டூரிஸ்ட் ஃபேமிலி சினிமா விமர்சனம்

வாழும் மண்ணுக்கும் வசிக்கும் உரிமைக்குமான போராட்டம், சிங்களர்களின் அராஜகம், கன்னிவெடிகளால் நிரம்பியிருக்கும் நிலப்பரப்புகள், விமானத்திலிருந்து சீறிப்பாயும் வெடி குண்டுகள், போருக்கு பின் பரிதாபச் சூழ்நிலையில் சிக்கியிருக்கும் மக்கள் என பார்த்துப் பழகிய வேதனையான காட்சிகள் எதுவுமின்றி, வித்தியாசமான கதையம்சத்தில், காமெடி களேபரங்களோடு உருவாகியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் பற்றிய படம்.

இலங்கையில் வாழ வழியில்லாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட தர்மதாஸ் தன் மனைவியோடும், மகன்கள் இருவரோடும் திருட்டுத்தனமாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறார். உறவினர் ஒருவர் அவர்களுக்கு குடியிருக்க வீடு பார்த்துக் கொடுத்து, போலி ஆதார் கார்டு, வோட்டர்ஸ் ஐடி உள்ளிட்டவற்றை தயார் செய்து கொடுக்கிறார். புதிய இடத்தில் வாழ்க்கையைத் துவங்குகிறது தர்மதாஸின் குடும்பம்.

தர்மதாஸ் அக்கம் பக்கத்திலுள்ள குடும்பங்களுடன் பழகி, தனது மனிதாபிமான செயல்பாடுகளால் அந்த பகுதி மக்களின் அன்பை சம்பாதிக்கிறார். அந்த நேரமாகப் பார்த்து ராமேஸ்வரத்தில் யாரோ வைத்த வெடிகுண்டுக்கு மக்கள் பலியாகி பதற்றம் உருவாகிறது.

குண்டு வைத்தது, தவறான வழியில் தமிழகத்துக்குள் வந்த சேர்ந்த தர்மதாஸின் குடும்பமாக இருக்கலாம் என சந்தேகப்படும் போலீஸ் அவர்களைச் சுற்றி வளைக்க திட்டமிடுகிறார்கள். அதன்பின் நடப்பதெல்லாம் ஆடியன்ஸின் படபடப்பை அதிகரிக்கும் சம்பவங்கள்…

நல்லவராகவே நடித்துப் பழகிய சசிகுமாருக்கு சிறந்த நல்லவராக களமாடும்படியான கதாபாத்திரம். தர்மதாஸாக வருகிற அவர் தன் குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்வதோடு தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மீது அக்கறை செலுத்தி மகான் ரேஞ்சுக்கு உயர்வதை சரியாக தன் நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார்.

சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன். ‘ஐயோ பாவம்’ என்கிற அளவுக்கு ஒட்டிப்போன கன்னங்களுடன் வருகிற அவர, தன் புன்சிரிப்பை எங்கெல்லாம் சிந்த முடியுமோ அங்கெல்லாம் சிந்தியிருக்கிறார். ‘ஆல்தோட்ட பூபதி’ காலத்து எனர்ஜியோடு சில விநாடிகள் நடனமும் ஆடியிருக்கிறார்.

தங்கை சிம்ரனின் குடும்பத்தை கட்டிக் காப்பாற்றும் கடமையை கச்சிதமாகவும், டயலாக் டெலிவரியை கலகலப்பாகவும் செய்திருக்கிறார் யோகிபாபு.

சசிகுமார் _ சிம்ரன் தம்பதியின் மூத்த மகனாக வருகிற மிதுனுக்கு, தந்தை மீதான கடுமையான கோபத்தையும் பாசத்தையும் ஒரே காட்சியில் வெளிப்படுத்தும் வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்தி தனக்கு நன்றாக நடிக்க வரும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

இளைய மகனாக வருகிற கமலேஷ் ஜெகன் செய்கிற துடுக்குத்தனங்கள் இயல்புக்கு மீறியதாக, நடைமுறைக்கு சாத்தியமில்லாததாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.

காவல்துறையிலும் மனித தன்மையுள்ளவர்கள் இருப்பார்கள் என்பதற்கு சாட்சியாக வலம் வருகிறார் ரமேஷ் திலக்.

தன் வீட்டில் குடியிருப்பவர்கள் பேசுகிற இலங்கைத் தமிழை, கேரள மக்கள் பேசும் தமிழ் என நம்புகிற அப்பாவி போலீஸாக பக்ஸ் பகவதி பெருமாள் சில காட்சிகளில் ரிலாஸிக்கு கேரண்டி தருகிறார்.

இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, எம் எஸ் பாஸ்கர் என மற்றவர்களின் பங்களிப்பில் குறையில்லை.

ஷான் ரோல்டனின் இசையில் ஷான் ரோல்டனே படம் முழுக்க பாடிக் கொண்டிருப்பது சலிப்பு தருகிறது. பின்னணி இசை பெரிதாய் எந்த தாக்கத்தையும் தரவில்லை.

அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு நேர்த்தி.

முறைகேடான வழியில் தமிழகத்தில் நுழைந்து, முறைகேடான வழியிலேயே ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று வாழ்கிற அந்த ஃபேமிலிக்கு கடைசி வரை சட்டப்படி எந்த தண்டனையும் கிடைக்காதது நெருடல்.

கதையோட்டத்தில் சிலபல குறைகளும் காட்சிகளில் நாடகத்தனமும் சூழ்ந்திருப்பதை பொறுத்துக்கொண்டு, இந்த படைப்பின் மூலம் ‘உலகில் அகதிகள் என யாருமில்லை’ என்ற கனமான கருத்தை முன்வைத்திருக்கும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை பாராட்டலாம்.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here