கள்ளத் தொடர்பு, அதீத பாலியல் உறவுக்கு ஆசைப்படுகிற படு வித்தியாசமான உடல்நலக் கோளாறு என ஏடாகூடமான சங்கதிகளால் கட்டமைக்கப்பட்ட படைப்பு!
அந்த ஊரில் திருமண உறவைத் தாண்டிய தவறான உறவை தொடர்பவர்களின் பெயர்கள் ஒரு சுவரில் எழுதி வைக்கப்படுகிறது. அதை தொடர்ந்து அவர்கள் மரணமடைகிறார்கள். ஊரில் பதற்றம் தொற்றுகிறது. நடக்கும் மரணங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் தரப்பு விசாரணையில் இறங்குகிறது. அதன்மூலம் என்னவெல்லாம் தெரியவருகிறது என்பதே கதையோட்டம். பார்த்துக் கொண்டிருப்பது ஆன்மிகப் படமா, பேய்ப் படமா என யோசிக்க வைக்கும் திரைக்கதை படத்தின் தனித்துவம். இயக்கம் அஜய் பூபதி
அப்பாவால் கைவிடப்பட்டு பாட்டியின் அரவணைப்பில் வாழ்கிற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட,
தான் படிக்கும் கல்லூரி ஆசிரியரின் ஆசைக்கு தன் இளமையை விருந்தாக்கி, அவருடன் திருமண வாழ்க்கையில் இணைய முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்த,
அதன்பின் பல ஆண்களுடன் உறவுகொண்டு நடத்தை கெட்டவள் என ஊரில் பெயரைக் கெடுத்துக் கொள்கிற,
சிலர் செய்த சூழ்ச்சியால் ஊர் மக்களால் அவமானப்படுத்தப்பட்டு கல்லால் அடிபட்டு ரத்தக் காயங்களுடன் ஊரைவிட்டு துரத்தப்படுகிற கனமான கதாபாத்திரத்தில் பாயல் ராஜ்புத்.
அந்த கனமான கதாபாத்திரத்துக்கு உயிரூட்டும் விதத்தில் அப்பாவிடம் கோபம், ஆசிரியரின் விருப்பத்துக்கு உடன்படு(க்)கிற காம உணர்ச்சி, ஏமாற்றத்தில் ஏற்படும் விரக்தி என நேர்த்தியான நடிப்புப் பங்களிப்பை வழங்கியிருக்கிறார். அந்தரங்க சம்பவங்கள் அரங்கேறும்போது அதன் உண்மைத் தன்மைக்கேற்ப உடலின் வளைவு நெளிவுகள் தாராளமாய் வெளிப்படும் விதத்தில் செய்திருக்கும் அவரது ஆடை குறைப்பு சிலருக்கு கிளுகிளுப்பூட்டுவதை தவிர்க்கவே முடியாது!
ஆசிரியராக வந்து பாயலின் இளமையை நயவஞ்சமாக வேட்டையாடுகிற அஜ்மல் தொடங்கி, பாயலின் பாட்டியாக வருகிற ஸ்ரீலேகா, கதையின் மிகமிக முக்கியமான பாத்திரத்தில் டாக்டராக வருகிறவர், ஜமீன்தாராக வருகிறவர், கதையோடு இணைந்து பயணித்து காமெடி ஏரியாவுக்கு தீனி போட்டிருக்கிற அஜய் கோஷ் என இன்னபிற கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர்கள் கதையோட்டத்தை பலமாக்கியிருக்கிறார்கள்!
சப் இன்ஸ்பெக்டராக வருகிற நந்திதா ஸ்வேதாவின் சற்றே அலட்டலான நடிப்பு கவனிக்க வைக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சியில் கதையின் திருப்பத்துக்கு மிகமிக பொருத்தமாக இருக்கிறது ஜமீன்தாரின் மனைவியாக வருகிறவரின் துடிப்பான நடிப்பு!
காட்சிகளுக்கேற்றபடி மட்டுமில்லாமல், கதாபாத்திரங்களின் வசனங்களுக்கேற்பவும் பின்னணி இசையால் படத்துக்கு உயிரோட்டம் தந்திருக்கிறார் ‘காந்தாரா’ பட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்.
கொஞ்சம் அப்படியும் இப்படியுமான, குடும்பத்தோடு பார்க்க முடியாத எய்ட்டீன் பிளஸ் படமென்றாலும் கதையம்சத்திலும் உருவாக்கத்திலும் படத்தின் தரம் அதிகம்!