ஊரில் எல்லோராலும் அண்ணாச்சி என்றழைக்கப்படுகிற பெரிய தொழிலதிபர்; மக்களிடம் செல்வாக்கு மிக்கவர். அவர் தன்னுடைய திருமண வாழ்க்கையில் இனிமையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், தன் முன்னாள் காதலி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்வதைப் பார்த்து தடுக்கிறார். அந்த காதலிக்காக ஒரு கொலையும் செய்கிறார். அவருடன் சேர்ந்து வாழ்கிறார்.
இப்படி பரபரப்பாக துவங்கும் கதையில், கொலை செய்யப்பட்டவர் அந்த காதலியை போனில் தொடர்புகொண்டு பேசும்போது, அதன்பிறகு சில மர்மமான சம்பவங்கள் நடக்கும்போது விறுவிறுப்பு தொற்றுகிறது.
கொலை செய்தது ஏன்? கொலை செய்யப்பட்டவர் போனில் பேசுவது எப்படி? நடக்கும் மர்மமான சம்பவங்களுக்கு என்ன காரணம்? என்பதையெல்லாம் காண்பித்து கடந்தோடுகிறது மீதிக்கதை. கிளைமாக்ஸில் அப்துல்கலாமின் சிந்தனை வெளிப்பாடு சிறப்பு.
நாயகனாக குகன் சக்கரவர்த்தி. ஏழை எளிய மக்களுக்கு உதவுவது, அநியாயத்தைக் கண்டால் பொங்குவது, ஆக்சன் காட்சிகளில் சீற்றம் காட்டுவது, மனைவி மீதும் காதலி மீதும் அன்பும் அக்கறையும் கொண்டிருப்பது என மாஸ் காட்டியிருக்கிறார். பாஸ் மார்க்குக்கும் சற்று அதிகமாக கொடுக்கலாம் என்கிற அளவுக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், ஒளிப்பதிவு, இசை, கலை, இசை, உடை வடிவமைப்பு, சண்டைப் பயிற்சி என திரைப்பட உருவாக்கத்துக்கான 21 துறை பணிகளை இழுத்துப் போட்டு செய்திருக்கிறார்.
கதாநாயகனின் மனைவியாக, முன்னாள் காதலியாக வருகிறவர்கள் காதல் காட்சிகளுக்கும் பாடல் காட்சிகளுக்கும் தேவையான பங்களிப்பைத் தந்து கதையில் தங்களுக்கு தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இன்னபிற கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் பலர் களமாட பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் உள்ளிட்ட அனுபவ நடிகர்கள் கதையில் கலந்திருக்கிறார்கள்.
தேசத் தலைவர்களையும் அரசியல் பிரபலங்களையும் சினிமா ஹீரோக்களையும் சுட்டிக்காட்டி கருத்து சொல்லும் பாடலும் அதற்கான காட்சியும் கவனம் பெறுகிறது.
திரில்லர் பாணியில் ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு மாஸான திரைக்கதை அமைத்து, எந்த ஜானரில் வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்று கருதும்படி படமாக்கி தன் திரையுலகப் பயணத்தை அதிரடியாக ஆரம்பித்திருக்கிற குகன் சக்கரவர்த்தியாரை வாழ்த்தலாம். ஒட்டுமொத்த படத்தின் தரத்துக்கு 5 / 2.5 என ரேட்டிங் கொடுக்கலாம்!
வங்காள விரிகுடா _ கிணற்றுத் தண்ணீர்!
-சு.கணேஷ்குமார்

