சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில், அனல் அரசு இயக்கத்தில் கடந்த ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் சூர்யா விஜய் சேதுபதி பேசியபோது, “இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி. இந்த படத்தை பார்த்து பலரும் பாராட்டினர். அனல் அரசு அவர்கள் என்னை தேர்வு செய்யவில்லை என்றால் இந்த இடத்தில் நான் இருந்திருக்க மாட்டேன். தயாரிப்பாளர் இந்த படம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்தார். படத்தில் நடித்த அனைவரும் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் சாம் சிஎஸ் பக்கபலமாக இருந்தனர். அனைவரும் நன்றி” என்றார்.
இயக்குநர் அனல் அரசு பேசியபோது, “நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்த பிறகு இயக்குனராக முடிவு செய்தேன். இதற்கு உறுதுணையாக இருந்த ராஜலட்சுமி அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்கள் இந்த படத்திற்கு முக்கியமான தூணாக இருந்துள்ளார். சாம் சிஎஸ் இசை படத்திற்கு பக்க பலமாக இருந்தது. இந்த படத்தின் கதையைக் கேட்டவுடன் அவர் பணியாற்ற ஒப்புக்கொண்டார், அவருக்கு மிகப்பெரிய நன்றி.
எடிட்டர் ரூபன் அவர்களுக்கு நன்றி. இந்தப் படம் டெக்னிக்கலாக ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். நான் சாவின் விளிம்பு வரை சென்று பணியாற்றி உள்ளேன். 32 வருடமாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். இன்று ஒரு படத்தை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளேன்.
இந்த படத்தின் வெற்றி எனக்கு மட்டும் பயன் அளிக்காது. இந்த படத்தில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் பயனளிக்கும். அது ஒட்டுமொத்த சினிமாவிற்கும் நல்லது. இதை ஒரு சூர்யா விஜய் சேதுபதி படமாக மட்டும் பார்க்காமல், 28 இளைஞர்களின் வாழ்க்கையாக பாருங்கள். இந்த கதை சூர்யாவிற்கு எழுதியது இல்லை. ஆனால் சூர்யா இந்த படத்தில் சிறப்பாக நடித்து இருந்தார். அவருடைய கடின உழைப்பை கூடவே இருந்து பார்த்து உள்ளேன். இந்த வயதில் அதிக உழைப்பை கொடுத்துள்ளார். சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
காக்கா முட்டை விக்னேஷ், “பீனிக்ஸ் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு அனல் அரசு அவர்களுக்கு நன்றி. மேலும் சூர்யா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர்கள் மற்றும் படத்தில் நடித்த அனைவரும் எங்களுக்கு அதிகம் உதவினார்கள். பத்திரிகையாளர்கள் இந்த படத்திற்கு நல்ல ஆதரவு கொடுத்தீர்கள். காக்கா முட்டை படத்திலிருந்து எனக்கு ஆதரவு அளித்து வருகிறீர்கள். நன்றி” என்றார்.
நடிகர் மூணாறு ரமேஷ், “இயக்குநர் அனல் அரசு இந்தியாவில் நம்பர் ஒன் பைட் மாஸ்டர். இந்த படத்தின் திரைக்கதையை சிறப்பாக கையாண்டு இருந்தார். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்திருந்தார். சூர்யா விஜய் சேதுபதி நடிப்பு மற்றும் சண்டை பயிற்சிக்காக மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். அவரின் எதிர்காலத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் ஆடுகளம் முருகதாஸ், நடிகர் திலீபன், நடிகர் பழனி, நடிகர் ரோகித், தயாரிப்பாளர் ராஜலட்சுமி அனல் அரசு உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

