சிலம்பரசன் டி.ஆர். நடித்து வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதையடுத்து, படத்திற்கு விமர்சனங்கள் மூலம் ஆதரவளித்த பத்திரிகையாளர்களுக்கும், படத்தைக் கொண்டாடிவரும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்வில் சிலம்பரசன் டி.ஆர்., ‘‘என் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியானது இது தான் முதல் முறை. எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. படம் இவ்வளவு வசூல் குவிக்கும் என நான் நினைக்கவில்லை. படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சி தந்துள்ளது. என்னை மாற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என நினைத்தேன். முதலில் காதல் கதை தான் செய்வதாக இருந்தது. இந்தக்கதை கேட்டவுடன் இதை செய்யலாம் என்றேன். இப்படம் தந்த கௌதம் மேனனுக்கு நன்றி. இவ்வளவு பெரிய படமாக மாற்றிய ஐசரி சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் ஒல்லியாக மாறி நடித்துள்ளேன். அதனால் சிலரால் என் உடம்பை கேலி செய்ய முடியவில்லை. ஒருவரின் உருவத்தை கேலி செய்யாதீர்கள். எனக்கு பரவாயில்லை. ஆனால் அது பலருக்கு வலியை தரும். இனி அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிப்பேன். வெந்து தணிந்தது காடு பாகம் 2 ரசிகர்கள் இன்னும் ரசிக்கும்படி நல்ல ஆக்சனோடு உருவாகும்” என்றார்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், “இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தது. அதன் மூலம் நிறைய இடங்களுக்கு படம் சென்றது. அதுபோல எதிர்மறையாக வந்த விமர்சனங்களுக்கும் நன்றி. ஒரு திரைப்படம் செய்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். அதற்குள் பல சிக்கல்களும் இருக்கிறது. அதை கடந்து தான் இந்த படம் உருவாகியுள்ளது. எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்க்கு நன்றி. எனக்கு முழு சுதந்திரம் அவர் கொடுத்தார். நான் ஒரு கதை கொண்டு வரும் போது, அதை என்னை நம்பி எப்பொழுதும் ஒத்துகொள்ளும் சிம்புவிற்கு நன்றி. சிம்பு இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபோன்ற ஒரு படத்தை எடுக்க எனக்கு உதவியாக இருந்த சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படத்தின் வெற்றிக்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் பெரும்பங்காற்றினார், அவருடைய மல்லிப்பூ பாடல் இப்போது அனைவரும் பாராட்டிகொண்டு இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், “படம் தமிழ்நாட்டைத் தாண்டி, பல இடங்களில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த திரைப்படத்தை எடுத்ததில் எங்கள் நிறுவனம் பெருமையடைகிறது. நடிகர் சிம்பு இந்த படத்தின் முத்து கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார். படம் முழுவதிலும் அவருடைய நடிப்பு பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இந்த படத்திற்காக அவர் கண்டிப்பாக தேசிய விருது பெறுவார். அதற்கு வேல்ஸ் நிறுவனம் உறுதுணையாக இருக்கும். இந்த படத்திற்காக அவர் கடின உழைப்பை கொடுத்துள்ளார்.
இயக்குனர் கௌதம் அவருடைய பாணியில் இல்லாமல், வேறு ஒரு பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை வெற்றிப் படமாக அவர் மாற்றியுள்ளார். இந்த படத்தின் கூடுதல் சிறப்பு ஏ.ஆர்.ரகுமான் சார் தான். வெந்து தணிந்தது காடு’ இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தயாராகும்” என்றார்.
நடிகர் நீரஜ் மாதவ், “இது எனது முதல் தமிழ் படம். நான் சென்னையில் தான் எனது படிப்பை முடித்தேன். தமிழ் படம் பண்ண வேண்டும் என்ற என் ஆசை இந்த படத்தில் நிறைவேறியுள்ளது. கௌதம் மேனன் சாரின் ரசிகனாக இருந்த எனக்கு, அவருடன் பணிபுரியும் வாய்ப்பு இந்த படத்தின் மூலமாக எனக்கு கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு சிலம்பரசன் அண்ணா ஒரு பேட்டியில் என்னை பாராட்டினார். இன்று அவருடன் நடித்துள்ளது மகிழ்ச்சி. படத்திற்கு நேர்மறையான விமர்சனம் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.