சமுத்திரகனி, பரத் முதன்மைப்பாத்திரங்களில் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில், அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘வீர வணக்கம்.’
படம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய அடக்குமுறை இன்றும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இன்றைய நிலைமையை விட மோசமான முற்காலத்தில் நீதிக்கான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஆளுமைகளைப் போற்றும், அவர்களின் வரலாற்றைப் பேசும் படமாக உருவாகியுள்ள “வீர வணக்கம்” திரைப்படத்தின் டிரெய்லரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்திருமாவளவன் அவர்கள், நேற்று வெளியிட்டார். இந்த டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இன்றைய தமிழகத்தின் ஒரு கிராமத்தில், வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒரு அழகான நட்பு, ஜாதிய மனோபாவத்தால் சிதைக்கப்படுகிறது. அதை தடுக்கும் ஒரு பெரிய மனிதரின் வழியே, தமிழகத்திலும், கேரளத்திலும் உண்மையில் வாழ்ந்து நீதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஆளுமையான பி கிருஷ்ணபிள்ளை அவர்களின் வரலாற்றின் கதையை இப்படம் சொல்கிறது.
தந்தை பெரியாரின் முற்போக்கு சிந்தனையையும், திராவிட சித்தாந்தத்தையும் பேசுவதோடு, தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை அன்பை, அழகாக பேசும் ஒரு படைப்பாக, காதல், சண்டைக்காட்சிகள், சஸ்பென்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ளார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன்.
இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடித்துள்ளார். நடிகர் பரத் இதுவரை ஏற்றிராத, கிராமத்து பெரிய மனிதர் பாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி, ஆதர்ஷ், சித்தாங்கனா, ஐஸ்விகா, அரிஸ்டோ சுரேஷ், சித்திக் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு எம் கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் இசையமைத்துள்ளனர். இப்படத்தில் பழம்பெரும் தமிழ்ப் பின்னணிப் பாடகர் டி எம் சௌந்தர்ராஜன் அவர்களின் மகன் டி எம் எஸ் செல்வகுமார் ஒரு அருமையான பாடல் பாடியுள்ளார்.


