விவசாய பின்னணியில் உருவாகியுள்ள ‘உழவர் மகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் ஆகஸ்ட் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
‘தோனி கபடி குழு’ ‘கட்சிக்காரன் ‘ ஆகிய படங்களை இயக்கிய ப. ஐயப்பன், அவரது முந்தைய படங்களைப் போலவே இதிலும் சமூகக் கருத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் படத்தை இயக்கியுள்ளார்.
கதையின் நாயகனாக கௌஷிக் நடித்துள்ளார். நாயகிகளாக சிம்ரன் ராஜ் மற்றும் வின்சிட்டா ஜார்ஜ் இருவரும் நடித்துள்ளனர். மிரட்டும் வில்லனாக கட்சிக்காரன் படத்தில் நடித்த விஜித் சரவணன் நடித்துள்ளார். யோகிராம், ரஞ்சன் குமார், சிவசேனாதிபதி, குமர வடிவேல் ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தில் இன்று அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்டு இந்த அமைப்பின் மூலம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது விவசாயம். தொழில் உத்திரவாதம் இல்லாத விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயிகள் நாளும் துயரங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். நாள்தோறும் இந்தத் தொழில் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விவசாய நிலங்கள் களவாடப்படுகின்றன. வெவ்வேறு தொழில்களுக்கு இரையாக்கப்படுகின்றன.
உயிர்த்தொழிலான பயிர்த் தொழிலை மீட்க செய்ய என்ன செய்ய வேண்டும்? அது வளர்வதற்கும் மறுமலர்ச்சி காண்பதற்கும் தடைகளாக இருப்பவை எவை போன்றவற்றைப் பற்றியெல்லாம் இந்தப் படம் பேசுகிறது.விவசாய மண், தொழில் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் இந்தக் கதைக்குள் ஒரு காதல் கதையும் உள்ளது. அதனுடன் இணைந்து ஒரு சமூகக் கருத்தை வெளிப்படுத்தி திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களில் படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் நிறைவடைந்துள்ளது.
படத்தை தமிழகம் முழுவதும் ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ் வெளியிடுகிறார்.



