அருண் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள படம் ‘சினம்.’ இந்த படத்தினை மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Movie Slides Pvt. Ltd) சார்பில் அருண் விஜயின் தந்தை விஜயகுமார் தயாரித்துள்ளார். இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியுள்ளார். அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், ஆர்.என்.ஆர். மனோகர், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா 4.9. 2022 அன்று சென்னையில் சிறப்பாக நடந்தது.
படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் விஜய் ஆண்டனி, பிரசன்னா, சாந்தனு, இயக்குநர்கள் ஆர். பார்த்திபன், ஹரி, மகிழ் திருமேனி, ஈரம் அறிவழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகரும், இந்த படத்தின் தயாரிப்பாளருமான அருண் விஜயின் தந்தை விஜயகுமார், “படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது சொந்த படமாக நினைத்து பணியாற்றியுள்ளனர். மக்கள் அனைவரும் பார்க்க கூடிய படமாக உருவாக்கியுள்ளோம். இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
‘சினம்’ படத்தின் இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன், ”இந்த படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்த படத்தின் கதையை கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே செய்தார். விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன்பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது.
கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்படக் கூடிய படமாக இருக்கும்” என்றார்.
நடிகர் அருண் விஜய் “இந்த படம் தியேட்டரில் வர வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். இது பார்வையாளர்களுக்கான படமாக இருக்கும். சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை தொடர்புபடுத்த கூடிய ஒரு கதாபாத்திரமாக இந்த படத்தின் பாரிவெங்கட் கதாபாத்திரம் இருக்கும். எனது முந்தயை படத்திற்கும் இந்த படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். இந்த படத்தில் உணர்வுபூர்வமான பல அம்சங்கள் இருக்கிறது. அதை உருவாக்கிய இயக்குனர் குமரவேலனுக்கு நன்றி. என்னை நம்பி இந்த படத்தை தயாரித்த என் தந்தைக்கு நன்றி” என்றார்.
படத்தின் நாயகி பாலக் லால்வாணி, ”மொழி தெரியாமல் எப்படி தமிழ் படத்தில் நடிக்கிறேன்னு எல்லோரும் கேட்பார்கள். உணர்வுக்கு மொழி கிடையாது. இந்தப்படத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. அதனால் தான் இந்த வாய்ப்பு வந்த போது உடனடியாக ஒப்புக்கொண்டேன். இந்தப்படம் மிக நல்ல படம். தியேட்டரில் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.
இயக்குநர் பார்த்திபன், “அருண் விஜய் வெற்றியைச் சந்திக்க பல காலம் ஆனது. அவர் தனது தனிப்பட்ட உழைப்பினால் மட்டுமே முன்னேறியவர். இந்த படத்தின் இசையமைப்பாளரின் பெயர் சபீரா? சBeerரா? பாடல்கள் அந்தளவுக்கு போதையாக உள்ளது” என்றார்.
படக்குழு:-
கதை-உரையாடல்கள் – ஆர். சரவணன்
பாடல் வரிகள் – மதன் கார்க்கி, ஏக்நாத், பிரியன், தமிழனங்கு
இசை – ஷபீர்
ஒளிப்பதிவு – கோபிநாத்
கலை – மைக்கேல் BFA
எடிட்டர் – ராஜாமுகமது
காஸ்ட்யூம் டிசைனர் – ஆர்த்தி அருண்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D’One