அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் ‘அருள்வான்’ திரைப்படத்தினை பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் அருள்நிதி பேசியபோது, ”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லிவிட்டு, ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்றார். பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவுடன் ஐந்து நாள் என்பது பத்து நாளாகவும்… பிறகு 15 நாளாகவும்.. பிறகு 20 நாளாகவும் உயர்ந்தது.
இப்படத்தின் கதையை கேட்ட பிறகு நான் முழு நீள படத்தில் நடித்திருந்தாலும் இது போன்றதொரு கதையை -கதாபாத்திரத்தை- என்னால் ஏற்று நடித்திருக்க முடியுமா? என தெரியாது.
இந்த படத்தில் முத்துவேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
குழந்தைகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து விவரித்திருக்கும்- பேசியிருக்கும் படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் ஆரவ் பேசியபோது ”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்ன பிறகு, இதுபோன்ற கதாபாத்திரம் திரையுலக பயணத்தில் எனக்கு மீண்டும் அமையுமா? என தெரியாது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் அருள்நிதியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் காளி வெங்கட் உடன் இணைந்து நடித்திருக்கிறேன். அந்த காட்சிகளில் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவருடைய நடிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன்” என்றார்.
இயக்குநர் கணேஷ் விநாயகன் பேசியபோது, ” இந்த திரைப்படத்தை சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது. இதில் நிறைய வலிகளும் இருக்கிறது. துன்பங்களும் இருக்கிறது.
‘தகராறு’, ‘வீர சிவாஜி’ ‘ஹைப்பர்’ ( கன்னடம் ) ‘தேன்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறேன். இதை தொடர்ந்து ‘அருள்வான்’ படத்தை இயக்கினேன். அருள்வான் படத்திற்கு முன்னதாக நான் இயக்கிய அனைத்து படத்திற்கும் நான் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து, கதை சொல்லி, வாய்ப்பு கேட்டு தான் இயக்கினேன். ஆனால் இந்த படத்திற்கு மட்டும் தயாரிப்பாளர் என்னை தொடர்பு கொண்டு இயக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் நான் இந்த தயாரிப்பாளரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.
படத்தின் தயாரிப்பாளரான S.G.சரவணன் அடிப்படையில் ஒரு தொழிலதிபர். இருந்தாலும் சினிமா மீது தீராத ஆர்வம் கொண்டவர்.
காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்க வைத்து சிறிய அளவில் தொடங்கப்பட்டது தான் இந்தத் திரைப்படம். ஆனால் தயாரிப்பாளர்தான் இப்படத்தினை பெரிதாக்கினார். இந்த படத்திற்கு பெரிய டெக்னீசியனை பயன்படுத்துங்கள். ஜீ வி பிரகாஷ் குமாரிடம் கேளுங்கள் என்றார். தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் என்னுடைய நிறுவனத்திற்கு 90 பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நிச்சயம் அவர் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரிப்பார். அவர் சினிமாவைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிறுவனம் தொடர்ந்து வெற்றி பெற்று வளர வேண்டும். இப்படத்தை இயக்க வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி.
எடிட்டர் லாரன்ஸ் கிஷோருடன் ‘தேன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து இருக்கிறேன். தேன் படத்தில் அவருக்கு சிறந்த படத் தொகுப்பாளர் என்ற மாநில விருது கிடைத்தது. இந்தப் படத்திலும் அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும்.
இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவும் இல்லாமல். கமர்சியல் ஃபிலிம் ஆகவும் இல்லாமல் இருக்கும். இதனை துல்லியமாக உணர்ந்து முழுமையாக படத்தை தொகுத்திருக்கிறார் லாரன்ஸ் கிஷோர்.
இந்தப் படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.
இந்த கதையை என்னுடைய குழந்தை பருவத்திலிருந்து நண்பராக உள்ள ஒளிப்பதிவாளர் சுகுமாரிடம் சொன்னபோது, அவர்தான் படத்திற்கான படப்பிடிப்பு தளத்தை தேர்வு செய்தார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினர். அனைவருக்கும் நன்றி.
இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றால் அதில் 50 சதவீத உழைப்பு இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் சாருக்கு சேரும்.
இந்தப் படத்திற்கு மூன்று ஹீரோக்கள். ஆரவ் -அருள்நிதி- பேபி கிருத்திகா. இதில் பேபி கிருத்திகாவின் பார்வையில் தான் இப்படத்தின் கதை இருக்கும்.
படப்பிடிப்பு தளம் சாலை வசதி இல்லாத மலை பகுதி என்பதால்.. 18 நாட்கள் அங்கேயே அனைத்து கலைஞர்களும் தங்கினார்கள். சரியான உணவு கிடையாது. நடைபாதை கூட இருக்காது. இரவு நேரத்தில் விலங்குகள் வரக்கூடிய அபாயம்.. இவ்வளவு இருந்தும் பேபி கிருத்திகா அர்ப்பணிப்புடன் நடித்தார். அதனால் இந்தப் படத்தில் பேபி கிருத்திகாவிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
ரம்யா பாண்டியன் – காளி வெங்கட் – வி டிவி கணேஷ் ஜான் விஜய் சரவணன் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.
நடிகர் ஆரவ்விடம் கதை சொல்லும் முன் இந்தக் கதையில் மாவட்ட கலெக்டர் மற்றும் ஒரு மாணவி என இரண்டு முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறது. உங்களுக்கு சரியாக வருமா? என கேட்டுவிட்டு தான் கதையை சொல்லத் தொடங்கினேன். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, ‘கதை எனக்குப் பிடித்திருக்கிறது’ என்றார். இந்தக் கதையை நாம் சொல்லாமல் வேறு யார் சொல்வார்? இது தனிப்பட்ட விசயம் இல்ல. சமூகம் சார்ந்த விசயம். அதனால் நான் நடிக்கிறேன்’ என முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்.
அவருடைய லைஃப் ஸ்டைல் என்ன? என்று எனக்குத் தெரியாது. ஆனால் 18 நாட்கள் அந்த மலைப்பகுதியில் டென்ட் அடித்து எங்களுடன் தங்கி முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.
இப்படத்தின் கதையின் முற்பகுதியில் இந்த மண்ணுக்கும், மக்களுக்குமான உரிமைகளுக்காக போராடும் போராளியாக ஆரவ் இருப்பார். படத்தில் இரண்டாம் பகுதியில் இந்த சமூகத்திற்காக போராடும் மனிதராக அருள்நிதி நடித்திருக்கிறார். இந்தத் தருணத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படத்தில் நடித்ததற்காக நடிகர் ஆரவ்விற்கு நன்றி.
நடிகர் அருள் நிதியுடன் எனக்கு 14 ஆண்டு கால நட்பு இருக்கிறது. அவருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. எளிமையானவர். அன்பானவர். எல்லோரிடத்திலும் இயல்பாக பழகக்கூடியவர். இவர் வெற்றி பெற்றவர் இவர் தோல்வி அடைந்தவர் என்ற பாரபட்சம் இல்லாமல் பழகக் கூடியவர். அவருக்கு கதை பிடித்திருந்தால் இணைந்து பணியாற்றுவார். இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். கதையைக் கேட்டு விட்டு இதை நாம் அவசியம் சொல்ல வேண்டிய படம். நான் நடிக்கிறேன் என்றார். அவருக்கும் நன்றி.
நான் இதற்கு முன் இயக்கிய ‘தேன்’ திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தான் வெளியிட்டது. இந்தப் படத்தையும் நிறைவு செய்த பிறகு அவருக்கு திரையிட்டோம். அவருக்கும் படம் பிடித்திருந்தது. இந்தப் படத்தையும் நான் வெளியிடுகிறேன் என்று சொன்னார். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

