கருத்தரிப்பு மையங்களை மையப்படுத்திய கதைக்கருவில் உருவான குழந்தையாக ‘ட்ராமா.’
ஒரு தம்பதி கல்யாணமாகி சில வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் கவலையில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். கருத்தரிப்பு சிகிச்சை மையம் ஒன்று அவர்களின் கவலைக்கு தீர்வு தருகிறது. கூடவே ‘ஆபரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் அவுட்’ என்பதுபோல் ஒரு ஆபத்தை உருவாக்குகிறது.
ஒரு காதல் ஜோடி, பெரும்பாலான தாதலர்களைப் போல் எல்லை மீறுகிறார்கள், அவள் கர்ப்பிணியாகிறாள். விஷயம் தெரிந்து பதறிப்போய் அந்த செய்தியை அவனிடம் சொல்லலாம் என்றால் ஆள் எஸ்கேப். இனி அவன் கிடைக்கமாட்டான் என்கிற சூழ்நிலை. விஷயம் தெரிந்து கொதித்துப் போகிற அவளுடைய பெற்றோர், கருவைக் கலைக்கச்சொல்கிறார்கள்.
ஒல்லியான ஒரு இளைஞன் குண்டான ஒரு ஆசாமியை துணைக்கு வைத்துக் கொண்டு கார்களைக் கடத்தி விற்பதை தொழிலாக செய்து கொண்டிருக்கிறான். அவர்கள் கடத்திய காஸ்ட்லி காரில் ஒரு இளைஞனின் பிணம் இருக்க போலீஸில் சிக்குகிறார்கள்.
கதை இப்படி இப்படி வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு சம்பவங்கள் என கடந்தோட, மூன்று தரப்பும் ஒரு கட்டத்தில் இணைகிறார்கள். அது எப்படி என்பதும், குழந்தையில்லாத தம்பதி சந்திக்கும் ஆபத்து என்ன என்பதும், காணாமல் போன காதலனுக்கு என்னவானது என்பதும், காரிலிருந்த பிணம் யாருடையது என்பதும் திரைக்கதை…
விவேக் பிரசன்னா _ சாந்தினி தமிழரசன் ஜோடி குழந்தையில்லா தம்பதிகளின் ஏக்கத்தை கச்சிதமாக பிரதிபலித்து, நண்பனின் துரோகத்தைச் சந்தித்து மனம் உடைகிற காட்சிகளில் நேர்த்தியான பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.
காதலர்களாக பிரதோஷ் _ பூர்ணிமா ரவி. ஜோடிப் பொருத்தம் அசத்தலாக இருக்க, காதலன் தவறானவன் என்பதை அறிந்து குமுறுகிற பூர்ணிமாவின் கொந்தளிப்பான நடிப்பு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. தவறான தொழில் செய்தாலும் காதலில் உண்மையாக இருப்பதை வெளிப்படுத்துகிற பிரதோஷின் நடிப்பிலிருக்கிறது காட்சிக்கு தேவையான தவிப்பு.
கார் திருடர்களாக வருகிறவர்கள் காமெடி என்கிற பெயரில் அடிக்கிற கூத்துகள் சிரிப்பு தராவிட்டாலும் எரிச்சல் தராமலாவது இருந்திருக்கலாம்.
மகள் யாரையோ காதலித்து கர்ப்பமானதை அறிந்து ஆத்திரமடைகிற அப்பா, அம்மாவாக மாரிமுத்து _ ரமா,
தன் சுயநலத்திற்காக நண்பனை பலிகடாவாக்குகிற கேரக்டரில் ஆனந்த் நாக்,
கருத்தரிப்பு சிகிச்சை என்கிற பெயரில் கேவலமான விஷயத்தை செய்கிற பிரதீப் விஜயன் என இன்னபிற நடிகர் நடிகைகளின் நடிப்பு நிறைவு.
ஆர் எஸ் ராஜ் பிரதாப்பின் பின்னணி இசையும், அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும் கதைக்களத்திற்கு உயிரோட்டம் தந்திருக்கின்றன.
குழந்தையின்மை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், கருத்தரிப்பு சிகிச்சை மையங்களில் இப்படி கூட நடக்கலாம் என மிரள வைக்கும் கதையை யோசித்த இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன், திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்கியிருந்தால் தியேட்டரில் ஆடியன்ஸை திரள வைத்திருக்கலாம்.
-சு.கணேஷ்குமார்