நலனுக்கான தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி மலர் 20125 வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் சிறப்பாக நடந்தது.
மாண்புமிகு அமைச்சர் சி.வி.கணேசன் (தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுதுறை), பூச்சி.எஸ்.முருகன் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர், நடிகர் சங்க துணைத்தலைவர்), நா.இளங்கோவன் (அசிஸ்டென்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ், ஆவடி), தேசியவிருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கடலோரக் கவிதைகள் ரேகா, தயாரிப்பாளர் எஸ்.கே.பிக்சர்ஸ் கே.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் சங்கத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து பேசுகையில் ”ஒவ்வொருவரும் குடும்ப உறுப்பினர்களை மதிக்க வேண்டும். போட்டி இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கணும். நிலவில் துணிச்சலாக, முதலில் களம் இறங்கியதால் ஆம்ஸ்ட்ராங் வரலாற்றில் இடம் பிடித்தார். வாழ்க்கையில் முன்னேற துணிச்சல், லட்சியம் வேண்டும். கடுமையான உழைப்பு வேண்டும். உழைப்பவர்களே வெற்றியாளர்களாக மாறுகிறார்கள்” என்றவர் தனது சிறுவயது தீபாவளி அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்தார்.
பூச்சி முருகன் பேசுகையில் ‘‘எப்போதும் சினிமா பத்திரிகையாளர் நலனுக்காக, அவர்கள் உதவிக்காக மட்டுமே தன்னை சங்க தலைவி கவிதா தொடர்பு கொண்டு பேசுவார். தன்னால் முடிந்த உதவிகளை சங்கத்துக்கு செய்வேன்” என்றார். சங்கத்தின் தலைவி வைத்த கோரிக்கைகளுக்கு தகுந்த ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
ஆவடி அசிஸ்டென்ட் கமிஷனர் நா.இளங்கோவன் அடுக்கு மொழியில் அழகாக பேசினார். தனது பணி அனுபவம், மேடை பேச்சு அனுபவம் குறித்து தன்னம்பிக்கையாக பேசினார். செல்போன் பாதிப்பு எப்படி இருக்கிறது என்று விவரித்தார். தீபாவளி குறித்து கருணை, பாசம் என பல விஷயங்களை அழுத்தமாக சொன்னார்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனது சினிமா அனுபவங்களை விவரித்தார். தனது வாழ்க்கையில் பத்திரிகைகள், பத்திரியாளர்கள் தாக்கம் குறித்தும் சொன்னார். மது பழக்கம் கூடாது என்பது குறித்தும், தனது குறித்து நல்ல செய்திகளை வெளியிட்ட தினந்தந்தி முன்னாள் நிருபர் கங்காதரன் நட்பு குறித்தும் அழகாக பேசினார்.
விழாவில் கடலோர கவிதைகள் ரேகா பேசியபோது ‘‘ சினிமாவில் நிறைய படங்களில் நல்ல கேரக்டரில் நடித்துள்ளேன். நம் நினைவுகளை திரும்பி பார்க்க வைப்பது, நாம் நடித்த படங்களின் போட்டோக்களும், அந்த படங்கள் குறித்து பத்திரிகையில் வந்த செய்திகளும் தான். இப்போது யூட்யூப் சோஷியல் மீடியா வந்துவிட்டது. ஆனாலும், ஆனந்தவிகடன், ராணி, குமுதம், தினத்தந்தி, தினமலரில் வந்த செய்திகளை, போட்டோவை மறக்க முடியுமா? அதை பொக்கிஷமாக வைத்து இருக்கிறேன். இந்த தீபாவளியை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார். மேலும் புன்னகைமன்னன் பட நிகழ்வு, அந்த முத்தக்காட்சி குறித்து பல தகவல்களை சொன்னார். அந்த வயது விபரமில்லாத வயது , என் அப்பா வருத்தபடுவார் என்று பயந்தேன் என்றார்.
விழாவில் சங்க தலைவர் எஸ்.கவிதா சினிமா பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் தேவை என்பது குறித்து விழாவில் வேண்டுகோள் விடுத்தார். தீபாவளி மலருக்கு விளம்பர உதவிகள் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். விழா நிகழ்ச்சிகளை விஜய் டிவி புகழ் அமுதவாணன் தொகுத்து வழங்கினார். சங்க செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்புரை ஆற்றினார். விழா நிறைவில் சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு, தீபாவளி பொருட்கள், புத்தாடை அடங்கிய பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.


