தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக நடிகை சிம்ரன், மூன்று தேசிய விருதுகள் பெற்ற பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ரெயின் கோட் வழங்கிச் சிறப்பித்தனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் ராம்குமார், ”இந்த மேடை எனக்கு மிகவும் சிறப்பான மேடை. மனதுக்கு நெருக்கமான மேடை. முதன்முதலில் ‘பார்க்கிங்’ திரைப்படத்தை இங்கே திரையிட்டு பத்திரிகையாளர்கள் முன்பு பாராட்டு பெற்றேன். அதே மேடையில் தற்போது தேசிய விருது பெற்று அந்த மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்கள் முன்பு அங்கீகாரம் பெறும்போது இன்னும் சந்தோஷமாக இருக்கிறது. அன்று நீங்கள் கொடுத்த அங்கீகாரம் தான் இன்று என்னை தேசிய விருதுவரை உயர்த்தி இருக்கிறது. என் முதல் பார்வையாளர்கள் நீங்கள் தான். உங்கள் முன்பு இந்த இடத்தில் வந்து நிற்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார்.
நடிகை சிம்ரன் பேசியபோது, ”30 வருடங்களாக இந்த சினிமாவில் நிலைத்து நிற்க பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம். இன்று ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் நூறாவது நாள். இந்த விழாவை இங்கே உங்களுடன் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு எல்லா விதத்திலும் நீங்கள் ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். அதேபோல் என்னால் முடிந்த ஆதரவுகளையும் நான் எப்போதும் கொடுக்கth தவற மாட்டேன்” என்றார்.
இயக்கிய முதல் படத்திலேயே 3 தேசிய விருதுகளை பெற்றபின் இயக்குநர் ராம்குமார் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் நூறாவது நாளை எட்டியதையடுத்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் சங்கத்தின் செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்புரை வழங்கினார். தலைவர் கவிதா சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த விவரங்களைத் தெரிவித்து, இதுவரையில் சங்கத்திற்கு உதவிய திரைப் பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
சங்க உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டபின் விழா நிறைவடைந்தது.


