இந்த படம் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும்! – ‘2K லவ்ஸ்டோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுசீந்திரன் உறுதி

வெட்டிங் போட்டோஃகிராஃபி குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம் சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம் ‘2K லவ்ஸ்டோரி.’

இந்த படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் கடந்த வெள்ளியன்று படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், ”வெண்ணிலா கபடி குழு படத்திற்குப் பிறகு முதல் படம் போன்ற உணர்வை இந்தப்படம் தந்துள்ளது, இந்தப்படத்தை என் நெருங்கிய நண்பர்கள் இயக்குநர்களுக்குப் போட்டுக் காட்டினேன்; பார்த்து விட்டு வாழ்த்தியதற்கு நன்றி. இப்படத்திற்கு உறுதுணையாக இருந்த ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கு நன்றி. என் உடன் நின்ற இசையமைப்பாளர் இமானுக்கு நன்றி. புதுமுகமாக அறிமுகமாகும் ஜெகவீருக்கு வாழ்த்துக்கள், துஷ்யந்த் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள், மீனாக்ஷிக்கு வாழ்த்துக்கள், அனைத்து நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கும் விக்னேஷுக்கு நன்றி, இப்படம் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், ”திட்டமிடலில் சுசீந்திரன் சாரை மிஞ்ச முடியாது. ஒரு படத்தை எப்படி மிகக் குறுகிய காலத்தில் முடிக்க முடியும் என்பதை, அவரிடம் கற்றுக் கொள்ளலாம். ஒரு படத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, படத்தின் செலவினங்களை இழுத்து விட்டு, இறுதியில் படத்திலும் ஒன்றும் இல்லாமல், செலவையும் அதிகமாக்கிவிடும் இயக்குநர்கள் இந்த காலத்தில் இருக்கிறார்கள். ஆனால் அதை உடைத்துத் திட்டமிடலில் சாதித்த காட்டுகிறார் சுசீந்திரன். ஒரு பக்கம் இந்த விழா நடந்து கொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் கல்லூரியில் படத்தை விளம்பரம் செய்கிறேன் என்று சொன்னார். அவரின் இந்த ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்தது, ஒரு இயக்குநர் இறங்கி வேலை செய்யும்போது ,எப்போதும் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும், நான் அவர் எது சொன்னாலும் ஓகே சொல்லிவிடுவேன். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும். வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் பிரபு சாலமன் ”இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, இன்றைய சினிமா உலகில் முதலில் பாசிடிவாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்த இயக்குநர் தான். நம் மண்ணின் கதையைச் சொல்ல வேண்டும் என நினைத்து, அதை மிக அழகாக இந்த திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார். அந்த துணிச்சலுக்கு சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன், ”இது எங்கள் முதல்ப்படம். சுசீந்திரன் சார் மீதான நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இது. சொன்னது போல 40நாளில் இப்படத்தையே முடித்து விட்டார். 2கே ஜெனரேஷனை நெகடிவாக காட்டுகிறார்கள் ஆனால் சுசி சார் மிக அருமையாக இதைக் கையாண்டுள்ளார். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்” என்றார்.

இசையமைப்பாளர் இமான், இயக்குநர்கள் திரு, செல்லா அய்யாவு, ராஜேஷ்வர் காளிசாமி, ஹரிஹரன், எஸ் ஆர் பிரபாகரன், அந்தோணி பாக்யராஜ், இயக்குநர் முருகானந்தம், செல்வ சேகரன் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டு படம் குறித்து பேசி படக்குழுவை வாழ்த்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here