மக்களைப் பாதுகாக்க யாரிடம் சட்டங்களை ஒப்படைத்தார்களோ அவர்கள்தான் இன்று நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்! – ‘வள்ளுவன்’ பட விழாவில் சங்கர் சாரதி ஆவேசம் 

சங்கர் சாரதி இயக்கியுள்ள ‘வள்ளுவன்’ படத்தில் ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகர் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி கதாநாயகியாக நடிக்கிறார்.

மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி, இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை கோமல் சர்மா, நடிகர் விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் சங்கர் சாரதி “கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் / களைகட் டதனொடு நேர்” என்கிற இந்த திருக்குறளை மையப்படுத்தி கமர்சியல் கிரைம் த்ரில்லர் படமாக இதை உருவாக்கியிருக்கிறேன்.

அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள். மக்களைப் பாதுகாக்க யாரிடம் இந்த சட்டங்களை ஒப்படைத்தார்களோ அவர்கள் தான் இன்று நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ? இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வலியையும், வேதனையையும் தான் வள்ளுவன் படமாக உருவாக்கி இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நம் குடும்பத்தில் பலரும் சந்தித்த வலிகளைத் தான் ஸ்கிரிப்ட் ஆக மாற்றி இருக்கிறேன்.

“இந்த கதை நடிகர் பரத்திற்காகவே உருவாக்கப்பட்டது. அவரிடம் சென்று கூறினேன். கதை பிடித்திருந்தாலும் அப்போது அவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தேதி கிடைக்கவில்லை.

இப்போது இந்த படத்தை பாராட்ட அவரே மேடையில் வந்து இருப்பது அமர்ந்திருப்பதை கடவுள் செயல் என்றே நினைக்கிறேன்” என்றார்.

நாயகன் சேத்தன் சீனு “கடந்த 15 வருடங்களாக திரையுலகில் ஒரு முக்கிய இடத்திற்காக போராடி வருகிறேன். இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இதே இடத்தில் தான் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், நாயகன் ஜெயம் ரவி என பல பிரபலங்கள் கலந்து கொண்டு அரங்கமே நிறைந்து இருந்தது. அதன் பிறகு நான் சிவப்பு மனிதன் சக்சஸ் மீட்டை இங்கேதான் கொண்டாடினோம். தற்போது கே.டி குஞ்சுமோனின் ஜென்டில்மேன்-2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கருங்காலி படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அண்ணா வீட்டிலிருந்து, தல அஜித் வீடு வரை எத்தனை கம்பெனிகள் இருக்கின்றனவோ அத்தனையும் ஏறி இறங்கிவிட்டேன். ஆனால் நீங்கள் வெள்ளையாக இருக்கிறீர்கள். தமிழுக்கு செட் ஆக மாட்டீர்கள் என்று சொன்னபோது, எனக்கு மனதுக்குள் பயம் வந்தது. ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கமல்ஹாசன், அஜித் எல்லோரும் வெள்ளை நிறம் தான். இங்கே கலர் என்பது ஒரு பிரச்சனை இல்லை. திறமையை மட்டும் தான் பார்க்க வேண்டும்.

நான் ஜென்டில்மேன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பே இந்த படத்தின் கதையை சங்கர் சாரதி என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டதுமே ஷங்கருக்கு எப்படி ஜென்டில்மேன் படம் ஒரு பிராண்ட் நேம் ஆகியதோ அதேபோல இந்த வள்ளுவன் திரைப்படம் இந்த சங்கர் சாரதிக்கு ஒரு பிராண்ட் ஆகும் என்று கூறினேன். அதன் பிறகு தான் ஜென்டில்மேன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆனேன். அந்த வகையில் யூனிவர்ஸ் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

உயிரைக் கொடுத்து நடித்தோம் என்று சிலர் சொல்வார்கள். கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த படத்தில் நான் நடித்தேன். என்னால் உள்ளே நுழைய முடியாத ஒரு ட்ரம்முக்குள் என்னை அமர வைத்து அதற்குள் புகையையும் போட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட உயிர் போய்விட்டது என்று தான் நினைத்தேன். சிக்மகளூர் தாண்டி ஒரு பாடல் காட்சிக்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றபோது நானும் கதாநாயகி ஆஸ்னா சவேரியும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டோம். பின்னர் தான் தெரிய வந்தது அது புலிகள் அதிகம் உலாவும் இடம் என்று. அப்போதும் உயிர் தப்பித்து வந்தோம். ஒரு சின்ன படமாக ஆரம்பித்து இதை பெரிய படமாக கொடுத்திருக்கிறார்கள்.. நிச்சயம் உங்களை ஏமாற்றாது” என்றார்.

இணை தயாரிப்பாளர் பாலச்சந்தர், இசையமைப்பாளர் அஸ்வத், நடிகர் விஜய் விஷ்வா, தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.வி உதயகுமார், நடிகர் மீசை ராஜேந்திரன், நடிகர் பரத், நடிகர் கராத்தே ராஜா, நடிகர் ராஜசிம்மன், நடிகர் பிரேம்குமார், இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி, இயக்குநர் ராதா பாரதி, நடிகை கோமல் சர்மா, தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன், வள்ளுவன் படத்தின் தயாரிப்பாளர் ஷைல் குமார், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here