இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அனுராக் தாகூர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.