இந்த படம் பார்த்த பின்னர் வாழ்க்கை மேல் ஒரு நம்பிக்கை வரும்! -‘777 சார்லி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு

கிரண்ராஜ் இயக்கத்தில், ரக்‌ஷித் ஷெட்டி நடித்துள்ள படம் ‘777 சார்லி.’ ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ என்ற பன்மொழி திரைப்படத்தில் நடித்த ரக்ஷித், தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸின் சார்பில் 777 சார்லியை தயாரித்துள்ளதோடு தர்மா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘சார்லி’ என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை கதைக்களமே ‘777 சார்லி.’

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 10-ம் தேதி உலகம் முழுதும் வெளியாகிறது.

அதையொட்டி படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவுடன், படத்தில் நடித்த சார்லி நாயும் கலந்துகொண்டது. நிகழ்ச்சி மேடையில் அதற்கும் சேர் போடப்பட்டு அதில் சார்லி சமர்த்தாக அமர்ந்திருந்தது அழகு!

நிகழ்வில் பேசிய சக்தி பிலிம்ஸ் சக்தி வேலன், ”இந்த படத்தில் நடித்த நாய்க்கு சிறந்த விலங்கு நடிகருக்கான விருது வழங்க வேண்டும். இந்த படத்தில் ஹீரோவுக்கும், நாய்க்குமான உறவை எப்படி வெளிக்கொண்டு வந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பிரமிப்பாக இருக்கிறது. குழந்தைகளுக்கும், செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கும் இந்த படம் பிடித்தமான ஒன்றாக இருக்கும்” என்றார்.

நடிகை சங்கீதா ”செல்லப் பிராணியான நாயுடன் பணிபுரியும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. அது எனக்கு கிடைத்து இந்த படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்த படத்தில் பணியாற்றியதில் பெருமைபடுகிறேன்” என்றார்.

இயக்குனர் கிரண்ராஜ், ”நான் செல்லபிராணி விரும்பி, அதனால் தான் இந்த கதையை தேர்ந்தெடுத்தேன். இந்த படத்தில் சவால்கள் நிறைய இருக்கும் என தெரியும். இருந்தாலும் பரவாயில்லை என்று தான் இந்த படத்தை துவங்கினோம். ரக்‌ஷித் ஷெட்டி கதையை கேட்டு, நாம் கண்டிப்பாக இந்த படத்தை செய்வோம் என கூறினார். பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் கதையை உருவாக்கு என ரக்‌ஷித் ஊக்கமளித்தார். நடிகர்கள் ரக்‌ஷித், ராஜ், சங்கீதா என பலரும் 3 வருடங்களை இந்த படத்துக்காக கொடுத்துள்ளனர். கன்னடம் போல் மற்ற மொழிகளிலும் திறமையான ஆட்களிடம் இந்த படத்தை கொடுக்க வேண்டும் என விரும்பினோம். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட முன் வந்தார். அது எங்களுக்கு உத்வேகம் அளித்தது.

டப்பிங் என்று வரும் போது, தமிழ் டப்பிங் குழு மிகத் திறமையானவர்கள். தமிழ் டப்பிங் கலைஞர் சேகர், ஹீரோவை விட சிறப்பாக பேசியுள்ளார். இந்த கதையில் எனக்கு இருந்த தெளிவு, தயாரிப்பாளருக்கும் இருந்தது. இந்த படத்தை நீங்கள் தமிழில் பார்த்தால், இதை டப்பிங் படம் என்று கூறமாட்டீர்கள், நேரடி தமிழ் படம் என்று கூறுவீர்கள். இந்த படத்தில் நடித்த நாய்(சார்லி)யை தேர்ந்தெடுக்க நாங்கள் பல இடங்களில் தேடிகொண்டிருந்தோம். பின்னர் பல நாள் கழித்து இந்த நாயை கண்டுபிடித்தோம்” என்றார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ”கொரோனாவிற்கு பிறகு, இப்போது தான் சினிமா மீண்டு வருகிறது. எனக்கு எப்போதும் கன்னட துறையுடன் எனக்கு தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். ரக்‌ஷித் ஷெட்டி படங்களை முன்பே பார்த்துள்ளேன். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இப்படத்தின் ஒரு 15 நிமிட காட்சியை பார்த்தேன். கேங்ஸ்டர் படமென நினைத்த எனக்கு பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். இந்த படம் ஒரு பெரிய உணர்வை எனக்கு கொடுத்தது. நான் இந்த படத்தை தமிழில் வெளியிட வேண்டும், அதில் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்த படத்தின் வெற்றி மீது மிக உறுதியாய் இருக்கிறேன். இந்த படம் எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுத்த படம். இயக்குனர் கிரண்ராஜ்க்கு இது முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. நாயை நடிக்க வைப்பது கஷ்டமான விஷயம். இறைவி படத்தின் நாய் காட்சி எடுக்கமுடியாமல் தூக்கி விட்டோம். இப்படத்தை எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை. இந்த படத்தின் கதை நிச்சயமாக கூற பட வேண்டிய கதை. இந்த படம் பார்த்த பின்னர் வாழ்க்கை மேல் ஒரு நம்பிக்கை வரும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது” என்றார்.

நடிகர் எஸ் ஜே சூர்யா, ”இயக்குனருடைய ஆர்வம் தான் இந்த படத்தை அவரை எடுக்க வைத்திருக்கிறது. படம் சிறிய பட்ஜெட் என நினைத்தேன், ஆனால் இந்தியாவின் பல இடங்களில் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். இந்த நாய் (சார்லி) ஒரு பெரிய நடிகனாய் நடித்துள்ளான். படத்தின் காட்சிகளில் அது கொடுத்த உணர்வுகள் அபாரமாக உள்ளது. 777 சார்லி ஒரு சிறந்த கதையம்சம் கொண்ட படம். இந்த படம் தமிழுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ரக்‌ஷித் சாருடைய அர்பணிப்பை நான் பாராட்டுகிறேன். தமி” என்றார்.

நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, ”இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமான சிறப்பான படைப்பு . சார்லி 777 என் வாழ்கையில் பல விஷயங்களை மாற்றியது. 1 1/2 வருடத்திற்கு முன்னரே படம் முடிந்துவிட்டது. நான் இந்த படத்தை தயாரித்துள்ளேன், அதனால் எனக்கு படம் ஒடிடிக்கு அனுப்பலாமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. நான் படத்தை முழுமையாக பார்த்தபிறகு, என்ன நடந்தாலும் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன். படத்தை பார்த்த பிறகு கிடைக்கும் அனுபவம் விலைமதிப்பற்றது. எல்லா படங்களும் பான் இந்தியா படங்கள் இல்லை என எங்களுக்கு தெரியும். ஆனால் பான் இந்தியா படமாக மாற முழு அம்சமும் இந்த படத்தில் இருக்கிறது” என்றார்.

777 சார்லியை ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஜி எஸ் குப்தா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை தமிழில் இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜும், தெலுங்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டக்குபதியும், மலையாளத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான பிருத்விராஜ் சுகுமாரனும் வெளியிடுகிறார்கள்.

மைசூர், பெங்களூரு, சிக்மங்களூர், கோவா, பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் 777 சார்லி படமாக்கப்பட்டுள்ளது. ராஜ் பி ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை நோபின் பால் அமைத்துள்ளார். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவையும், படத்தொகுப்பை பிரதீக் ஷெட்டியும் கையாண்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here